செவ்வாய், 4 டிசம்பர், 2012

எப்போது நினைவுகூருவது?

யுத்தத்திலும், போராட்டத்திலும் மாண்டவர்களை நினைவுகூரும் உரிமை, தமிழ் மக்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆயுதம் இல்லாமல் அமைதியாக முன்னெடுக்கப்படும் நினைவு அனுஷ்டானங்களை நடத்துவதற்கு தமிழர்களுக்கு இருக்கின்ற உரிமையை ஏற்றுகொள்ள வேண்டும்.

இது தொடர்பிலான கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்றும் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோஷலிச கட்சி ஆகிய கட்சியினருக்கு, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

நியாயமான கோரிக்கை தான். இவ்வாறு கோரிக்கை வைத்தால் மட்டும் போதுமா? அது எந்த நாளில் என்று கூறவேண்டாமா?

மாவீரர் நாள் என்பது விடுதலைப் புலிகள் உயிர்நித்த தமது போராளிகளை நினைவுகூர்ந்து அனுஷ்டிப்பது. அவர்கள் அன்றைய நாளில் தமது போராளிகளை மாத்திரமே நினைவுகூருவார்கள். அதிகம் ஏன் அன்றைய நாளில் மரணித்த சாதாரண மக்கள் கூட அன்றைய தினம் தத்தமது உறவுகளை நினைவுகூரக்கூட புலிகள் அனுமதித்ததில்லை.

யுத்தத்திலும் போராட்டத்திலும் மாண்டவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் இருக்கவேண்டியதுதான். போராட்டத்தில் மாண்டவர்கள் புலிகள் மாத்திரமல்ல. சிறிசபாரத்தினத்துடன் படுகொலைசெய்யப்பட்ட ஐநூறுக்கும் அதிகமான ரெலோ போராளிகளும் போராட்டத்தில் மாண்டவர்கள்தான்.

படுகொலை செய்யப்பட்ட பத்மநாபாவுடன் நூற்றுக்கணக்கான போராளிகளும் போராட்டத்தில் மாண்டவர்கள் தான். இவர்களை மாவீரர் தினத்தில் நினைவுகூர புலிகள் என்றுமே அனுமதித்ததில்லை.

யுத்தத்தில் பலியானவர்களை நினைவுகூருவதெனில் வருடத்தின் முன்நூற்று அறுபத்தி ஐந்து நாட்களும் நாம் நினைவுகூரலாம். ஏனெனில் ஒவ்வொரு நாட்களும் யுத்தத்தில் யாராவது ஒருவர் பலியாகியே இருப்பார்.

அப்படியெனில், மனோகணேசன் கூறுவதுபோல, யுத்தத்தில் பலியானவர்களையும் போராட்டத்தில் பலியானவர்களையும் எப்படி எப்போது நினைவுகூருவது.
1971, 1989 ஆகிய ஆண்டுகளில் கொல்லப்பட்ட மக்களை விடுதலை முன்னணி (ஜே.வி.பி), முன்னிலை சோஷலிச கட்சி தோழர்களை நினைவுகூருவதற்கு தென்னிலங்கையில் அக்கட்சியினருக்கு இருக்கின்ற உரிமை, தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் மனோகணேசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமது ஜேவிபி தோழர்களை நினைவுகூர தென்னிலங்கையில் அவர்களுக்கு அப்படி உரிமை இருப்பதுபோல போராட்டத்தில் பலியான தமது போராளிகளை தலைவர்களை நினைவுகூருவதற்கான உரிமை வடக்கில் ஈபிஆர்எல்எவ் கட்சியினருக்கும் இருக்கிறது. புளொட் அமைப்பினருக்கும் இருக்கிறது. ஏன் ரெலாவுக்கும் இருக்கிறது. அது இல்லை என்று மனோகணேசன் சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை.

யுத்ததில் பலியான பொதுமக்களையும் போராளிகளையும் நினைவுகூரவேண்டும் எனில் அதற்காக புலிகள் தமது பேராளிகளை மாத்திரம் நினைவுகூருவதற்காக தீர்மானித்த நவம்பர் 27ல்தான் செய்யவேண்டும் என்று மனோ கணேசன் சொல்கிறாரா?

முதலில் கடந்த முப்பது ஆண்டுகளில் போராட்டம் என்ற பெயரில் பலியான அனைவரையும் நினைவுகூரவேண்டுமெனில் அதற்கான திகதிஒன்றை தமிழ்த்தலைமைகள் நிர்ணயிக்கவேண்டும். அதைவிடுத்து புலிகளின் போராளிகளை மாத்திரம் நினைவுகூருகின்ற மாவீரர் தினத்தில்தான் அதனைச் செய்யவேண்டும் என்றால் அதனையும் அனைவரும் ஒருமித்து எடுக்கவேண்டும். அதைவிடுத்து புலிகளை மாத்திரம் நினைவுகூரவேண்டும் என்று அடம்பிடிப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது, பல்கலைக்கழக சமூகம் எடுத்துள்ள தீர்மானம் ஒன்று செய்தியாக வெளிவந்திருக்கிறது.

அடுத்த மாவீரர் தினத்தை மாணவர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் கொண்டாடுவது என்று தீர்மானித்திருப்பதே அந்தச் செய்தி.

அந்தச் செய்தி வெளிவந்த அன்று டான் தொலைக்காட்சியில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மீதான பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தைச் சேர்ந்த போராசிரியர் விக்கினேஸ்வரன் அந்த தீர்மானம் குறித்த விளக்கத்தை வழங்கியதையும் கேட்கமுடிந்தது.

அடுதத் மாவீரர் தினத்தை மரணித்த மக்கள் நினைவாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டதாக கூறியவர், மக்கள் என்கின்றபோது அதில் போராளிகளும் அடங்குவதாக கூறினார்.

முதலில் அவர் கூறியதை கவனிக்கவேண்டும். அதாவது மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது என்று தீர்மானித்திருக்கிறார்களாம்.

மரணித்தவர்களை நினைவுகூருவதும் இப்போது பல்கலைக்கழக சமூகத்திற்கு கொண்டாட்டமாகப் போயிருக்கின்றது.

சிலவேளை, தாங்கள் அதனை நடாத்துகின்றபோது, ராணுவமும் பொலிசும் வந்து குழப்புவதற்கு முயற்சிக்கும் அப்போது நாங்கள் அதனை ஒரு கொண்டாட்டமாக மாற்றலாம் என்பது அவரது நினைப்பாக இருக்கலாம்.

அதனை விட்டுவிட்டு விசயத்திற்கு வருவோம்.

நவம்பர் 27 என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து போராடி மரணித்த போராளிகளுக்காக நினைவுகூருவதற்காக அவர்கள் நிர்ணயித்த நாள். அந்த நாளில் புலிப் போராளிகளைத் தவிர்த்து, உரும்பிராய் சிவகுமாரனை மாத்திரமே அவர்கள் தமது மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொண்டனர். நீண்ட காலமாக அவரோடு இணைந்திருந்த பாலகுமாரின் ஈரோஸ் போராளிகளைக்கூட அந்த மாவீரர் பட்டியலில் அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை.

அப்படியிருக்கையில் அந்த நாளில் மரணித்த மக்கள் அனைவருக்குமான நினைவுநாளாக பல்கலைக்கழக சமூகம் எந்த துணிவில் அறிவித்தது என்பது தெரியவில்லை.

இது புலம்பெயர்நாடுகளில் இருந்து இன்னமும் அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கும் புலிகளை சீண்டிப்பர்க்கின்ற அபாயகரமான முடிவு.

கடந்துசென்ற முப்பது ஆண்டுகால வரலாற்றில் மரணித்தவர்கள், அல்லது மரணிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மாத்திரமல்ல. அப்பாவி சிங்கள மக்களும் தான் தமது உயிர்களை இழந்திருக்கின்றார்கள். எனவே இவ்வாறு இறந்தவர்கள் அனைவரையும் நினைவுகூர ஒரு பொதுவான நாளை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த நாட்டிற்கும் உண்டு. அவ்வாறு ஒரு நாளை அறிவித்து அதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

இன்று நம்முன் உள்ள முக்கிய பணி, அப்படி ஒரு நாளை அறிவியுங்கள் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதுதான். அதனை நமது அரசியல்தலைவர்களும் முன்னெடுக்கவேண்டும். அதைவிடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களின் உணர்ச்சியைத் தாண்டிவிட்டு அதில் குளிர்காய அரசியல் தலைவர்கள் முண்டியடிக்கக்கூடாது.

நடந்து முடிந்த பல்கலைக்கழக அசம்பவாவிதங்களின்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவ்விடத்திற்கு வந்து தனக்கு பிரபல்யம் தேடிக்கொண்டது தொடர்பாக டான் ரிவி பேட்டியில் பேராசிரியர் வி;ககினேஸ்வரன் தொளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அரசியல்வாதிகள் தமது பிரபல்யத்திற்காக அங்கு வரத்தான் செய்வார்கள். அது அவர்களது தனிப்பட்ட பிரபல்யத்திற்கான தந்திரம் என்று.

எனவே இதுபோன்ற பிரபலங்களைத் தேடுவதை விடுத்து, ஆக்கப+ர்வமாக எதையாவது செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.

அந்தப் பேட்டியில், போராசிரியர் விக்கினேஸ்வரன் ஒன்றைக் குறிப்பிட்டார். தெற்கிலங்கையில் ஜே.வி.பி. தனது தலைவர்களின் நினைவு தினத்தை கொண்டாட முடியும் என்றால் நாம் ஏன் எமக்காக மரணித்தவர்களை நினைவுகூரக் கூடாது என்று. நியாயமான கேள்விதான்.

ஆனால் அவருக்கு தெரியாததல்ல, நாமும் பத்மநாபா, சிறிசபாரத்தினம், உமா மகேஸ்வரன் என்ற எமது போராளி இயக்கத் தலைவர்களை நினைவுகூருவதற்கு யாரும் தடைவிதிக்கவில்லை. இந்தத் தலைவர்களின் நினைவுநாள் சுவரொட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று இல்லாவிட்டாலும் கூட தற்போதும் அது தடைசெய்யப்பட்ட நிலையில்தான் இருக்கின்றது.

அவ்வாறு தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றிளை நினைவுகூருவது, சட்டவிரோதமானது என்பது பல்கலைக்கழக சமூகத்தினருக்கு தெரியாததல்ல.

புல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாவீரர் சுவரொட்டிகளே ராணுவத்தினரை பல்கலைக்கழகத்தை நோக்கி நகர்த்தியது என்பதை பேராசிரியர் ஏற்றுக்கொள்வார் என்று நம்பலாம்.

போராட்டம் என்ற பெயரில் பலியான அத்தனை பேரும் ஒரு பொதுவான நாளில் நினைவுகூரப்படவேண்டும் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது.
ஆனால் அதற்காக ஒரு நாளை எல்லோரும் இணைந்து தெரிவுசெய்யவேண்டும்.

-தலைநகரத்தான்

(தேனி இணையம்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல