வெள்ளி, 26 ஜூலை, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்-46

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தளபதிகள் புடை சூழ வீற்றிருந்து சுவாரஸ்யமாக பல்Nறு விடயங்கள் தொடர்பாக பம்பலடிக்கத் தொடங்கினார். தளபதிகளின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏனென்றால் இயக்கத்தில் ஏனைய தளபதிகள் கதைக்கத் தயங்குகின்ற விடயங்களைக் கூட அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக பம்பலாக கூறி முடித்த விடுவார். இவ்வாறு எல்லாத் தளபதிகளையும் போராளிகளையும் கிண்டலடித்து பம்பலடிப்பதில் அன்ரன் பாலசிங்கத்திற்கு நிகராக இயக்கத்தில் எவருமே இருந்ததில்லை. அன்ரன் பாலசிங்கம் போன்று ஏனைய தளபதிகள் அல்லது பொறுப்பாளர்கள் யாராவது பம்பலடித்து விட்டால் அது இயக்கத்தில் பெரும் விசாரணைகள் வரை போய் முடிவதுண்டு.

இவ்வாறு தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் கிண்டலடித்து வந்த அன்ரன் பாலசிங்கம் பாப்பாவையும் விட்டு வைக்கவில்லை. தமிழீழ விளையாட்டுத்துறைக்கு பாப்பா நியமிக்கப் பட்டதாக கேள்விப்பட்ட அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இருந்தவாறு பாப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் நான் நேரடியாக தாயகத்திற்கு வருகின்ற போது நேரில் சந்திக்கின்றேன் என்று கூறி விட்டு, தமிழ்ச்செல்வன் நல்ல பொறுப்பொன்றை உம்மிடம் தந்திருக்கின்றார் நீரும் பெரிய விளையாட்டு காட்டுகின்றீராம். நான் எல்லாத்திற்கும் தம்பியிடம் (பிரபாகரனிடம்) வருகின்ற பொழுது நேரில் சந்திக்கின்றேன் என்று கூறி பாலசிங்கம் தொடர்பை துண்டித்து விட்டார்.

தமிழீழ விளையாட்டுத்துறையின் பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனால் நியமிக்கப்பட்ட பாப்பாவின் பின்னணியை சற்று மேலோட்டமாக பார்ப்போமானால் பாப்பா புலிகளின் தென்மராட்சிப் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளராக மேஜர் கேடில்ஸ் இருந்த காலப் பகுதியில் ஒரு சிறு பையனாக காற்சட்டையுடன் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாமல் ஒரு உதவியாளராக செயற்பட்டு வந்தார். இந்தக் காலப்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் தமிழ்ச்செல்வனும் இயக்க நடவடிக்கைகளை மேஜர் கேடில்ஸ்சின் கீழ் இருந்து மேற்கொண்டு வந்தார். தமிழ்ச்செல்வனும் பாப்பாவும் பாடசாலைக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தது மட்டுமல்லாமல் இருவரும் தென்மராட்சிப் பகுதியை சேர்ந்தவர்களாவர். தென்மராட்சிப் பகுதியில் உள்ள மட்டுவில் நுணாவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட பாப்பாவுக்கு தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற தாழ்வுணர்ச்சி இருந்து வந்தது. குறிப்பாக தென்மராட்சி பிரதேசத்தில் மட்டுவில் நுணாவில் பகுதியில் சாதிய அடக்குமுறை மேலோங்கி காணப்பட்டது. இந்த நிலையில் பாப்பா தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டு சாதிய ரீதியாக சவால் விட்டவர்களை நேரடியாக சந்தித்து எச்சரிக்கை செய்து வந்தார்.

ஒரு கட்டத்தில் தமிழ்ச் செல்வனின் வேண்டுகோளுக்கு இணங்க தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட பாப்பா தென்மராட்சி மட்டுவில் வைரவ கோயிலடிப் பகுதி வீதியில் இருந்த புலிகளின் வாகையடி முகாமில் இருந்து செயற்பட்டு வந்தார். இந்த முகாம் ராசன் என்ற தனியார் ஒருவரின் வீட்டில் 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்தது. இந்த முகாமில் இருந்து செயற்பட்டு வந்த பாப்பா அன்றைக்கு தனது விளையாட்டுக்களையும் ஆரம்பிக்கத் தொடங்கினார். மட்டுவில் வாகையடி முகாமில் மூன்றாவது வீட்டில் இருந்த சண்முகலிங்கம் என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மீது பாப்பா காதல் கொண்டதையடுத்து உடனடியாக அவர் வேறு முகாமிற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டார்.
அன்றைய காலப் பகுதியில் இத்தகைய காதல் விவகாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு இயக்கம் அதி உச்ச தண்டனையான மரண தண்டனையை உடனடியாகவே நிறைவேற்றி வந்தது. அன்று தமிழ்ச் செல்வனால் காப்பாற்றப்பட்டார் பாப்பா. அதன்பின்னரும், கிளிநொச்சியில் இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சில் கொல்லப்படும் வரை தமிழ்ச் செல்வன் பாப்பாவை பல்வேறு நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் காப்பாற்றி வந்தார். பாப்பாவின் பல்வேறு குழப்படிகள் தில்லுமுல்லுகள் பற்றியெல்லாம் இயக்கத்தின் பல போராளிகளுக்கு தெரிந்திருந்த போதிலும் பாப்பா தொடர்பில் கூடுதலாக கதைத்தால் தமிழ்ச்செல்வன் தங்களை ஏதோ ஒர் கட்டத்தில் பழிவாங்கி விடுவார் என்ற அச்சம் போராளிகளிடத்தில் நிலவி வந்தது.

மட்டுவில் வாகையடி முகாமில் இருந்து பாப்பா செய்த குறும்புத்தனங்கள் மேஜர் கேடில்ஸ்சுக்கு தெரிந்திருந்தால் கேடில்ஸ் உடனடியாகவே பாப்பாவை போட்டுத் தள்ளியிருப்பார். ஏற்கனவே கேடில்ஸ் பெயரைக் கேட்டால் நடுநடுங்கும் அளவிற்கு மாற்று இயக்கத்தினரை உயிருடன் தீயில் செம்மணியில் கொளுத்திய கேடில்ஸ் தன் கைத் துப்பாக்கியால் பலரை போட்டுத் தள்ளியுமுள்ளார். அவ்வாறே இயக்கத்தின் போராளிகள் தொடர்பில் கேடில்ஸ் குற்றம் கண்டால் அவர்களுக்கும் உடனடியாகவே தண்டனை வழங்கி வந்தார். கேடியின் தண்டனையில் இருந்து தப்பிய பாப்பா தொடர்ந்து தப்பிக் கொண்டே இருந்தார்.

இவ்வாறு தப்பிக் கொண்டிருந்த பாப்பா தொடர்பில் அனைவரும் வாய்மூடி மௌனிகளாக இருந்த போதிலும் அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே பாப்பா தொடர்பாக நக்கல்களைக் கூறி வந்தார். இயக்கத்தில் தலைவருக்கு முன்னால் இருந்து சிகரெட் பத்துகின்ற உரிமை பாலசிங்கத்திற்கு மட்டுமே இருந்தது. ஏனையவர்கள் ஒளித்துக் கூட சிகரெட் பத்த முடியாது. இவ்வாறு பாலசிங்கத்திற்கு இயக்கத்தில் வெளிப்படையாகவே பல்வேறு விடயங்களைக் கதைப்பதற்கு அனுமதியிருந்தது. பாப்பா தொடர்பில் பாலசிங்கம் என்ன சொன்னார் என்பதை அறியும் ஆவல் உங்களிற்கு கூடுதலாக இருக்கும். அதை அடுத்த தொடரில் தொடர்ச்சியாக பார்ப்போம்.
-தொடரும்-
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல