ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’!

'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர்.

''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார். ஜிம்மில் கொண்டுபோய் விட்டு, 'பேட்டைக்காரன்’ பாத்திரம் எப்படி நடக்கணுமோ அதுபோல நடக்கப் பழக்கினார். 'பிராக்டிக்கலா விளக்குறதுக்கு முன்னால் நடிப்புன்னா என்னன்னு எனக்கு தியரிட்டிக்கலா சொல்லுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு வாரம் வகுப்பு எடுத்தார். உரைநடையில் எழுதுவதை உடல்மொழியில் கொண்டுவர்றதுதான் நடிப்புங் குறது புரிஞ்சுது. அதுக்குப் பிறகு நடிக்கிறது கஷ்டமா இல்லை.

எனக்கு ஒரே இடத்தில் இருந்து பழக்கம் இல்லை. ஆனால், இந்தப் படத்துக்காகத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தேன். என் மனைவி வாசுகிதான் எனக்கு ஸ்பான்சர் செய்து தமிழ்நாட்டில் தங்கவைத்தாள். ஊர் ஊராக சுற்றித் திரிந்ததால் நாவலோ, கதைகளோ எழுத முடியவில்லை. கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரண்டு வருடங்கள் ஒரே ஊரில் இருந்ததால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது’ என்ற குறுநாவலை எழுதிவிட்டேன்!''

''இலங்கையில் சேவல் சண்டை எல்லாம் உண்டா?''

''ஒரு காலத்தில் நடந்ததா கேள்விப்பட்டு இருக்கேன். இலங்கையில் உடுவில் தொடர் புள்ள நெடுந்தீவு என் சொந்த ஊர். சின்ன வயசில் இருந்து, மனிதர்களுக்கு இடையிலான சண்டைகளைத்தான் நேருக்கு நேரா பார்த்து வளர்ந்தேன். 96-ம் வருடத்தில் இருந்து நான் தொடர்ச்சியாக விடுதலைக்காகவும், சமாதா னத்துக்காகவும் வேலை செய்தேன். அவ்வப் போது போராளிகள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். முள்ளிவாய்க்கால் போரின் கடைசி கட்டத்தில் இதே நிலைமை தொடர்ந் தால், இறுதியில் சுற்றி வளைக்கப்படலாம் என்பதை முன்கூட்டியே சொன்னேன். ஆனால், என் வார்த்தைகள் செவி மடுக்கப்படவில்லை. கடைசியில், பெருந்தொகை மக்கள் கொல்லப்பட்டார்கள். வன்னி வடகாட்டில் இருக்கும் என் காணியும், என் அம்மாவின் சமாதியும் ராணுவத்தின் பிடிக்குள் போனது. அந்தக் காலகட்டத்தில் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளா னேன். சொல்ல இயலாத அந்த மனத் துயரில் இருந்து மீண்டு வரவே நான் 'ஆடுகளம்’ வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அது பெரிய ஆசுவாசமாக இருந்தது!''

''படத்தில் உங்களுக்கு ராதாரவிதான் டப்பிங் பேசி இருக்கார். இருந்தாலும், படப்பிடிப்பில் மதுரை வட்டார வழக்கைப் பேசி நடிப்பது சுலபமாக இருந்ததா?''

''சிங்களப் பெண் பூஜா தமிழ் சினிமாவில் வந்து தமிழ் பேசி நடிக்கும்போது, தமிழனான எனக்கு என்ன மொழிப் பிரச்னை? தவிரவும், ஈழத் தமிழர்களான எங்களுக்கு சினிமா, தொலைக்காட்சி வழியாக தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்கும் பல காலமாகப் பழக்கமான ஒன்றுதான். இந்தியத் தமிழர்களுக்குத்தான் ஈழத் தமிழ் விளங்குவது இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்குகளையும் புரிந்து கொள்ள முடியும். ஆடுகளத்தில் நான்தான் டப்பிங் பேச விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. டப்பிங் பேசிய ராதாரவியே, 'நீங்கள் பேசி இருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று சொன்னார். அவரே ஏற்பாடு செய்து, நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்து இருக்கிறார். என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!''

ஆனந்த விகடன்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல