சனி, 14 ஆகஸ்ட், 2010

சித்ரா பவுர்ணமி விரதத்தின் கதை

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவ பெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். சிவ பெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.


தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.

பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே; இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச் செய்த பெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும் இந்திராணியும் சம்மதித்தனர்.

காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும்! தன் கணக்குப்பிள்ளை பதவியை மறக்காத குழந்தையாகப் பிறந்தார். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயரிட்டார்கள் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியும்.

குழந்தையாக இருக்கும்போதே சித்திர புத்திரன் யாரைப் பார்த்தாலும், அவர்களின் பாவ, புண்ணிய கணக்கை அப்படியே துல்லியமாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். எல்லாருக்கும் ஆச்சர்யம். இந்திரனுக்கோ பெருமை தாங்கவில்லை. இவ்வளவு புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகனை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எமனிடம் அனுப்பிவைக்க முடிவெடுத்தான். அதாவது, எல்லா மக்களுடைய வாழ்வின் முடிவிலும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கும் கணக்கைச் செய்ய!

பிறவிக்கடன் தீர்த்து எப்போது கயிலாயம் செல்வோம் எனக் காத்திருந்த சித்திர புத்திரன், இதைக் கேட்டுக் கலங்கினான். �என்னால் அங்கு போக முடியாது� என்று சொல்லி கயிலாயம் சென்றுவிட்டான். இதனால் இந்திரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். மகனை மறக்கமுடியாமல் கயிலாயம் போய், சிவபெருமானிடம் முறையிட்டான். மகனை தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டான். பரமேஸ்வரனும் அவனது வேதனையை உணர்ந்து, �இனிமேல் சித்திர புத்திரன் உன்னுடனே, உன் தளபதி யமனின் உதவியாளனாக இருக்கட்டும்� என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் கொடுத்தார்.

�இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட சித்திர புத்திரனை யார் விரதமிருந்து வணங்கினாலும், அவர்களுக்கு பாவச்சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வார்� என்ற வரத்தையும் அவருக்கு வழங்கினார் சர்வேஸ்வரன். எனவே சித்ரா பவுர்ணமியில் சித்திரபுத்திரனை விரதமிருந்து வணங்கினால் பாவச்சுமை குறையும்; புண்ணிய பலம் கூடும்.

எப்படி இருப்பது?

இந்த விரதத்தை ஆண், பெண் எல்லோரும் மேற்கொள்ளலாம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூஜையறையை சுத்தமாக்கி, ஒரு மணையில் அழகாக ஒரு கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் கோலத்தையே சித்திர புத்திரனாக உருவகித்துக் கொள்ள வேண்டும்... கோலம் போன்ற சித்திரத்திலிருந்து வந்தவர்தானே சித்திர குப்தன்? அவர் பாவ, புண்ணியக் கணக்கை கணிக்கும் கணக்குப்பிள்ளை இல்லையா, அதனால் அந்தக் கோலத்தின் மேல் ஒரு நோட்டு புத்தகத்தையும் ஒரு பேனாவையும் வைத்துக் கொள்வோம். ஓவியத்திறமை உள்ளவர்கள் ஒரு ஆண் உருவத்தை வரைந்து ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் எழுத்தாணியும் இருப்பது போல வரைந்துகொள்ளலாம்.

சித்திர குப்தருக்கு நைவேத்யமாக சமர்ப்பிக்கும் நிவேதனப் பொருட்களில் உப்பே இருக்கக்கூடாது என்பது சம்பிரதாயம். யாருக்கும் விருப்பு, வெறுப்பு காட்டாமல் நடுநிலையோடு பாவ, புண்ணியக் கணக்கை எழுதுபவர் அல்லவா அவர்? அதனால் இப்படி... உப்பில்லாத வெண்பொங்கல் தயிர்சாதம் அல்லது பாசிப்பருப்பு பாயசம். கூடவே கொழுக்கட்டை, இளநீர் என படைக்கலாம்.

இந்த நிவேதனப் பொருட்களை கோலத்தின் முன்னால் வைத்து, வணங்கலாம். அஷ்டோத்திரம் சொல்லலாம். விரும்பினால், அவரவர் குலவழக்கப்படி ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைக் கொத்து வைத்து, அதை கோலத்துக்கு அருகே வைத்து, அதிலே சித்திர குப்தனை ஆவாகனம் செய்யலாம். நாம் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக் கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்ளும் தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, ஒரு பசுவுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அதற்கு வெல்லம் கலந்த பச்சரிசியை உணவாகக் கொடுத்து வழிபடுவதும் நல்லது. பசுவின் பின் பக்கம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே பசுவின் பின் பக்கம் மஞ்சள், குங்குமம் வைத்து, வாலை ஒருமுறை தடவிக்கொடுத்து பிரதட்சினம் செய்ய வேண்டும். காமதேனு என்ற பசுவின் வயிற்றில் கருவாக இருந்தவர்தானே சித்திர குப்தர்? அதனால்தான் இந்த சம்பிரதாயம். அதோடு அந்தப் பசுவை மதிக்கும்விதமாக, சித்ரா பவுர்ணமி விரதத்தன்று பசும்பால், பசுநெய், பசுந்தயிர் இவைகளை உண்ணாமல் இருப்பது நல்லது. விரதத்தில் நிவேதனமாகப் படைக்கப்பட்ட உப்பில்லாத வெண் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயசம் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

அதோடு சித்திர குப்தன் கதையை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை தானமாகக் கொடுப்பதும் விரதத்தின் ஒரு பகுதியே!

இந்த சித்திர புத்திரனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் இங்கு சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திர குப்தனுக்கு விசேஷ அபிஷேகம், பூஜை எல்லாம் நடக்கும். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல