சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றுள்ளது. இதில் சென்ற பயணிகளை இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல்லா (வயது 43) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் இருந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் சந்தேகப்படும் விதமாக எதுவித பொருட்களும் இருக்கவில்லை. மேலும் அப்துல்லாவின் நடையில் மாற்றம் இருந்ததால் அவரிடம் மேலும் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் வயிற்றில் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்து இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த தங்க பிஸ்கட்டுகளை வெளியே எடுத்துள்ளனர். 7 தங்க பிஸ்கட்டுகள் அவரது வயிற்றினுள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு இந்திய ரூபா 20 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு சுற்றுலா விசாவில் வந்த அப்துல்லா கொழும்பிலிருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையொட்டி அப்துல்லாவை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் இக்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் பற்றியும் அவரிடம் விசாரணை நடத்திவருவதாக இந்திய இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக