வெள்ளி, 26 ஜூலை, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் -48

களமுனைகளில் இராணுவ ரீதியான பல்வேறு வெற்றிகளையும் ஈட்டிய போராளிகள தளபதிகள் திருமண பந்தத்திற்குள் வந்தவுடன் களமுனைகளை மறந்து குடும்பம் உறவினர் உறவு என்ற வட்டகைக்குள் சிந்திக்கத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக போராட்டம் என்ற கொள்கையை விட குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். இத்தகைய போராளிகள் தளபதிகள் மத்தியில் பாப்பாவும் இருந்த போதும் பாப்பா சற்று வித்தியாசமானவர். பாப்பா எப்பொழுதும் ஜொலியான மனிதராக விளங்கினார். பாப்பாவின் மன உணர்வுகளையும் பாப்பாவின் திருமணம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களையும் சற்று மேலோட்டமாக பார்த்து விட்டு செல்வது பொருத்தமாக இருக்கும்.

நான் ஏற்கனவே இப் பத்தியில் குறிப்பிட்டு வருவதைப் போன்று ஓர் ஜொலியான பேர்வழியாக வலம் வந்த பாப்பா ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்தது முதல் முள்ளி வாய்க்கால் முடிவுகள் ஏற்படும் வரை உல்லாசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அதாவது இயக்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த போதும் பாப்பா காதல் மன்னனாகவே வலம் வந்து கொண்டிருந்தார். பலரையும் தனது காதல் வலையில் வீழ்த்திய பாப்பா ஒரு கட்டத்தில் திருமணபந்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அதாவது பாப்பாவினுடைய காதல் நடவடிக்கைகளில் ஒன்று கடுமையான நெருக்கடிகளின் மத்தியில் நகர்ந்து திருமணம் வரை வந்துவிடுகிறது.

தென்மராட்சி நுணாவில் மட்டுவிலை சேர்ந்த பாப்பா வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஓரு யுவதியை திருமணம் முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை பாப்பாவிற்கு ஏற்படுகின்றது. பாப்பாவின் காதலியின் குடும்பத்தினர் சுற்றத்தார் உறவினர்கள் என அனைவருமே பாப்பாவின் திருமணத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்கத் தொடங்கினர். இதனை பாப்பாவும் மனைவியும் அலட்சியம் செய்து விட்டு திருமண பந்தத்திற்குள் நுழைகின்றனர். அதாவது இவ் எதிர்ப்புக்கு பிரதான காரணம் சாதிய ரீதியான பார்வையும் அதன் பக்கங்களையும் முறியடித்து ஒரு சாதனை வீரனாக திருமண பந்தத்திற்குள் நுழைந்து கொண்டது பாப்பாவிற்கும் மனைவிக்கும் ஒரு திரில்லான செயற்பாடாகவே இருந்தது. இருந்த போதிலும் இவர்கள் இருவரது உறவு நிலை நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை. அதாவது சாதிய ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாப்பாவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பாப்பாவின் மனைவி காலப்போக்கில் அதிருப்தி அடையத் தொடங்கினார். இந்த அதிருப்தியின் விளைவாக தொடர்ச்சியாக குடும்பத்தில் சண்டைகள் சச்சரவுகள் நீடிக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் இவர்களுக்கிடையில் பிரிவு ஏற்படுகின்றது. இந்த பிரிவு பாப்பாவின் மனைவியை கடுமையாக வாட்டி வதைக்கின்றது. இருந்த போதிலும் பாப்பா ஜொலியான மனிதராக வேறு உறவுகளை நாடிச்செல்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தார்.

இந்த நிலையில் தான் புலிகளால் கிளிநொச்சியில் நவீன முறையில் அமைக்கப்பட்ட அரசியல் துறையின் நடுவப் பணியகமும் புலிகளின் சமாதான செயலகமும் திறக்கப்படுகின்றது. இந்த சமாதான செயலகத்திலும் நடுவப்பணியகத்திலும் அடிக்கடி ஜொலியாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதன் தான் கண்ணாடி மிரேஸ். இவர் ஆரம்ப காலத்தில் புலிகளின் ஊடகத்துறையுடன் இணைந்து செயற்பட்ட போதிலும் பின்னைய நாட்களில் இவர் நடுவப் பணியகத்துடனும் சமாதான செயலகத்துடனும் இணைந்தவாறு சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தார். பாப்பாவைப் போலவே ஒரு ஜொலியான மனிதராக எப்பொழுதும் அயன் குலையாத உடைகளுடனும் வித்தியாசமான கொலோன்களையும் பாவித்துக் கொண்டு நடுவப் பணியகத்தையும் சமாதான செயலகத்தையும் மாறி மாறி சுற்றிக் கொண்டு திரிந்த கண்ணாடி மிரேசிற்கும் பாப்பாவிற்கும் இடையே இருந்த நட்பு இறுக்கம் அடைகின்றது. இவர்கள் இருவரும் உணர்வுகளிலும் நடவடிக்கைகளிலும் ஒன்றித்தவர்களாக காணப்பட்டனர். களமுனைகளில் போராளிகள் இரத்தம் சிந்தி சாவை அணைத்துக் கொண்டிருந்த போதிலும் இவர்கள் இருவரும் அந்த சிந்தனைகள் எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியுடனேயே எப்போழுதும் காணப்பட்டனர்.

பாப்பாவையும்; கண்ணாடி மிரேசையும் இயக்கத்தின் போராளிகள் தமிழ் செல்வனின் செல்லப்பிள்ளைகள் என கூறிக் கொள்வார்கள். நடைமுறையிலும் இத்தகைய நிலைப்பாடே இருந்து வந்தது. இந்த நிலையில் பாப்பாவின் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பத்தை தீர்த்து வைப்பது தமிழ்ச் செல்வனின் ஒரு வழமையான பணியாக மாறிக் கொண்டு வந்தது. தமிழ் செல்வன் அடிக்கடி இருவரையும் ஓற்றுமைப் படுத்துவதில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஒரு கட்டத்தில் பாப்பாவின் பொறுப்பு விலக்கப்பட்டு தமிழீழ விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாக சம்பியன் என்பவர் இயக்கத்தால் நியமிக்கப்படுகின்றார்.

இதன் பின்னர் பாப்பாவை அழைத்த தமிழ்செல்வன் அரசியல் துறையின் படையணி ஒன்றிற்கு பொறுப்பாக நியமித்ததுடன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கட்டாய ஆட்சேர்ப்பின் பிரசார பணிகளிலும் பாப்பாவை ஈடுபடுமாறு பணிக்கிறார். பின்னர் கிளிநொச்சியில் இலங்கை விமானப் படையின் தாக்குதலில் தமிழ்செல்வன் கொல்லப்பட்டதை அடுத்து நடேசன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகிறார். இதைத் தொடர்ந்து உடனடியாகவே யுத்தம் ஆரம்பிக்கப்பட, பாப்பாவை நடேசன் களமுனைக்கு அனுப்பி வைக்கின்றார். ஏற்கனவே ஜொலியாக திரிந்த பாப்பா களமுனைக்கு அனுப்பப்பட்டவுடன் மனம் குழம்பியவராக கடுமையான விரக்தியையும் மனச் சோர்வையும் எதிர் கொள்கின்றார். படையினர் பல முனைகளின் ஊடாக தந்திர உபாய வழிமுறைகளைக் கையாண்டு புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் முன்னேற்ற முயற்சியை மேற்கொள்கின்றனர். படையினர் முன்னேறத் தொடங்கிய போது தினமும் பல புலிப்போராளிகள் சாவைத் தழுவிக் கொண்டதுடன் மேலும் பலர் காயமடைந்து கள முனைகளில் இருந்து பின்னகற்றப் படுகின்றனர்.

இவ்வாறு தினமும் இழப்புக்களும் பின்னடைவுகளும் தொடர்ச்சியாக இடம்பெறத் தொடங்குகையில், பாப்பாவுடன் நின்ற பலரும் சாவைத் தழுவிக் கொண்டிருக்க, தனது சாவும் உறுதியாகி விட்டது என எண்ணிக் கொண்ட பாப்பா களமுனையில் இருந்து தப்பியோடவும் முடியாது வேறு காரணங்களைக் கூறி கள முனையை விட்டு வெளியேறவும் முடியாது என்ற இக்கட்டான நிலையில் ஒரு வேலை செய்கிறார். அதாவது முன்னேறி வருகின்ற படையினருடன் மோதலில் ஈடுபட்டால் சாவு நிச்சயம் என்ற நிலையில் தன்னைத் தானே சுட்டுக் காயப்படுத்திக் கொண்டால் களமுனையில் இருந்து வெளியேறி இயக்கத்தின் மெடிக்ஸிலோ(பாமசி) அல்லது அரச மருத்துவ மனையிலோ கொஞ்சக் காலத்திற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் உயிர் பிழைக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறார். படையினர் ஒரு அதிகாலை வேளையில் சண்டையை ஆரம்பித்த பொழுது தன்னிடம் இருந்த மைக்ரோ பிஸ்ரலை(கைத் துப்பாக்கியை) எடுத்த பாப்பா தனது காலிலே இலக்குத் தவறாமல் கண்ணை மூடியவாறு சுட்டுக் கொண்டார். இவ்வாறு சுட்ட பாப்பா களமுனையிலே தான் காயம் அடைந்து விட்டதாக தனது பிரதான களமுனைத் தளபதிக்கு தெரியப்படுத்துகின்றார்.

பாப்பா காயம் அடைந்ததை இயக்கம் பெரிதாக பார்த்ததா? அல்லது பாப்பாவின் தந்திர முயற்சியை இயக்கம் கண்டுபிடித்ததா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல