அந்திசாயும் நேரம். அநேகருக்கு அலுவலகத்தின் பரபரப்பு முடிந்து வீட்டில் தொலைக்காட்சியின் முன்பாக அக்கடா என்று அமரும் நேரம். ஆனால் அதுவே சில பாவப்பட்ட ஜென்மங்கள் தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் நேரமுங்கூட. கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், கையில் தொலைபேசியுடன் இருள் கவிலும் நேரத்தில் விரைந்துவரும் முச்சக்கர வண்டியிலோ காரிலோ ஏறி மாயமாகும் பெண்களை அநேகர் பார்த்திருக்கக் கூடும்.
நகரின் இருண்ட பகுதிகளில், பார்ப்பவரின் கவனத்தை ஏதோவொரு வகையில் திருப்பக் கூடிய வகையில் நடமாடும் இவர்களின் வாழ்க்கையும் மிகவும் இருண்டது. வலிகளும் வேதனைகளும் நிறைந்தவை.
இலங்கையில் தற்போது சுமார் 40,000 விலை மாதுக்கள் இருப்பதாக அண்மையில் சுகாதாரக் கல்விப் பணியகத்தின் ஊடகப் பணிப்பாளர் சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார். நாட்டின் ஒருசில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் பிரகாரமே இந்த எண்ணிக்கை தெரியவந்து வெளியிடப்பட்டதாகவும், இக்கணக்கெடுப்புகள் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இவ்வெண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதுவும் இந்தப் புள்ளி விபரத்தில் முழுநேர விலைமாதுக்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், பகுதி நேரமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவதாசிமார்
அவரது கூற்றுப்படி, எச். ஐ. வீ. எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் தொற்றக்கூடிய ஆபத்தான நிலையை இவர்களில் அநேகர் எதிர்கொண்டிருக்கிறார்களாம்.
ஓரிரு நாடுகளைத் தவிர உலகின் ஏனைய நாடுகளிலும் விபசாரம் சட்ட விரோதமானதாகவே கருதப்படுகின்றது. எமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
பாலியல் ரீதியான நோய்கள் தொற்றும் அபாயம், தேவையற்ற கர்ப்பம், பாலியல்வல்லுறவு, பொலிஸாரின் கெடுபிடிகள், இவையெல்லாவற்றுக்கும் மேலாக சமூகம் வழங்கும் ‘வேசி’ எனும் பட்டம் இத்தனை அபாயங்களும் கஷ்டங்களும், வக்கிரங்களும் நிறைந்த இத்தொழிலை பெண்கள் ஏன் தேர்ந்தெடுக்கின்றார்கள்?
அறிவதற்காக எமக்குக் கிடைத்த சில தொலைபேசி இலக்கங்களை அழுத்தினோம். ஒரு எண்ணைக் சுழற்றி பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து பேசுவதாகக் கூறிய போது, ‘எங்களைப் பற்றி அறிந்து கொண்டு நீங்கள் எழுதியதெல்லாம்போதும் எங்களை விட்டு விடுங்கள்’ என்று முகத்தில் அறைந்தாற் போல மறுமுனையில் இருந்து பதில் வந்தது. விடாமல் முயற்சித்தோம்.
நாம் பேசியதைச் செவிமடுத்து, எங்களுடன் பேச ஒப்புக் கொண்டார் கண்டியைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய ஒரு பெண்.
‘எனது பெற்றோருக்கு நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாமல் தவமிருந்து பெற்ற பிள்ளை நான். எனக்குப் பிறகும் இன்னொரு பிள்ளை பிறந்தது. அதுவும் பெண்தான். எங்களைத் தவமிருந்து பெற்றார்களே தவிர எங்களை உருப்படியாக வளர்ப்பதற்கான பண வசதி என் பெற்றோர்களிடம் இருக்கவில்லை. 15 வயதில் வேலை தேடிக் கொழும்புக்கு வந்தேன். வேலை தேடியலைந்தேன். எங்குமே எனக்கு வேலை கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது ஒருநாள் பஸ் தரிப்பிடத்தில் பெண்மணியொருவர் எனக்கு அறிமுகமானார். அவரிடம் என் கஷ்டத்தைக் கூறினேன். அவர் எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். ஆபத்பாந்தவியாகக் காட்சியளித்த அவரைக் கைக்கூப்பி வணங்கி அவருடன் போனேன். அவர் என்னை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே என் வயதையொத்த இன்னும் பல பெண்கள் இருந்தார்கள்.
சில மணி நேரத்தில் இரண்டு ஆண்கள் அங்கு வந்தார்கள். ஒருவர் என்னைக் காட்டி இவர் வேண்டுமெனக் கேட்க, என்னை அழைத்து வந்த பெண்ணும் அவரிடம் இரகசியமாக ஏதோ கூறினார். என்னை அழைத்து செல்லுமாறு கூறியதாக அறிந்தேன். அந்த ஆண் என்னை ஹோட்டலொன்றுக்கு அழைத்து சென்ற போதுதான் என் நிலைமை எனக்குப் புரிப்பட ஆரம்பித்தது. என்னால் தப்பியோட முடியவில்லை. அதன்பின் நானும் விலை மாதானேன். ஒருநாளைக்கு 6, 7 வாடிக்கையாளர்களை நான் திருப்திப்படுத்த வேண்டும். அவர்கள் 5,000 ரூபா 6,000 ரூபா என்று கொடுத்தாலும், அதில் எனக்குக் கிடைப்பதெல்லாம் 350 ரூபாய் மட்டில்தான்.
எனது செலவு போக மீதிப் பணத்தை குடும்பத்தினருக்கே அனுப்பி வருகின்றேன். நான் இங்கே விலை மாதாக இருப்பது என் குடும்பதாருக்குத் தெரியாது.
ஒரு முறை நான் ஊருக்குப் போன போது, என் தங்கை என்னிடம் அக்கா கொழும்பு மிகவும் நாகரீகமான இடமாமே! ஆண்களும் பெண்களும் மிகவும் தாராளமாகப் பழகுவார்களாமே! இதெல்லாம் உண்மையா? என்று கேட்டாள். விலை மாதாக நான் தினம் படும் வேதனையைவிட அந்தக் கேள்விதான் இன்றும் என் மனதில் முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கிறது’ என்றார் அப்பெண்.
பொதுவாகவே பாலியல் தொழிலில் ஈடுபடும் எந்தப் பெண்ணைக் கேட்டாலும் அவர்கள் தான் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்பதை விவரிக்கக் கூறும் காரணங்கள் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
குடும்பத்தின் பொறுப்பைத் தானே சுமக்க வேண்டியிருப்பதால், வேலை தேடியலைந்ததாகவும், இறுதியில் விபசாரத்துக்காகப் பெண்களைப் பிடிக்கும் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாகவுமே அவர்களின் வாக்கு மூலங்கள் இருக்கும்.
இல்லையேல், கணவன் நோயுற்று படுக்கையில் கிடப்பதால் குழந்தைகளை வளர்க்க இத்தொழிலுக்கு வரநேர்ந்ததாகவும், கணவன் தன்னை கைவிட்டுச் சென்றதால் வாழ வழியின்றி விபசாரத்துக்கு வந்தாகவும் சொல்வார்கள். பருவ வயதில் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவினரால் கெடுக்கப்பட்டதாகவும் பின்னர் ஒருவன் பேச்சை நம்பி அவனுடன் ஓடிப் போனதாகவும் வாழ்வதற்கு இதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்றும் அவர்கள் கூறும் காரணங்கள் இருக்கும்.
இக்காரணங்கள் பெரும்பாலும் இட்டுக்கட்டியவையாகவும் தன்னை நாடி வரும் ஆண்களிடம் ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்தி அவனது வேட்கை சீற்றத்தைக் குறைத்துக் கொள்வதற்கு அல்லது அதிக பணத்தை கறந்து கொள்வதற்கு இக்கதைகளை அவர்கள் அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் இக்கதைகளில் காணப்படும் அடிப்படையான விஷயங்களில் உண்மை இல்லாமல் இல்லை. அதாவது குடும்பச் சூழல், தரகர்களுடன் தொடர்பு என்பன.
விபசாரம் என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. உலகின் மிகப் பழைய தொழிலாக வர்ணிக் கப்படுவதே விபசாரம். மிக பழைய நூல்களிலும் விபசாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பபிலோனியா, கிரேக்கம் போன்ற பரந்த பூமிகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது.
18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் விபசாரம் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட தொழிலாக இருந்தது. இராணுவத்தினருக்கு பிரத்தியேகமாக விலைமாதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்தியாவில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை தேவதாசி முறை பரவலாக வழக்கில் இருந்தது. இவர்கள் உயர் சாதியினருக்கு சேவை செய்பவர்களாகக் கருதப்பட்டனர்.
20 ஆம் நூற்றாண்டில் விபசாரம் பல்வேறு பரிமாணங்களில் தலையெடுக்க ஆரம்பித்தது. சில விலைமாதுக்கள், ‘call girls’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமக்கென ஒரு முகவரியில் இருந்து கொண்டு வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துகின்றனர்.
இப்போது ஒருபடி மேலே போய் இணையத்தளத்தினூடாகவும் தேர்ந்தெடுக்கும் வசதிகள் வந்துள்ளன. விபசாரம் அண்மைக் காலங்களில் எடுத்துள்ள மற்றுமொரு பரிணாமம் தான் ‘மசாஜ் பார்லர்’கள்.
கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்நகருக்கு வெளியே கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் அவிசாவளை, தெரணியகலை, பாதுக்க போன்ற பகுதிகளைச் சொல்லலாம். தினமும் சீருடை போன்ற தோற்றம் அளிக்கக் கூடிய சாரிகள் அணிந்து காலை அலுவலக நேரத்தில் பஸ் ஏறி ஏனைய பெண்களைப் போல கொழும்பு வந்து இம்மஸாஜ் நிலையங்களுக்கு தொழில் செய்யப் போகிறார்கள். பின்னர் அலுவலகம் விடும் 4.30 அல்லது ஐந்து மணியளவில் பஸ் பிடித்து வீடு திரும்புகிறார்கள்.
இது, இவர்கள் அலுவலகம் செல்லும் பெண்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக பின்பற்றப்படும் உத்தி. இங்குள்ள மசாஜ் பார்லர்களில் விலை மாதுக்களாக இருக்கிறார்கள். அவர்களது குடும்பங்களைப் பொறுத்தளவில் அவர்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் அல்லது அலுவலகங்களில் கெளரவமான தொழில் செய்பவர்கள்.
இதுவரை நாம் கூறியதெல்லாம் விபசாரத்தை முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பற்றியவை. மற்றொரு பிரிவினர் அநேகமாக விலை மாதுக்களாக சமூகத்தால் இனம் காணப்படுவதில்லை. இந்த இரண்டாவது பிரிவினர் அலுவலங்களில் உண்மையாகவே கெளரவமான தொழில் செய்பவர்கள்.
இவர்களையும் ‘கோல் கேர்ள்’ என்ற பிரிவில் சேர்க்கலாம். நேர்த்தியாக உடையணிந்து அழகிய தோற்றம் கொண்ட இப்பெண்கள் கைநிறைய சம்பளம் வாங்குபவர்கள். ஆங்கிலமும் நன்றாக வரக்கூடும். இவர்கள் விபசாரத்தை பகுதி நேரத் தொழிலாக செய்பவர்கள். கிழமைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று வைத்துக் கொண்டு குறிப்பிட்ட சில வட்டத்துக்குள், தொடர்புகளுடன் மாத்திரம் சம்பந்தப்பட்டு காதும் காதும் வைத்தாற் போல விபசாரம் செய்பவர்கள் இவர்கள்.
இவ்வாறு வசதிகள் இருந்தும் விபசாரத்தில் இவர்கள் நாட்டம் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து குழந்தை குட்டி என வாழ்பவர்கள்தான்.
சில ஆண்களைப் போல சில பெண்கள் சுலபமாக பாலியல் உறவில் திருப்தி அடைவதில்லை. இத்தகைய வேட்கை கொண்ட படித்த, பணக்கார பெண்கள் பரிசு பொருட்களுக்காக வெளி ஆண்களுடன் தொடர்பு கொள்ள விரும்புவர். பரிசுப் பொருட்களை விட இவர்களுக்கு வேட்கை தீர வேண்டும் என்பதே உண்மை. மற்றுமொரு வகையினருக்கு, குடும்பத்தில் அமைதியின்மை, கணவருடன் ஒத்துப் போகக் முடியாமை போன்ற காரணங்களினால் வெளியாரை நாடக் கூடியவர்கள். வெளியாரின் அன்பு, கவனிப்பு, உறவு என்பன இவர்களுக்கு பரிசு, பணம் என்பதைவிட உசத்தி.
சில பெண்களுக்கு மேலதிக வருமானம், பகட்டான வாழ்க்கையில் இச்சை, விலையுயர்ந்த பரிசுகள், உயர் மட்டத் தொடர்புகள், ஹோட்டல், நைட் கிளப், காஸினோ, பயணங்கள் போன்ற எட்ட முடியாத வசதிகளை இந்த பணக்கார ஆண்கள் மூலம் அடைதல் போன்ற காரணங்களின் பேரில் தமது உடலை அவர்களுக்குத் திறந்து விடுகிறார்கள்.
இந்த ரகங்களைத் தவிர வேறொரு ரகமும் உண்டு. அலுவலகங்களில் மேலதிகாரிகளின் உருட்டல் மிரட்டல், தொழில் பறிபோய்விடுமோ என்ற அச்சம் காரணமாக மேலதிகாரிகளின் இச்சைகளுக்கு இவர்கள் வளைந்து கொடுத்து பின்னர் அதில் ருசி கண்டு கோல் கேர்ள் ஆகி விடுபவர்கள் இந்த ரகம். முழு நேர விபசாரிகள் படும் தொல்லைகள் துன்பங்களை இவர்கள் அனுபவிப்பதில்லை.
இவ்வகையான மேல் தட்டு விலை மாதுக்களில் 62.8 சதவீதமானோரே ஆணுறை பாவிப்பதை தமது வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்துகின்றனர் என்று சுகாதார கல்விப் பணிப்பகத்தின் ஊடகப் பணிப்பாளர் சாந்த ஹெட்டியாராச்சி கூறுகின்றார்.
ஏனையோர் எச்.ஐ.வி/ எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொற்றும் ஆபத்தை எதிர்நோக்கியவர்களாக இருக்கிறார்கள். தேவையற்ற கருத்தரிப்புக்கான வாய்ப்புகளும் இவர்களிடம் அதிகளவில் காணப்படுகின்றது.
விலை மாதுக்கள் தமது வாடிக்கையாளர் களுக்காக காத்திருக்கையில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களைச் சோதனை யிடுகின்றனர். அப்போது அவர்களது கைப்பை களில் ஆணுறை காணப்பட்டால் அவர்களை கைது செய்கின்றனர். பொலிஸாரின் இந்தக் கெடுபிடிக்காகவே அநேக விலைமாதுக்கள் ஆணுறையை உபயோகிப்பதில்லை என்கிறார் சாந்த ஹொட்டியாராச்சி. ஆணுறை இல்லாமல் விலை மாதுக்கு ஏற்படும் ஆபத்துக் குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்கிறார் அவர்.
தனது தொழிலில் இவர்கள் பல்வேறு வகையான ஆண்களை சந்திக்கிறார்கள். அவர்களின் வக்கிரங்களுக்கு ஈடுகொடுக்கிறார்கள். பல ஆண்களால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இவற்றையெல்லாம் அவர்களால் வெளியே சொல்லவோ முறைப்பாடு செய்யவோ முடிவதில்லை. காரணம் அவர்கள் செய்வது ஒரு சட்ட விரோத தொழிலாகக் கருதப்படுவதுதான்.
விபசார விடுதிகள் முற்றுகையிடப்படும் போது விலை மாதுக்கள் கைது செய்யப்படுகின்றனர். சிறையில் அடைக்கப்படுகின்றனர். தமது உடலை மூலதனமாக்கி அவர்கள் உழைத்த பணத்தை எல்லாம் தண்டப் பணமாகச் செலுத்துகின்றனர். ஆனால் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்கள் எந்தவித தண்டனையும் இன்றித் தப்ப விடுகிறது சட்டம்.
வீட்டு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களில் பலர் வீட்டு வேலைகளோடு உடலையும் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இவர்கள் நாடு திரும்பியதும் விபசாரத்துக்குள் தள்ளப்படுகின்றனர். அதிக பணத் தேவையும் இதற்குக் காரணமாக அமையலாம்.
எந்த நேரமும் சண்டை பிடிக்கும் பெற்றோர் உடனடியாகக் கிடைக்கும் வருமானம் விபசாரத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து போதிய விழிப்புணர்வின்மை, போதிய பாலியல் கல்வியறிவின்மை, மகிழ்ச்சியற்ற திருமண உறவு எனப்பலவற்றை நாட்டில் விபசாரம் அதிகரித்துச் செல்வதற்கான காரணங்களாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
பாலியல் தொடர்பான ஆரோக்கியமான கல்வி முறையொன்று அறிமுகப்படுத்தப்படாத வரை, செக்ஸ் என்பது வெளிப்படையாக பேசப்படக் கூடாத ஒரு விடயம் என்பது உடைக்கப்படாத வரை விபசாரம், பாலியல் வல்லுறவு போன்றவை பெருகுவதைத் தடுக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
பாலியல் ரீதியில் ஒருவரையொருவர் பரஸ்பரம் திருப்திப்படுத்துகின்றோமா என்பதை கணவன் மனைவியராகச் சிந்தித்துப் பார்க்கவே நாம் இன்னமும் தயாராக இல்லாத போது, சமூகத்தின் இறுகிப் போன கலாசார பாரம்பரியங்களைக் கட்டுடைப்பது என்பது மிகவும் கடினமானது.
தனது குடும்பத்துக்காக தனது உடலை மூலதனமாக்கி தன் மகனை ஒரு விலை மாது படிக்க வைத்தாலும், சமூகத்தின் பார்வையில் அவளது மகன் ஒரு விபசாரியின் மகன் தான். இவ்வாறான சிந்தனைகளால் இறுகிப் போயிருக்கும் சமூகத்தில் சற்றேனும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் விபசாரத் துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டு சட்டத்துக்குள் நெறிமுறைகளுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். விபசாரம் சட்டபூர்வமானால் தான் தன்னிடம் வரும் வாடிக்கையாளன் ஆணுறை அணிய வேண்டுமென்பதைக் கூட ஒரு விலை மாதுவால் வற்புறுத்த முடியும்.
எச்.ஐ.வி/ எயிட்ஸ் மற்றும் பாலியல் ரீதியான நோய்களின் பரவுகையைக் கூடக் கட்டுப்படுத்த முடியும். அரசாங்கமும் மருத்துவ அதிகாரிகளும் அவர்களைக் கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் முடியும்.
புண்ணுக்கு வைத்தியம் செய்யாமல் புணுகு பூசிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? புரையோடிப் போகும்!
வாசுகி சிவகுமார்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக