நேற்றைய தினம் யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அந்தப் போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் சிவிகே சிவஞானம் தெரிவித்தார்.
அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு நல்லதொரு கட்டுமாணம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக் கட்டுமாணம் ஏற்படுத்தப்பட்டால் அடிப்படைப்பிரச்சனைகள் தானாகவே தீர்ந்து விடும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் படித்திருக்க வேண்டிய முக்கிய பாடம் கடந்த 60 வருடங்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
தேசிய இனம் என்பதனை அங்கீகரித்து அவர்கள் தமது அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்வதற்கான கட்டுமாணம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
தந்தை செல்வா போன்ற மிதவாத தலைவர்கள் முன்னர் மேற்கொண்டிருந்த எந்தவொரு பேச்சுவார்த்தைகளோ ஒப்பந்தங்களோ எதுவுமே பலனளித்திருக்கவில்லை. அதேபோன்று அமர்தலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழிதெறியப்பட்டன.இதைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிவுற்றுள்ளது. யுத்த நிறுத்தத்தின் போது இரு தரப்பினரும் ஒவ்வொரு தரப்பினர் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அரசு புலிகளை பலவீனப்படுத்துவதிலேயே முன்னின்று செயற்பட்டது என சிவிகே சிவஞானம் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக நீங்கள் எவருமே தமிழ் மக்களாகிய எம்மை நம்பவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக