ஞாயிறு, 17 நவம்பர், 2013

நிலநடுக்கங்களின் அறிவியல் பின்னணிகள்

பெரியோர் பொறுமைக்கு உவமையாக பூமாதேவியைக் குறிப்பிடுவர். பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் தமது குறளொன்றில் “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல….” என ஆரம்பித்து, புவியைப் போல இகழும் மானிடரைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என உரைக்கின்றார். இவ்வாறாக பொறுமைக்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படும் பூமி, சில சமயங்களில் சீற்றம் கொண்டு அதிர்கையில் மனித வாழ்விடங்கள் அழிவடைவதும் மனித உயிர்கள் பறிக்கப்படுவதுமான விபரங்கள் செய்தி ஊடகங்களில் வெளிவருகின்றன.

முனிவரின் சாபத்திற்கு உள்ளானது போல இந்தோனேஷியா, ஜப்பான், சிலி போன்ற சில நாடுகளில் நிலநடுக்க அனர்த்தங்கள் காலத்துக்காலம் ஏற்படுகின்றன. அண்மைக் காலங்களில் இலங்கையின் சில பகுதிகளில் நிலஅதிர்வுகள் ஏற்படுவது மக்களால் தொடர்ச்சியாக உணரப்பட்டு, உரிய அரச நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. அந்த அரச நிறுவனம் நாட்டின் குறித்த பகுதிகளுக்குச் சென்று, அந்த அதிர்வுகள் இயற்கையான அதிர்வுகளா அல்லாவிடின் மனித செயற்பாடுகளால் உண்டாக்கப்படும் செயற்கை அதிர்வுகளா என ஆய்வு செய்தமை தொடர்பான விபரங்கள் வெளிவந்திருந்தன.

நாம் வாழும் பூமியின் படைகளை ஆய்வு செய்து அவற்றினை 5 பிரிவுகளாகப் பிரித்து பெயரிட்டுள்ளனர். அவை, புவி மேற்படை (Crust), Upper mantle, Mantle, Outer core, மற்றும் inner core எனப் பெயரிடப்பட்டுள்ளன. பூமியதிர்ச்சி அடிக்கடி நடைபெறும் அமைவிடங்களை ஒப்பீடு செய்தும், மேலதிக ஆய்வுகள் வாயிலாகவும் புவி மேற்படையானது தொடர்ச்சியாக அமையாமல் இடையிடையே எல்லைகளைக் கொண்டமைந்தது எனக் கண்டறிந்துள்ளனர்.

அந்த எல்லைகளைக் கண்டறிந்து அவற்றின் வடிவங்களை வெளியிட்டுள்ளதுடன், அந்த புவி மேற்படைத் தட்டுக்களுக்கு (Tectonic plates) வெவ்வேறான பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியன், யுரேசியன், ஆபிரிக்கன், அண்டார்டிக், வட அமெரிக்கன், தென்அமெரிக்கன் மற்றும் பசுபிக் என அப்பெயர்கள் அமைந்துள்ளன.

மேலே குறிப்பிட்ட புவி மேற்படைத் தட்டுக்கள் அசைவில்லாமல் இருப்பதில்லை. அவை வெவ்வேறான திசைகளில் மெதுவாக நகர்ந்து செல்கின்றன. இவ்வாறு புவி மேற்படைத் தட்டுக்கள் நகர்கையில், அத்தட்டுக்களின் எல்லைகளில் நெருக்கடி நிலைமை ஏற்படுகின்றது. சில எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று நோக்கி நகர்கின்றன. சிலவற்றில் எதிரும் புதிருமாக அசைகின்றன. வேறுசிலவற்றின் எல்லைகளில் ஒரு தட்டின் கீழ் மற்றைய தட்டு செல்கிறது. புவி மேற்படைத் தட்டுக்களின் சார்பியக்கம் காரணமாக தட்டுகளுக்கிடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இம்மோதல்களின்போது பாரிய அளவு சக்தி வெளியாகின்றது. இச்சக்தி மேற்படைத் தட்டுகளுக்குக் கிடைக்கையில் அது நிலத்தினை அதிர்வடையச் செய்கிறது. இப்பாரிய சக்தி கடல் நீரிற்கு கிடைத்தால் அது சுனாமியாகப் பரிணமிக்கிறது.

இந்தப் புவிமேற்படைத் தட்டுக்களின் எல்லைகளுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகள் பாரியளவில் புவியதிர்ச்சிகளால் பாதிப்படையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்காரணத்தினால் ஜப்பான், இந்தோனேஷியா, சிலி, துருக்கி போன்ற புவிமேற்படைத் தட்டுக்களின் எல்லைகளை அண்மித்தவாறு காணப்படும் நாடுகள் நிலநடுக்க அனர்த்தம் என்னும் தீராத துன்பத்திற்கு உள்ளாகின்றன.

இது தவிர, அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட தட்டுக்கள் மேலும் உள்ளாக உடைந்து புதிய தட்டுக்கள் உருவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. புதிதாக புவி மேற்படைத் தட்டுக்கள் உருவாகும்போது ஏற்படும் புதிய எல்லைகளிலும் நிலஅதிர்வு விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.

புவிமேற்படைத் தட்டுக்களின் எல்லைகளில் மட்டுமல்லாது தட்டுகளுக்குள்ளேயும் புவியதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. புவியதிர்வு ஏற்பட வாய்ப்பில்லை எனக் கருதப்பட்ட இடமான அவுஸ்திரேலியாவின் New Castle

இல் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டன. அயல்நாடான இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பூஜ் என்னுமிடத்திலும் 2001 ஆம் ஆண்டு இதே வகையான நிலஅதிர்வு ஏற்பட்டுப் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இவ்வாறான நிலநடுக்கங்கள் எப்பகுதியில் நிகழும் என இதுவரை எதிர்வுகூற முடியாதுள்ளது.

இலங்கையிலும் 1614 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக 2000 பேர் வரையில் இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் 1993 இலும் 4.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

தற்போது இலங்கை அவுஸ்திரேலியன் புவிமேற்படைத் தட்டினுள்ளே காணப்படுவதால், புவியதிர்வு அனர்த்தங்கள் இல்லாத பாதுகாப்பான பகுதி எனத் தற்போது கருதப்பட்டாலும் இந்த அனர்த்தம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதும் முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அத்தியாவசியம்.

புவியதிர்வு ஏற்படுவதைத் தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்களால் தடுக்கமுடியாது என்பதுமட்டுமல்லாமல், எப்போது ஏற்படும் எனவும் எதிர்வுகூறவும் முடியாதுள்ளது.

ஆனால், அறிவியலாளர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் ஊடாக மனித உயிரிழப்புப் பேரவலங்களை குறைக்கமுடியும் என்பது தெளிவு. புவியதிர்வின்போது கட்டடங்களே மனிதனுக்கு எமனாக மாறிவிடுகின்றன.

இதனைக் கட்டட இடிபாடுகளில் இருந்து இறந்த நிலையிலும் குற்றுயிராகவும் பல மானிடர் மீட்கப்படும் நிலைமைகளை பத்திரிகைகளில் வெளியாகும் படங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம். கட்டடங்களின் முழுமையான பாரம் நிலத்தினால் தாங்கப்படுவதனால், நில அதிர்வின்போது கட்டடங்கள் சேதமடைவது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் கட்டட வடிவமைப்பின்போது (Design), அதிக கவனமெடுப்பின், கட்டடங்கள் ஆங்காங்கே வெடித்து சேதமடைந்தாலும், தவிடுபொடியாகி தரைமட்டமாவதைத் தவிர்த்து, மானிடருக்கு ஏற்படும் அவலங்களைத் குறைக்க முடியும்.

இதற்கான சிறப்புமிக்க வடிவமைப்புக்கள், தட்டுக்களின் எல்லைகளை அண்டிய நாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. பூமியதிர்ச்சி விளைவிக்கும் துன்பம் அளப்பரியது. இது எமது அன்புக்குரியவர்களை இழப்பதற்கும், எமது கடின உழைப்பின் மூலம் அடைந்த செல்வங்கள் ஒரு நொடியில் அழிந்து போவதற்கும் வழிவகுத்து விடுகிறது.

இந்த அனர்த்தங்கள் தொடர்பான அறிவியல் கற்கைகளைக் கற்று ஆழமாக ஆய்வு செய்வதன் மூலம், இந்த அனர்த்தத்திலிருந்து மனித குலத்திற்கு விடிவு கிட்ட நாமும் முயற்சிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.


அ.ஹரின் சுலக்ஸ்ஸி, யாழ். நகர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல