கேள்வி: பின்னர் என்ன நடந்தது?
பதில்: நான் அநாதை ஆனேன். வீதிகளில் அலைந்து திரிந்தேன். கடைகளில் உணவு இரந்து பெற்று உண்டேன். கடை ஓரங்களில் படுத்தேன். மாற்றி உடுக்க உடுப்பு இல்லை. ஏதோ நான் வாழ்ந்தேன்.
ஒரு நாள் என்னை கடந்து சில வாகனங்கள் தொடராக சென்றன. நான் பயத்தில் ஓடிப் போய் வாய்க்கால் ஒன்றுக்குள் மறைந்து கொண்டேன். அவை சென்ற பிற்பாடு பழையபடி என் இடத்தில் வந்து அமர்ந்தேன். ஆனால் சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு வான் வந்தது. எனக்கு அருகில் தரித்து நின்றது.
இரு மனிதர்கள் வானில் இருந்து இறங்கினர். எனது சொந்த விபரங்களைக் கேட்டார்கள். இவர்களின் கேள்விகள் எல்லாவற்றுக்கும் நான் பதில் கொடுத்தேன். வானில் ஏறும்படி ஒரு மனிதன் சொன்னார். எனக்கு பயம் இருக்கவில்லை. வானில் விரைந்து ஏறினேன். வான் புறப்பட்டு சென்றது. பெரிய வீடு ஒன்றை வந்தடைந்தது. இருட்டு நேரம்தான். ஆனால் எனக்கு பயம் இல்லை. நான் வீட்டுக்குள் நடந்தேன். என்னைப் போன்ற பல சிறுவர்களை அங்கு கண்டேன். எனக்கு இது ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்தது. குளிக்கின்ற இடத்தை காண்பித்தார்கள். குளித்த எனக்கு புதிய உடுப்புக்கள் கொடுத்தார்கள். நல்ல சாப்பாடு கொடுத்தார்கள். எனக்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள். இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் இல்லம் என பின்பு அறிந்து கொண்டேன்.
நான் கண்ட தொடர் வாகனங்களில் ஒன்றுக்குள் பிரபாகரன் சென்றிருக்கின்றார். என்னை கண்டிருக்கின்றார். என்னைப் பற்றிய தகவல்களை பெறச் சொல்லி உத்தரவிட்டு இருக்கின்றார். இதுதான் நான் புலிகளின் சிறுவர் இல்லத்தில் சேர்ந்த கதை.
நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோமா? என்பதை அறிய பிரபாகரன் ஒவ்வொரு மாதமும் தவறாமல் இல்லத்துக்கு வருவார். எங்களுக்கு இனிப்புக்கள், உடுப்புக்கள் வாங்கி வருவார். எனக்கு ஒரு விடயம் மாத்திரம் புரியவில்லை. அவருக்கு என் மீது தனிப் பிரியமும், விசேட கவனமும். என்னுடன் பேசுவார். என்னை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விசேட கட்டளைகள் பிறப்பிப்பார்.
சிறுவர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட மாட்டோம். இல்லத்துக்கு வந்துதான் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.
கேள்வி: நீங்கள் சண்டைகளில் பங்கேற்க வேண்டி இருக்கவில்லையா?
பதில்: எனக்கு அப்படியான கட்டாயம் இருக்கவில்லை. ஆனால் யுத்தத்தின் இறுதி கட்டங்களில் நாங்களும் களத்தில் இறங்க வேண்டி ஏற்பட்டது. நானும் ஆயுதங்கள் ஏந்தினேன்.
கேள்வி: அதாவது இராணுவத்துடன் நீங்கள் சண்டையிட்டீர்கள்?
பதில்: ஆம். சில சந்தர்ப்பங்களில் சண்டையிட நேர்ந்தது.
கேள்வி: நீங்கள் காயப்படவில்லையா?
பதில்: அதிஷ்டவசமாக நான் காயப்படவில்லை.
கேள்வி: ஏன் நீங்கள் இராணுவத்திடம் சரண் அடைந்தீர்கள்?
பதில்: நான் மாத்திரம் அல்ல ஏராளமான போராளிகள் நிராயுதபாணியாக சரண் அடைந்தோம்.
கேள்வி: பிரபாகரனின் நிலை என்ன?
பதில்: தெரியாது.
கேள்வி: பிரபாகரனின் இழப்பு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: கவலை தருகின்றது. தந்தையை இழந்த மகனின் தவிப்பு இது. பிரபாகரன் எனக்கு தகப்பன். நான் தகப்பன் இல்லாமல் இருந்தபோது எனக்கு தகப்பன் ஆனவர். என்னை ஒரு மனிதனாக வளர்த்தவர். பிரபாகரன் எனக்கு அடைக்கலம் கொடுத்து இருக்காவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்க மாட்டேன். என்னை அவரின் சொந்தப் பிள்ளைகளில் ஒருவராக நடத்தினார். அவரது இழப்பு எனக்கு பெரிய கவலைதான்.
பேட்டி .................................................................................................................... தொடரும்.
வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 1
வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 3




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக