செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை

அத்தியாயம் 17

ஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராமல் தடுத்திருக்கக்கூடிய சந்தர்ப்பம், இந்த ரஞ்சித் பெரேரா, மற்றும் ஐயாவின் கைதுகளுடன் கைநழுவி போனது.



யுத்தம் முடிவதற்கு முன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்வதற்கு போடப்பட்ட திட்டமே, இவர்களது கைதுகளுடன் நடக்க முடியாது போனது.

2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருந்தால், வன்னியில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் குறைந்த பட்சம் தற்காலிகமாக சில மாதங்களுக்காவது நின்று போயிருக்கும். விடுதலைப் புலிகளுக்கு மூச்சுவிடவோ, தம்மை பலப்படுத்திக் கொள்ளவோ, அல்லது முள்ளிவாய்க்காலில் இருந்து தலைவர், மற்றும் தளபதிகள் தப்பித்துச் செல்லவோ ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று, கொழும்புவில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்ததுடன் சங்கிலி தொடராக இடம்பெற்ற கைதுகளில் விடுதலைப் புலிகளின் இறுதித் திட்டம் நடக்காமலே போனது.

யுத்தத்தை திரைமறைவில் முடித்து வைத்த கைகளில் பல, வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் கைகள்தான்.

இப்போது யுத்தம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், “இலங்கையின் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இந்திய மத்திய அரசு மறைமுகமாக உதவினார்கள், அந்த உதவி செய்தார்கள், இந்த உதவி செய்தார்கள் என்றெல்லாம் இப்போதும் சொல்பவர்கள் உள்ளார்கள்.

இந்தக் கதைகளில் பலவற்றை கேட்டு இந்திய அரசு தலையில் அடித்து, விதியை நொந்து கொள்வதை தவிர வேறு ஏதும் செய்ய அவர்களால் முடியாது. காரணம், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசுக்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளில், இந்திய உதவி 10 சதவீதம்கூட கிடையாது. மீதி எல்லாமே, வெளிநாட்டு – மேற்குலக நாடுகளின் – உளவுத்துறைகளின் பங்களிப்புதான்.

இறுதி யுத்தம் நடந்த கடைசி கட்டத்தில்தான் மேலைநாட்டு உளவுப் பிரிவுகள் மும்மரமாக உதவிகள் செய்தன என்றில்லை. 2007-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிக்க அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. எப்படி உதவியது என்று இந்த தொடரின் கடந்த அத்தியாயங்களில் விலாவாரியாக எழுதியிருந்தோம்.

அதிகம் போவானேன், யுத்தம் முடியும்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எந்தெந்த முக்கிய புள்ளிகள் உயிருடன் இருக்கக்கூடாது என ஒரு பட்டியலையே தயாரித்து வைத்திருந்தது ஒரு வெளிநாட்டு உளவுத்துறை. அந்தப் பட்டியலில் இருந்த யாரும் இப்போது உயிருடன் இல்லை.

2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி. அன்று, அதிகாலை வானில் இருந்து நடந்த விமானக் குண்டுவீச்சில், விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார்.

அப்போது, கிளிநொச்சிக்கு அருகில்கூட இலங்கை ராணுவம் வந்திருக்கவில்லை.

இருள் விலகாத நேரத்தில் கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்தில் இருந்து இரு விமானங்கள், (ஒன்று மிக்-27 ரக விமானம், மற்றது கிஃபிர் ரக விமானம்) புறப்பட்டன.

அப்போதைய இலங்கை விமானப்படையின் விமானங்களால், துல்லியமாக இரவு நேர தாக்குதல்களை செய்ய முடியாது. மிக்-27 விமானிகளால், Night Vision Goggles உபகரணங்களை வைத்து ஓரளவுக்கு சுமாராக இலக்கு வைக்க முடியும். ஆனால், கிஃபிர் விமானிகளால் அதுகூட முடியாது. அதில் பயிற்சியும் கிடையாது.

இலக்குகளை மிக துல்லியமாக, விமான காக்பிட்டின் டிஸ்பிளேயில் தெரியும்படி செய்தால் மட்டுமே குறிவைத்து தாக்க முடியும். அதற்கு ஒரு சாட்டலைட் டேட்டா டரான்ஸ்மிஷன் வசதி வேண்டும். அந்த வசதி, கடைசிவரை இலங்கையிடம் இருக்கவில்லை. (2011-ம் ஆண்டுவரை இந்தியாவிடமும் இல்லை)

2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அதிகாலை புறப்பட்ட இரு விமானங்களும், சூரியன் உதிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் கிளிநொச்சிக்கு மேல் உள்ள வான் பகுதிக்கு வந்தன. இந்த விமானங்கள் வானில் வட்டமடிக்க முடியாது. காரணம், வட்டமடிக்கும் நேரத்தில் கீழே இவர்களால் இலக்கு வைக்கப்பட்டவர்கள், உஷாராகி விடுவார்கள். இடம் மாறி விடுவார்கள்.

அதாவது விமானங்கள் கிளிநொச்சி வான் பகுதிக்கு வந்தவுடன் சரியாக ‘இலக்கு’ மேல் விமானத்தை பொசிஷன் பண்ணி விமானத்தில் உள்ள குண்டுகளை கீழே விழுத்த வேண்டும். இதை நாம் எழுதும்போது சுலபமான காரியமாக தெரியும்.

ஆனால், 30,000 அடி உயரத்தில் இது அப்படியொன்றும் சுலபமான காரியமல்ல.

இருள் விலகாத நேரத்தில் அந்த இரு விமானங்களில் ஒன்று குறிப்பிட்ட ஒரு பொசிஷனுக்கு வந்தபோது, விமானத்தில் இருந்த குண்டை கீழே விழ வைத்துவிட்டு விலகினார் விமானி. அடுத்த சில விநாடிகளில் இரண்டாவது விமானமும் சரியாக அதே பொசிஷனுக்கு வந்த தனது விமானத்தில் இருந்த குண்டை ரிலீஸ் செய்தது.

உடனடியாகவே இரு விமானங்களும் கிளிநொச்சியை விட்டு விலகிப் பறந்து கட்டுநாயக விமான தளத்துக்கு சென்றுவிட்டன.

இரு விமானங்களிலும் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட மொத்தம் 4 டன் (4,000 கிலோ) எடையுள்ள குண்டுகள், நேரே 90 டிகிரியில் தரையில் இருந்த காங்க்ரீட் பங்கரின் (பதுங்கு குழி) மேல் பகுதியில் விழுந்தன. அந்த பங்கருக்கு உள்ளேயிருந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இது நேட்டோ படைகள் ஈராக்கில் நடத்திய பங்கர் பஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் துல்லிய கணிப்பீடு. காங்க்ரீட் பங்கரை உடைத்து தரைமட்டமாக்க சுமார் 5000 முதல் 6500 கிலோ வரையான குண்டின் நேரடி உதைப்பு (90 டிகிரி) தேவை. ஆனால், 3,500 கிலோ உதைப்புடன், பங்கருக்கு உள்ளே இருப்பவர்களை உயிரிழக்க வைக்க முடியும் (அதிர்வு காரணமாக). உயிரிழப்பவர்களின் உடல்கள் சிதறாது. வாய், மற்றும் கண்களில் ரத்த கசிவு மட்டும் ஏற்படும்.

பங்கருக்குள் உயிரிழந்தவர் யார் என்பதை முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்ள நேட்டோ படைகள் பயன்படுத்திய உத்தி இது.

தமிழ்செல்வன் இருந்த பங்கரில் ஒவ்வொன்றாக வந்து, சரியான கோணத்தில் விழுந்தன அந்த குண்டுகள். அருகில் உள்ள பில்டிங்குகளில் சேதம் ஏதுமில்லை. அந்தளவுக்கு துல்லியமான தாக்குதல். (கிளிநொச்சியில் தமிழ்செல்வன் உயிரிழந்த அந்த பங்கரை, இப்போதும் ராணுவ அனுமதி பெற்று சென்று பார்க்கலாம்)

இதை நடத்தியது வெளிநாட்டு விமானங்களோ, வெளிநாட்டு விமானிகளோ அல்ல. இலங்கை விமானப்படை விமானங்களும், விமானிகளும்தான்.

ஆனால், precision target bombing தொழில்நுட்ப உதவி மட்டும் மேலைநாட்டு உளவுத்துறை கைங்கார்யம்.

அதிகாலை கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பியிருந்த தமிழ்செல்வன், தமது இடத்துக்கு வந்ததும், போன் அழைப்பு ஒன்றை மட்டும் செய்திருந்தார். அது, வெளிநாடு ஒன்றுக்கு செய்யப்பட்ட போன் கால்.

அதுவே போதும் மேலை நாட்டு உளவுத்துறையினருக்கு!

யுத்தத்தின் இறுதி நாட்களில், கொழும்புவில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டம் ஏதும் பலிக்காமல் இருக்க வெளியேயிருந்து மேலைநாட்டு உளவுத்துறை உதவி செய்ய, ‘ஆர்மி அங்கிள்’ வரை கைதானார்கள்.

ஐயாவும், ஆர்மி அங்கிளும் சேர்ந்து, ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் பயணத்துக்காக கொழும்பு ஏர்போர்ட் போகும் வழியில் தற்கொலை தாக்குதலில் கொல்லும் திட்டத்தையே, கடைசி நேரத்தில் புலிகளின் தலைமை பெரிதும் நம்பியிருந்தது என்பது, ஐயாவை விசாரித்தபோது தெரியவந்தது.

வன்னியில் இருந்து அவருக்கு வந்த உத்தரவில், “இந்த தாக்குதல் எப்படியும் வெற்றிகரமாக நடந்தேயாக வேண்டும். இதில் உன் (ஐயா) உயிர் போனால்கூட முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வன்னியில் தலைமையே அழிந்து போகலாம்” என கூறப்பட்டதாக விசாரணையின்போது ஐயா தெரிவித்தார்.

இந்த தாக்குதலை எப்படியும் சரியாக நடத்த வேண்டும் என புலிகள் வலியுறுத்தியதன் காரணம், ஜனாதிபதி ராஜபக்ஷவை கொல்லும் மற்றொரு தற்கொலை தாக்குதல் திட்டத்தை, அதற்கு 3 மாதங்களுக்கு முன் இதே ஐயா – ஆர்மி அங்கிள் டீம் கோட்டை விட்டிருந்தது.

அது நடந்தது, 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ம் தேதி.

அன்றைய தினம், கொழும்புவில் BMICH எனப்படும் பண்டாரநாயகே சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘தெயத கிருள’ (அர்த்தம் – தேசத்தின் மகுடம்) கண்காட்சி ஆரம்பமாக இருந்தது. அதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷே வருகை தந்தார்.

இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்த அன்று ஏற்பாடு செய்திருந்தார்கள் அய்யாவும், ஆர்மி அங்கிளும்.

முதலாவது மனித வெடிகுண்டு, கண்காட்சி மண்டபத்தில் வெடிக்க தயாராக சென்றார். அதில் ஜனாதிபதி சிக்கியதும், உடனே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்கள் என்பதால், மண்டபத்தில் இருந்து வைத்தியசாலை செல்லும் வீதியில், மற்றொரு மனித வெடிகுண்டு வெடிப்பதற்கு தயாராக இருப்பார் என்பதே திட்டம்.

முதலாவது மனித வெடிகுண்டு, இலங்கை ராணுவ சீருடையில், ஆர்மி அங்கிளின் ராணுவ ஜீப்பில் இருந்தார்.

அவரை அப்படியே BMICH காம்பவுண்டுக்குள் கொண்டுபோய் விடலாம் என ஆர்மி அங்கிள் நினைத்திருக்க, அந்த ஜீப் கேட்டில் நிறுத்தப்பட்டது.

அன்றைய தினம் ராணுவத்தில் பிரிகேடியர் பதவி தரம் மற்றும் அதைவிட உயர்ந்த பதவித் தரத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமே தமது வாகனங்களில் காம்பவுண்டுக்குள் செல்ல முடியும் என உத்தரவு வந்திருந்தது. ஆனால், ஆர்மி அங்கிள், லெப்டினென்ட் கர்னல் தர அதிகாரி என்பதால், அன்றைய தாக்குதல் நடக்கவில்லை. (தொடரும்)


விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல