புதன், 11 டிசம்பர், 2013

“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி - 01

சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?

ப.சிதம்பரம், “ …இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், பிரபாகரன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு..

…இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு, தனி நாடு கேட்க முடியாது. இந்தியாவில் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தனி நாடு கோருகின்றனர். அதை சரி என்று இந்தியா ஏற்றுக் கொள்கிறதா? அப்படித்தான் இலங்கை ஏற்கவில்லை..” என்றார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, “இலங்கைப் போரில் இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றதும், புலிகள் தரப்பில் நடேசன் மூலமாக, குமரன் பத்மநாதன் வழியே இந்திய அரசிடம் உதவி கேட்டனர். மத்திய அமைச்சர் சிதம்பரம் அதற்கு முயற்சி மேற்கொண்டு, புலிகள் தரப்பிலும் இலங்கை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள பழ.நெடுமாறனும் வைகோவும், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அவர்கள் மூலம் தனி நாடு பெறலாம்’ என்று கூறி புலிகளை குழப்பிவிட்டனர். அதனால் நிலைமை மாறிப்போனது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்த சலசலப்பு, தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஒரு தரப்பினர், “கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்தபின் இவர்கள் கதை விடுகிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மற்றொரு தரப்பினரோ, “இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோர் இறந்து விட்டதால், தாம் கூறுவதை மறுத்துப் பேச ஆளில்லை என்பதால், தேர்தல் சமயத்தில் இவ்வாறு திசை திருப்பி விடுகிறார்கள்” என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இவர்கள் கூறுவது நிஜமா? அல்லது காங்கிரஸ்காரர்கள் ‘எமது பேச்சை கேட்டிருந்தால், பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கலாம்’ என்று கூறுவது நிஜமா என்பதில் பலத்த சர்ச்சை. (நெடுமாறன் ஐயா, சீமான் ஆகியோருக்கு இந்த சர்ச்சையில் சிக்கல் கிடையாது. காரணம், அவர்களுக்கு பிரபாகரன் உயிருடன் உள்ளார்)

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறோம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோரை தவிர, புலிகள் தரப்பில் இந்த விவகாரத்தை டீல் பண்ணிய மூவர் இன்னமும் உயிருடன் உள்ளார்கள். இந்தியாவில், அமைச்சர் ப.சிதம்பரத்தை தவிர, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய வேறு இருவர், இன்னமும் இந்தியாவிலேயே உள்ளார்கள்.

மத்திய அரசின் திட்டத்தை குழப்பினார்கள் என்று காங்கிரஸ் தரப்பால் குற்றம் சாட்டப்பட்ட பழ.நெடுமாறன், வைகோ ஆகியோரை, மேலே சொன்ன கணக்கில் சேர்க்கவில்லை. இவர்கள் இருவரை தவிர, இந்த விவகாரத்தில் தொடர்புடைய வேறு இருவர் இந்தியாவில் உள்ளார்கள்.

அவர்களில் ஒருவர், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமான, ஆனால் அரசியல்வாதி அல்லாத நபர். இரண்டாவது நபர், இந்தியாவின் தேசிய கட்சி ஒன்றின் தமிழகத்தை சேர்ந்த மாநில அரசியல்வாதி.

இவர்கள் இருவருக்கும் இந்த விவகாரத்தில் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விவகாரம் பற்றி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறுவதை பார்த்தால், இது ஒரு தடவை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போன்ற தோற்றம் ஏற்படுகிறது அல்லவா? ஆனால், நிஜம் அதுவல்லை.

இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இரு கட்டங்களுக்கும் இடையே சில மாதங்கள் இடைவெளி உண்டு. முதலாவது கட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோருக்கு தொடர்பு உண்டு. இரண்டாவது கட்டத்தில் தொடர்பு இல்லை.

சரி. அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதுபோல, “மத்திய அரசு சொன்னதை கேட்டிருந்தால், பிரபாகரன் ஒருவேளை உயிர் தப்பியிருக்கலாம்” என்பது எந்தளவுக்கு உண்மை?

அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் (விறுவிறுப்பு.காமில் நாமே பல தடவைகள் விமர்சித்துள்ளோம்), இந்த விஷயத்தில் அவர் கூறுவது, ஏறக்குறைய நிஜம். கே.எஸ்.அழகிரி கூறுவதும் அப்படியே.

இத்தனை ஆண்டுகளாக விறுவிறுப்பு.காம் படித்துவரும் வாசகர்களுக்கு, நாம் காங்கிரஸ் ஆதரவு மீடியாவோ, காங்கிரஸ் அனுதாபியோகூட அல்ல என்பது புரிந்திருக்கும். இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் அமைச்சர் சிதம்பரம் கூறுவது ஏறக்குறைய நிஜம் என்று, எமக்கு தெரிந்த விஷயங்களில் அடிப்படையில் சொல்கிறோம். We firmly stand on it.

சரி. உண்மையில் இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? இதோ, முழுமையான விபரங்கள்:

இந்த விவகாரம், யுத்தத்தின் இறுதி நாட்களில் தொடங்கியது அல்ல. யுத்தம் முக்கால் பங்கு முடிவடைந்து, கிளிநொச்சி நகரம் எந்த நேரத்திலும் ராணுவத்தால் கைப்பற்றப்படலாம் என்று இருந்த நிலையில், 2009-ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

அந்த நிலையில் தமிழ் மீடியா பிரசாரம், “விடுதலைப் புலிகள் தந்திரமாக பின்வாங்கி செல்கிறார்கள்” என்பதாக இருந்தது. ஆனால், நிஜ நிலைமை அப்படி இருக்கவில்லை. ராணுவ படைப்பிரிவுகளின் வெவ்வேறு திசையிலான தாக்குதல்கள் காரணமாக, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரத்தையும் கைவிட்டு, கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த கிளிநொச்சி அடுத்து ராணுவத்தின் கைகளில் விழப் போகிறது என்று புலிகள் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது. கிளிநொச்சியை கைவிட்டு பின்வாங்கினால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனை புலிகளின் தளபதிகள் மட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.

மீடியாக்களில் காட்டப்பட்ட பிம்பம் வேறு என்ற போதிலும், நிஜ நிலைமை இலங்கைக்கு வெளியே மிகச் சிலருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில், வட அமெரிக்காவில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனால் ‘நிலைமை படுமோசம்’ என்ற தகவல் 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

வட அமெரிக்காவில் வசித்தவருக்கு, தமிழக அரசியல் வட்டாரங்களில் நல்ல தொடர்பு உண்டு. அவர் தமக்கு கிடைத்த தகவல் பற்றி, இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருடன் விவாதித்திருக்கிறார். “இந்திய மத்திய அரசால், ஏதாவது செய்ய முடியுமா” என்று கேட்டிருக்கிறார்.

பின்னாட்களில் இந்த விஷயம் தெரியவந்தபோது வட அமெரிக்காவில் வசித்தவரிடம் நாம் ஒரு கேள்வி கேட்டோம். “தமிழகத்தில் ஈழ அரசியல் பற்றி அதிகம் பேசும் பலர் இருக்க, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், ஏன் இந்த இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டீர்கள்?” என்பதே நாம் அவரிடம் கேட்ட கேள்வி.

“இந்திய தேசியக் கட்சியின் இந்த தமிழக தலைவர் ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாதவர். மிகவும் நியாயமானவர். இவர் மூலம் செய்யப்படும் இப்படியான காரியங்களை தமது சுய அரசியல் லாபத்துக்காக வெளியிடவோ, பயன்படுத்தவோ மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் அவருடன் இதுபற்றி பேசினேன்” என்பது நமக்கு கூறப்பட்ட பதில்.

அந்த நம்பிக்கையை, குறிப்பிட்ட அரசியல் தலைவர் இன்னமும் காப்பாற்றி வருகிறார் என்பது, தமிழக அரசியலின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்று.

இந்த தமிழக தலைவர், அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியிருக்கிறார்.

இவர் தெரிவிப்பதற்கு முன்னரே, இந்திய உளவுத்துறை மூலம், விடுதலைப் புலிகளின் அப்போதைய இக்கட்டான நிலை அமைச்சர் சிதம்பரத்துக்கு தெரிந்திருந்தது. ஆனால், புலிகள் தரப்பில் இருந்து யாரும், அமைச்சர் சிதம்பரத்துடனோ, மத்திய அரசுடனோ தொடர்பில் இருக்கவில்லை.

தமிழகத் தலைவர், ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம், அந்த சந்தர்ப்பத்தில் முதல் தடவையாக மத்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு indirect தொடர்பு ஏற்பட்டது.

வட அமெரிக்காவில் உள்ளவர் யார்? அவருடன் தொடர்பில் உள்ள புலிகளின் தளபதி (நா.நடேசன்) யார்? என்ற விபரங்களை கேட்டு தெரிந்துகொண்ட அமைச்சர் சிதம்பரம், இதுபற்றி ஆலோசித்து சொல்வதாக தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. அந்த தகவல், வன்னியில் இருந்த நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், அடுத்தடுத்த தினங்களில் டில்லிக்கும், சென்னைக்கும், அமெரிக்காவுக்கும், வன்னியில் உள்ள புலிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடராக செய்திப் பரிமாற்றம் நடந்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவுக்கும், டில்லிக்கும் இடையே சில நேரடி உரையாடல்களும் இடம்பெற்றன. அமைச்சர் சிதம்பரத்தின் சில சந்தேகங்களுக்கான பதில், வன்னியில் இருந்து பெறப்பட்டு தெரிவிக்கப்பட்டது.

சரியாக சொல்வதென்றால், இது ஜனவரி 1-ம் தேதி (2008) நடந்தது. அன்று மாலை வன்னியில், பரந்தன் நகரை ராணுவம் நெருங்கிக் கொண்டிருந்தது. பரந்தன் வீழ்ந்தால், அடுத்த இலக்கு கிளிநொச்சி நகரம்தான் என்பது புலிகளுக்கு தெரிந்திருந்தது.

ஜனவரி 2-ம் தேதி, காலை 11.15க்கு இலங்கை ராணுவ தலைமையகம் நியூஸ் பிளாஷ் ஒன்றை அரசு டி.வி. சேனல் ரூபவாஹினியில் வெளியிட்டது. “பிளாஷ்: கிளிநொச்சி எந்த நிமிடமும் விழலாம். கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்திக்கு தயாராக இருங்கள்”. ஆனால், அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த அப்டேட்டும் இல்லை.

சுமார் 3 மணிக்கு, இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், விசித்திரமான தகவல் ஒன்று இருந்தது. “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்பதே அந்த செய்தி.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியாக இல்லை. ஆனால், “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை கைப்பற்றப்பட்டது” என்கிறது பாதுகாப்பு அமைச்சு.

பரபரப்புக்கு காரணம், இந்த நெடுஞ்சாலை, கிளிநொச்சி ஊடாக செல்கிறது! அப்படியானால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு விட்டதா?

இந்த நேரத்தில் பா.நடேசன் அமெரிக்காவில் இருந்த நபரை தொடர்புகொண்டு, “கிளிநொச்சி ராணுவத்திடம் எந்த நிமிடமும் வீழ்ந்து விடும். நாம் முல்லைத்தீவு நோக்கி நகர்கிறோம். இந்திய மத்திய அரசை தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்து, ஏதாவது செய்ய சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து டில்லிக்கு போகுமுன், “கிளிநொச்சி நகரை தெற்கில் இருந்து 57-ம் டிவிஷன் படைப்பிரிவு நெருங்கிவிட்டது. வடக்கே இருந்து நகர்ந்து வரும் அதிரடிப்படை-1 கரடிப்போங்கு ஜங்ஷனை கைப்பற்றிவிட்டு, கிளிநொச்சியை அண்மித்து விட்டது” என்ற செய்தியை வெளியிட்டது ராணுவ தகவல் மையம்.

இந்த அவசர சூழ்நிலையில் அமைச்சர் சிதம்பரம், தமது நிலைப்பாட்டையும், மத்திய அரசின் நிலைப்பாட்டையும் தெளிவாக தெரிவித்தார். இப்போது அவர் கூறிய அதே வார்த்தைகளைதான் அப்போதும் (2008-ல்) இடைப்பட்ட தொடர்பாளர்கள் மூலம் பா.நடேசனுக்கு தெரிவித்தார்.

“இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது” என்றார் ப.சிதம்பரம்.

இந்த தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது. (கட்டுரையின் நீளம் அதிகமாகிவிட்ட காரணத்தால், மீதி விபரங்களை நாளை வெளியிடுகிறோம்… ..தொடரும்)




விறுவிறுப்பு.காம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல