புலம்பெயர் தமிழர்களால் வட்டி சூரி என்று அறியப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் திருகோணமலையில் இன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு உள்ளார்.
இவர் புலிகளின் உளவுத் துறை பொறுப்பாளரான பொட்டம்மானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவர். புலிகளின் உளவுத் துறையில் நிதிக்கு பொறுப்பாளராக செயல்பட்டவர். இவரது சொந்தப் பெயர் சூரியமூர்த்தி சுப்பிரமணியம். இவரது சொந்த இடம் வல்வெட்டித்துறை. வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர். இவரது மனைவி திருகோணமலையை சேர்ந்தவர். வட்டி சூரி நோர்வே பிரஜாவுரிமை பெற்றவர்.
இவரின் பொறுப்பில் 2000 கோடி ரூபாய் புலிகளால் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் புலிகளின் புலனாய்வுத் துறையின் காசு 1800 கோடி. கடல் புலிகளின் காசு 200 கோடி.
புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடு இந்நிதியை கையகப்படுத்திக் கொண்டார். இதன் ஒரு பகுதியை புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு வட்டிக்கு கொடுத்து வருகின்றார். இன்னொரு பகுதியில் திருச்சியில் மாத்திரம் 98 கடைகளை நடத்தி வருகின்றார்.
அத்துடன் இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை உட்பட பல மாவட்டங்களிலும் புலிகளால் ஒரு காலத்தில் நிர்வகிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களை இவர்தான் இன்றும் மேற்பார்வை செய்து வருகின்றார்.
இவர் தமிழ்நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கள்ள கடவுச்சீட்டில் வந்திருக்கின்றார்.
இவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் இவரை விசாரித்து விட்டு நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. திருகோணமலையில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். இவர் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக