ஆணிகளை அடிப்பதற்கு பயன்படும் விசை உபகரணமொன்றிலிருந்து பாய்ந்த ஆணி முகத்தை ஊடுருவிச் சென்ற நிலையில் நபரொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆணி விசையுடன் பாய்ந்ததால் அது தனது வாயினூடாக முகத்தை ஊடுருவிச் சென்றதையே விக்டர் பெனாவிடெஸ் ஆரம்பத்தில் உணரவில்லை. வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தோடவுமே அவர் சந்தேகம் கொண்டு மருத்துவர்களை அணுகியுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளைக்கு மிக அண்மையில் ஆணி நிலை கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் பெனாவிடெஸ், வீட்டுக் கூரையொன்றில் திருத்த வேலைகளை மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் கருவியிலிருந்து ஆணி வெளியேறியுள்ளது.
இந்நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் விக்டர் பெனாவிடெஸின் முகத்தை ஊடுருவிய ஆணி அகற்றப்பட்டது.
அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள செடர்ஸ் சினாய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கிம்பர்லி லீ விபரிக்கையில், ஆரம்பத்தில் விக்டர் பெனாவிடெஸ் தற்கொலை செய்யும் முகமாகவே தனக்குத்தானே ஆணியைப் பாய்ச்சிக் கொண்டதாக தாம் நினைத்ததாகவும் ஆணி முகத்தை துளைத்துச் சென்ற வழியிலேயே அதனை வெளியேற்றியதாகவும் கூறினார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக