ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 20 - 22

சத்துணவு சாப்பிடும் குழந்தைக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். பரிமாறுகிறார்.

 எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!

M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.



கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் ரி்க் ஷா போட்டியில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆருக்கு ஆரத்தி.

அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.

இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.

இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.
சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் அரசு சார்பில் நடந்த திருமண விழாவில் மக்களோடு அமர்ந்து சாப்பிடுகிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.

‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.
மனைவி ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக் ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.

எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.

அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள். இன்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வயிறு கள் எம்.ஜி.ஆரை தினமும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

அசைவ உணவுகளை எம்.ஜி.ஆர். விரும்பி சாப்பிடுவார். இறால் குழம்பு மிகவும் இஷ்டம். சாப்பாட்டில் தினமும் கட்டாயம் ஏதாவது கீரை இருக்க வேண்டும். இனிப்பு வகைகளில் பாஸந்தி அவருக்கு பிடிக்கும். முந்திரி பகோடா அவரது ‘ஃபேவரைட்’. இதை எல்லாம் சாப்பிட்டாலும் தினமும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவார். கேட்டால், ‘‘உடல் உஷ்ணத்தை இது தணிக்கும் என்பதோடு, நான் பழசை மறக்காமல் இருக்க’’ என்று அடக்கமாக பதிலளிப்பார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
 அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, மனைவி ஜானகி அம்மையார் மற்றும் பழனி பெரியசாமியுடன் கண்ணாடி, தொப்பி இல்லாமல் அபூர்வ தோற்றத்தில் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 21 - பகட்டுக்கு மயங்காதவர்!

M.G.R. மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்து பிறகு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் அவரது உயர்ந்த குணங்களையும் பண்புகளையும் அறிந்து, அவரது அன்பால் ஈர்க்கப்பட்டோர் ஏராளம். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் தொழிலதிபர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி.

பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்புக் காக 1967-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற பழனி ஜி. பெரியசாமி அங்கேயே தங்கியிருந்தார். எம்.ஜி.ஆர். முதல்முறையாக 1974-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அப்போது, மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பல்கலைக்கழகத்தில் வணிகக் கல்லூரியில் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியராக பழனி பெரியசாமி பணியாற்றி வந்தார் . எம்.ஜி.ஆர். மீது ஈர்ப்பு இல்லாததாலும் பொருளாதார ஆராய்ச்சி பணிகளில் தீவிரமாக இருந்ததாலும் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரை அவர் சந்திக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டார். பின்னர், ஒருமுறை எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். இந்தமுறை, தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் அமெரிக்க அரசின் விருந்தினராக எம்.ஜி.ஆர். சென்றார்.

அந்த சமயத்தில் வாஷிங்டன், மேரிலேண்ட், வர்ஜீனியா ஆகிய 3 மாகாணங்கள் ஒருங்கிணைந்த தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தார் பழனி பெரியசாமி. அவரை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை வர வேற்று அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


தமிழ்நாடு ஃபவுண்டேஷன் மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பழனி ஜி.பெரியசாமி.

அதற்கு பழனி பெரியசாமி சம்மதித்தார் என்றாலும், அப்போதும் கூட எம்.ஜி.ஆர். மீது அவருக்கு பெரிய அளவில் அபிப்ராயம் இல்லை. ‘எம்.ஜி.ஆர். ஒரு நடிகர், மக்களின் அபிமானத்தை யும் செல்வாக்கையும் பெற்று முதல்வரானவர்’ என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்தது.

அமெரிக்கா வந்திறங்கிய எம்.ஜி.ஆரை தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் பழனி பெரியசாமி வரவேற் றார். அமெரிக்க அரசு சார்பில் எம்.ஜி.ஆரை அழைத்துச் செல்ல ஒரு அதிகாரி அனுப்பப் பட்டிருந்தார். அவர் ஒரு காரும் கொண்டு வந்திருந் தார். அது கொஞ்சம் சிறிய கார். ஆனால், அதற்கு முன்பே, எம்.ஜி.ஆர். தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அவருக்காக பெரிய, சொகுசு கார் ஒன்றை பழனி பெரியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் எம்.ஜி.ஆரிடம், ‘‘உங்களுக்காக பெரிய, சொகுசு கார் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும்’’ என்றார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் இந்தியாவின் ஒரு மாநில முதல்வர். அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன். நான் அவர்களது விருந்தினர். என்னை வரவேற்று உபசரிக்க ஒரு அதிகாரியையும் காரையும் அனுப்பியுள்ளனர். அதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கே மரியாதைதான் முக்கியமே தவிர கார் பெரியதா? சிறியதா? வசதி இருக்கிறதா? என்பது முக்கியம் அல்ல. நான் அமெரிக்க அரசு அனுப்பிய காரில் ஓட்டலுக்கு வருகிறேன். நீங்கள் உங்கள் காரில் வாருங்கள். ஓட்டலில் சந்திப்போம்’’ என்று கூறி அமெரிக்க அரசின் காரில் எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

இதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆர். மீதான மதிப்பை பழனி பெரியசாமியிடம் உருவாக்கியது. எம்.ஜி.ஆர். சாதாரண நடிகரோ, வழக்கமான அர சியல்வாதியோ அல்ல; பண்பும் குணநலன்களும் நிரம்பியவர்; பகட்டுக்கு மயங்காதவர் என்பதை புரிந்து கொண்டார் பழனி பெரியசாமி.

எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மையாருடன் பழனி ஜி.பெரியசாமி குடும்பத்தினர்.


பின்னர், அமெரிக்காவில் எம்.ஜி.ஆரின் நிகழ்ச்சிகளை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். வெளியிடங்களுக்கு சென்று திரும்பும் எம்.ஜி.ஆர்., ஓட்டல் அறைக்கு வந்தவுடன் தலை யில் உள்ள தொப்பியை கழற்றி ஸ்டைலாக கட்டில் மீது வீசுவது, சினிமாவைப் போலவே தனியாக இருக்கும்போதும் சுறுசுறுப்பாக கட்டில் மீது ‘ஜம்ப்' செய்து ஏறி அமருவது போன்றவற்றைப் பார்த்து அவரது நல்ல குணங்களுக்கு மட்டுமின்றி, ஸ்டைலான நடவடிக்கைகளுக்கும் பழனி பெரியசாமி ரசிகராகிவிட்டார்.

பால்டிமோரில் எம்.ஜி.ஆர். தங்கியிருந்த போது, பழனி பெரியசாமியிடம் ‘‘ரயில் பயணம் செய்ய விரும்புகிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங் கள்’’ என்று கூறியுள்ளார். அதன்படி, பால்டிமோரில் இருந்து நியூயார்க் நகருக்கு ரயிலில் செல்ல ஏற்பாடு செய்தார் பழனி பெரியசாமி. காரில் புறப்பட்டு வந்து, ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் நேரத்தில், ஒரு பெண் எம்.ஜி.ஆரை நோக்கி குழந்தையுடன் வேகமாக வந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். நின்று விட்டார்.

அந்தப் பெண் எம்.ஜி.ஆரை வணங்கியபடி, ‘‘உங்களைப் பார்ப்பதற்காக ரிச்மண்ட் என்ற இடத்தில் இருந்து மூன்றரை மணி நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் ரயிலில் செல் வதை அறிந்து வேகமாக வந்தேன். பார்த்து விட்டேன்’’ என்று கண்களில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அவரை ஆசுவாசப்படுத்தி அன்பாக பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குழந்தையை கொஞ்சியதுடன் அந்தப் பெண்ணின் விருப்பப்படி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அவரது முகவரியை வாங்கி புகைப்படத்தை அந்த பெண் ணுக்கு அனுப்பிவிடுமாறு புகைப்பட நிபுணரிடம் கூறி, பெண்ணையும் வாழ்த்தி அனுப்பினார்.
அமெரிக்காவில் உள்ள ரயில் நிலையத்தில் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரை பார்த்து பேசி அவரது அன்பில் திளைத்த பிரமிப்பு நீங்காமல் விடைபெற்றுச் சென்றார் அந்தப் பெண். அதற்குள் நியூயார்க் நகருக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டிய ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது.

‘‘நீங்கள் அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசியதால் ரயிலைத் தவறவிட்டு விட்டோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார் பழனி பெரியசாமி.

அவரைப் பார்த்து ‘‘அடுத்த ரயில் உண்டா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்க, ‘‘உண்டு. இன்னும் சிறிது நேரத்தில் வரும்’’ என்று பழனி பெரியசாமி கூறினார்.

எம்.ஜி.ஆர். சிரித்தபடியே, ‘‘ரயில் வரும்; போகும். அந்த அம்மா என்னைப் பார்க்க வெகு தூரத்திலேருந்து குழந்தையுடன் தனியாக மூன்றரை மணி நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அவரை புறக்கணித்து விட்டு நான் ரயில் ஏறியிருந்தால் அந்த அம்மாவுக்கு ஏமாற்றமாகிவிடும். இப்ப பாருங்க, அவர் முகத்தில் எத்தனை சந்தோஷம். அமெரிக்கா வந்தும் என்னால் ஒருவரை சந்தோஷப்படுத்த முடிந்தது எவ்வளவு பெரிய விஷயம்..’’

அவர் பேசிக் கொண்டே செல்ல, பழனி பெரியசாமியின் மனதில் இமயமாய் உயர்ந்து நின்றார் எம்.ஜி.ஆர்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அறிவும் ஆற்றலும் தமிழகத்துக்கு பயன்படவும், இங்கே உள்ள திறமையான தமிழர்கள் அமெரிக்காவில் வாய்ப்புகளை பெறவும் தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஆஃப் யு.எஸ்.ஏ. என்ற அமைப்பை பழனி ஜி.பெரியசாமி தொடங்கினார். அதற்கான அறக்கட்டளைக்கு சென்னை டெய்லர்ஸ் ரோடில் 4 கிரவுண்டு நிலத்தை தனது சொந்த பணத்தில் எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்தார். அதன் இன்றைய மதிப்பு ரூ.30 கோடி.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
1970-ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70-ல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

எம்ஜிஆர் 100 | 22 - மதியூகத்தின் மறுபெயர்!


M.G.R. படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் தன் மனதில் எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர் அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல; அவரது ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் புத்தர் கோயில் காட்சி.

கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.

அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.

அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.
‘மீனவ நண்பன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., லதா.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர். புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கும் முன்பே, ஆர்வ மிகுதியால் முதன் முத லாக மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தாமரைப் பூ உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். மேலும் சில இடங்களிலும் தாமரைப் பூ கொடி ஏற்றப்பட் டது. ஒரு சில இடங்களில் கொடிகளை மாற்றுக் கட்சியினர் கிழிப்பதாகவும் கொடிக்கம்பங்களை வெட்டுவதாகவும் செய்திகள் வெளியாயின.

பின்னர், அதிமுக கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தவுடன் இதுபற்றி அவரிடம் கேட்கப் பட்டது. ‘‘எங்கள் புதிய கட்சியின் கொடியை யாரும் இனிமேல் கிழிக்க மாட்டார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவர் அவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறியதற்கான காரணம் கட்சிக் கொடி அறிமுகமானபோதுதான் எல்லாருக்கும் தெரிந்தது. அதிமுக கொடியில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் யோசனைப்படி அந்தக் கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மீனவ நண்பன்’படத்தில்

‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’

பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்

‘தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’

என்ற வரிகள் இடம்பெறும்.

அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் தரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச் சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.

ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன் னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’

மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேல் சபை உறுப்பினராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார். பின்னர், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் ஆனார் அங்கமுத்து. அந்தப் பதவியில் அவரது பணிகளை பாராட்டி ஓராண்டே நிர்ணயிக்கப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை மூன்று ஆண்டுகளாக நீட்டித்தார் எம்.ஜி.ஆர்.

 - தொடரும்...
படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல