ஞாயிறு, 17 நவம்பர், 2013

அரண்மனையான நூலகமும் அலைந்து திரிந்த மக்களும்

யாழ்ப்பாணம் வந்திருந்த(15ம் திகதி) இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனை யாழ் பொதுநூலக வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாரளமன்ற உறுப்பினர் சுமந்திரன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தித்து பேசிக்கொணடிருந்த போது நூலக வாசலில் யுத்தத்தில் காணாமற் போனோர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இங்கிலாந்துப் பிரதமரிடம் நேரில் மகஜர் கொடுப்பதற்காகத் திரண்டிருந்தனர்.

உள்ளே நடந்த குசுகுசுப்புக்களும் கைகுலுக்கல்களும் முடிய இங்கிலாந்துப் பிரதமரும், வடமாகாண முதலமைச்சரும், சமந்திரனும் தமது வாகனங்களில் பின்வழியால் வெளியேறுவதைக்கண்ட மக்கள், துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி நகர்ந்த வேளையில் கமரூன் ,விக்னேஸ்வரன், சுமந்திரன் ஆகியோரது வாகனஙகள் நழுவிப் பறந்ததுவிட்டன. சம்பந்தரது பஜிரோ வண்டி சற்றுத் தாமதமானதால் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே மாட்டிக்கொண்டது.

சம்பந்தன் அவர்களின் வாகனத்தை மறித்த அவர்கள், "எங்களை ஏமாற்றுவதற்கா உங்களுக்கு வாக்குப் போட்டோம்",'தென்னிலங்கையில் சிங்கள மக்கள் வாழ்வதைப் போல நாங்களும் வாழ்வதற்குத்தானே உங்களுக்கு வாக்குப் போட்டோம், அதைக் கூடச் செய்யமுடியாத நீங்களெல்லாம் என்ன தலைவர்கள்'" என்று அந்த மக்கள் கூக்குரலிட்டதை கேட்க முடிந்தது. 'பிள்ளைகளை மீட்டுத்தர முடியவில்லை, காணிகளை மீட்டுத்தர முடியவில்லை, நீங்களெல்லாம் தலைவர்களெனச் சொல்லியபடி ஏசி (AC) வாகனங்களில் பவனிவர வெட்கமாயில்லையா' என்றும் ஒரு தாய் கோபத்தோடு தெரிவித்ததையும் கேட்கமுடிந்தது. பதில் சொல்லிவிட்டுப் போகுமாறு தொடர்ந்தும் கடுமையான வார்த்தைகளால் பஜிரோவைச் சூழ்ந்து கொண்ட மக்கள் கோசமிட சம்பந்தர் வாகனத்திலிருந்து எட்டிக்கூட பார்கவில்லை. பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளை அடுத்து பொலிசார் மக்களை அப்புறப்படுத்தி வழி விட அந்தத் தவைலரும் அங்கிருந்து பறந்துவிட்டார்.

சர்வதேச ஊடகவியலாளர்களை விட இலங்கையிலிருந்து செயல்படும் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் அந்த இடத்தில் இருந்த போதும் இந்தக் கூக்குhல்கள் எதுவும் கூடுதலான தமிழ்ஊடகங்களில் வழைமபோல் மறைக்கப்பட்டுள்ளதுதான் வேதனை.

இங்கிலாந்துப் பிரதமரிடம் மகஜர் கொடுப்பதற்காக குழுமியிருந்த மக்களை ஏமாற வைத்ததும், பொலிசாருடன் தள்ளு முள்ளு ஏற்படவும் ,தடுப்புகளை உடைத்துக் கொண்டு மக்கள் ஆவேசமுடன் திட்டித் தீர்க்கவும் காரணமாயிருந்தவர்கள் யார் எவரென்பதை தமிழ் ஊடகங்கள் பேசாப்பொருளாக்கி விட்டன.

கமரூனும் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனும் மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் பேசியபடியே பொதுநூல் நிலைய பால்கனியில் மக்களுக்குக் காட்சி தந்தனர். இது லண்டன் பக்கிங்காம் அரண்மனையில் பிரித்தானிய மகாராணியார் அப்பப்போ மக்களுக்கு காட்சிதந்து கையசைப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்தியது.

வெளியே கூடி நின்ற மக்கள் பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் அளிப்பதற்காகத்தான் கூடிநிறகிறார்கள் எனத் தெரிந்தும் அவர்கள் ஏன் இறங்கிவந்து மக்களைச் சந்திக்கவில்லை என்பதை தமிழ் ஊடகங்கள் ஒரு கேள்வியாகக் கூட கேட்கவில்லை....... மக்கள், பிரச்சினைகளோடு போகும்போது அவர்களிடமிருந்து விலகியோடுவது யார் ,எவர் என்பது ஊடகங்களுக்குப் புரியாமலா இருக்கிறது.....?

இதையெல்லாம் தெரிந்துகொண்டும்,பொலிசாரை எதிர்த்து யாழ்ப்பாணம் அதிர்ந்தது என்கிற வழமையான பாணியில் எழுதித் தள்ளும் ஊடகங்களின் தர்மம் என்ன........?

மக்களை நேர்கொண்டு சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டு இவர்கள் அங்கிருந்து தப்பியோடவே முயற்சித்தார்கள். கமரூனோடு வந்து கமரூனுடனேயே திரும்பிச் சென்ற தமிழ்த் தலைவர்கள் ஏன் மக்களிடமிருந்து மகஜரை வாங்கிக் கமரூனிடம் கொடுக்க முனையவில்லை........ அல்லது வெளியே கொந்தளித்த மக்களிடமிருந்து ஓரிரு பிரதிநிதிகளையாவது வரச்சொல்லி தங்களுடனிருந்த கமரூனை சந்திக்கவாவது வைத்திருக்கலாமே......?

காணாமற்போனோர் பற்றிய மகஜரையும், ஆர்ப்பாட்டக் காரர்களையும் கண்டுகொள்ளாத பிரதமர் கமரூன், உதயன் பத்திரிகைக் காரியாலயச் சுவரில் குண்டுகள் துளைத்த அடையாளங்களைப் பார்த்துப்போகவா அங்கிருந்து வந்தார்.....? என்கின்ற நியாயமான கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் வாழும் தமிழ்வாக்களர்களை திருபதிப்டுத்தவே அவரின் யாழ் விஜயம் எனகின்ற கூற்றையும் இது நியாயப் படுத்துகிறது. camaron and sumandran

நமது மக்களுக்குள்ள பிரச்சினைகளை முடியவிடாமல் யார் யாரெல்லாம் இழுத்து நீட்டிச் செல்வதில் லாபமடையப் பார்க்கிறார்கள்.......? ஏன் எதிர்ப்பும் வெறுப்புமான உணர்ச்சியலையில் மக்கள் தொடர்ந்து இருத்தப்படுகிறார்கள்.......? யார் - யார் லாபத்திற்காக இவையெல்லாம் நடைபெறுகின்றன, தெரிந்தம் தெரியாத விடைகளுக்hன வினாக்கள் இவை.

அதேவேளை இங்குள்ள தலைவர்கள் எனப்படுவோர் தொடர்ந்தும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்ட மக்களின் ஆதங்கக் குரல்களாகவே அன்றைய கோசங்கள் இருந்தன. மக்களின் வாழ்நிலை யதார்த்தத்தை உணராமலும்,அவர்களது தேவைகளை எண்ணாமலும் வெறும் உணர்ச்சியூட்டல் பேச்சுக்களால் மட்டுமே எப்போதும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சமாளித்துவிட முடியாது.

தொடர்ந்து போராடிக் கொண்டிருங்கள் தீர்வை உங்களுக்குத் தரவேண்டியவர்கள் வேறு யாரோதான் என்று மக்களுக்கு இனியும் சொல்ல முடியாது. பிள்ளைகள் ஏன் திரும்பவில்லை, காணிகள் ஏன் கிடைக்கவில்லை, அடிப்படைத் தேவைகள் ஏன் தீரவில்லை என்பதற்கெல்லாம், தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய தலைவர்கள் பதிலளித்தே ஆக வேண்டும், என்பதையே நூலக வாசலில் கொந்தளித்த மக்களின் கோபமும் கோசங்களும் காட்டியது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண, "வாருங்கள் உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் செய்யலாம்" என்று சொல்லிக்கொண்டே எவ்வளவு காலத்தைத்தான் ஓட்டமுடியும்.....? இவ்வளவு காலமும் செய்த உண்ணாவிரதங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் வீரவசனங்களுக்கும் என்ன பலன் கிடைத்தது என்பதைக் காட்டாமலே எப்போதும் அதே வண்டியையே ஓட்டிக் கொண்டிருக்க முடியுமா.......?

நமது போராட்டங்களுக்கு விளைவு என்ன......? நமது கோரிக்கைகளுக்குக் கிடைத்த பலன் என்ன.......? இந்தத் தலைவர்கள் நமக்குத் தீர்த்து வைத்த பிரச்சினைகள் என்னென்ன.......? என்றெல்லாம் மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல சகுனம்தான்.


-இடக்கரடக்கர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல