(ஒரு கட்டுக்கதை)
தக்கனுடைய மகள் தாட்சாயணி என்பதும் அவளை ஈசன் மணம் முடித்ததும் நாம் அறிந்து விடயமே.
ஒரு முறை தக்கன் கைலாயம் சென்றிருந்த வேளை ஈசனைத் தரிசிக்க பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவாதி தேவர்களும் கூட வந்திருந்தார்கள். மாமனார் என்ற வகையிலே தன்னை ஈசன் விசேடமாகக் கவனிப்பான் என்று எண்ணியிருந்தான் தக்கன். அவ்வாறு நடக்காததால் அவனுக்குக் கிடைத்த ஏமாற்றம் கோபமாக மாறியது.
ஈசன் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணிய தக்கன் ஈசனைப் பழிவாங்க எண்ணினான். பெருயாகமொன்றை ஏற்பாடு செய்திருந்தான். யாவரையும் அழைத்திருந்தான். தாட்சாயணியும் அந்த யாகத்திற்குப் போக எண்ணியிருந்தாள்.
ஈசனிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்திருந்தாள். ‘அவமானம் மட்டுமே உனக்கு மிஞ்சும்!’ என்றான் ஈசன். அதையும் மீறி தக்கனின் யாகத்துக்குச் சென்றாள் தாட்சாயணி. அவளைக் கவனிக்காது அவமானப்படுத்திய தக்கன், ஈசனையும் கேலி பேசினார்.
அங்கு வருகை தந்திருந்த சூரிய பகவான் உட்பட தேவர்கள் பெரிதாகச் சிரித்தனர். அவமானத் தைத் தாங்க முடியா தாட்சாயணி தன் யோக சக்தியால் அக்கினியைத் தோற்றுவித்து அதனுடன் சங்கமமானாள். இதை அறிந்து ஈசன் தன்னுடைய இன்னோர் அம்சமான வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகசாலையைத் துவம்சம் செய்யப் பணித்தார்.
தேவியை அவமானப்படுத்திய தேவர்களுள் சூரிய பகவான் முக்கியமானவர். சூரியனை நெருங்கிய வீரபத்திரர் “உனது வாய்தானே ஈசனை நிந்தித்தது? எனக் கேட்ட படி சூரிய பகவானின் கன்னத்தில் அறைந்தார். சூரியனின் பற்கள் விழுந்தன. அதன் பின்னர் பிரம்மன் வந்து யாரையும் சமாதானப் படுத்தினான்.
ஈசனை வழிபட்டு, மன்னிப்பு கோரிய தேவர்களை ஈசன் மன்னித்தருளினார். ஆயினும் சூரியன் மீது அவருக்கிருந்த கோபம் மட்டும் தணியவில்லை. ஆதலால் அவன் இழந்த பற்களை மீளப்பெற அவர் அனுக்கிரகமும் செய்யவில்லை. பல்லில்லாதவர்கள் உண்பதற்கும் சர்க்கரைப் பொங்கல் எளிமையாக இருக்குமல்லாவா? ஆதலால் தான் பொங்கல் திருநாளின் போது சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் பொங்கிப் படைக்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக