செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

ஐயோ… இந்தக் கொடுமையைப் பார்க்கும்போதே இதயம் வெடிக்கிறதே!’ – வைகோ

பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள படங்களைப் பார்த்துக் கதறியுள்ள வைகோ, இவற்றைப் பார்க்கும்போதே இதயம் வெடிக்கிறதே என்று கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, தமிழ் ஈழ தேசியத் தலைவர், தமிழ்க்குலத்தின் தவப்புதல்வன், மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய பாலச்சந்திரன், சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சேனல் 4 வெளியிட்டு உள்ளது.

ஐந்து குண்டுகள் பாலச்சந்திரன் மார்பிலே பாய்ந்து உள்ளன. சண்டை நடந்தபோது, இருதரப்பிலும் குண்டுகள் பாய்ந்தபோது ஏற்பட்ட சம்பவம் அல்ல. சின்னஞ்சிறு பிள்ளையான பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ள ஒரு நிலவறைக்கு உள்ளே உட்கார்ந்து இருக்கிறார். அரைக்கால் சட்டை அணிந்து இருக்கிறார். கருப்பு சட்டை இடுப்பில் சுற்றப்பட்டு உள்ளது. தோள்களில் ஒரு பழைய லுங்கி,

அப்பிள்ளையின் பால்வடியும் முகம், சின்னஞ்சிறு மார்பு, ஒரு படத்தில் கையில் ஏதோ பிஸ்கட்டோ ஒன்றையோ வாயில் உதடுகளில் வைப்பதுபோல் தோற்றம்.

அடுத்த படத்தில் அந்த ஒளி தரும் கண்கள் எதையோ உற்றுநோக்கும் பார்வை. ஐயோ, அதைப் பார்க்கும் போதே இதயம் வெடிக்கிறதே! அடுத்த படத்தில் உயிரற்ற சடலமாகக் கிடக்கிறான் பிள்ளை. ஐந்து குண்டுகள் மார்பில் பாய்ந்து உள்ள அடையாளம்.

இதுகுறித்து, ஆய்வு செய்த நிபுணர் கூறுகிறார்:

மூன்று அடி இடைவெளியில் இருந்துதான் முதல் குண்டைச் சுட்டு இருக்க வேண்டும். அந்தத் துப்பாக்கியை நோக்கி பாலச்சந்திரன் கையை நீட்டித் தொட முயன்று இருக்கலாம். முதல் குண்டு பாய்ந்தவுடன் பின்புறமாக விழுந்துவிட்டான். அதன் பிறகு நான்கு ரவைகள் மார்பிலே பாய்ந்து உள்ளன.

கிடைத்து இருக்கக் கூடிய வீடியோ ஆதாரங்களின்படி, சிங்கள இராணுவ அதிகாரிகள் அங்கே இருந்து உள்ளனர். அந்த இராணுவத்தினர் வசம் உள்ள வீடியோ ஆதாரத்தின்படி, பாலச்சந்திரன் சடலம் கிடந்த இடத்திற்குப் பக்கத்தில், வேறு ஐந்து பேரின் சடலங்களும் கிடக்கின்றன. அவர்கள் விடுதலைப்புலி போராளிகளாகத் தெரிகிறது.

அவர்களது உடைகளைக் களைந்து அம்மணமாக்கி, கைகளையும், கண்களையும் கட்டி, உச்சந்தலையில் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். இது திட்டமிட்ட கோரப் படுகொலை ஆகும்.

தடவியல் துறையில் உலகப் புகழ்பெற்ற நிபுணர், பேராசிரியர் டெரிக் பவுண்டர், “இது நூற்றுக்கு நூறு உண்மையான தடயம்,” என்று உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

பாலச்சந்திரன் கண்முன்னாலேயே ஐந்து தமிழர்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் பாலச்சந்திரனையும் சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்தனர் என்பது, அணு அளவு ஐயத்துக்கும் இடம் இன்றி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று, சேனல் 4 தொலைக் காட்சியின் காணொளிக்காட்சிகள் சாட்சியம் தருகின்றன.

ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படு கொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?

அனைத்துலக மனித உரிமை வழக்கறிஞர் வில்லியம் சகபாஷ் இதுபற்றிக் கூறுகையில், கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அம்மணமாக்கப்பட்டு, சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு, இராணுவத்தின் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர்களே பொறுப்பாளிகள் ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மகிந்தவுன் அவன் சகோதரன்களும்…

எனவே, இந்தக் கோரமான கொலைகளுக்கு மகிந்த ராஜபக்சேவும், அவனது கொலைகார சகோதரர்களும் இராணுவத்தின் தலைமைத் தளபதிகளும் சிங்கள அரசுமே குற்றவாளிகள் ஆவார்கள். அதனால்தான், தமிழ் இனக்கொலை குறித்து சிங்கள் அரசு மீது, அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்கிறோம். ஜெனிவா மனித உரிமை கவுன்சில் அத்தகைய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உலகத்தின் மனசாட்சியின் கதவைத் தட்டுகிறோம்.

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களை, சிங்கள இராணுவ முகாமில் துன்புறுத்தி, 2010 ஜனவரி 7 இல் சாகடித்தார்கள். அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் சிகிச்சை பெற வந்தபோது, இந்திய அரசு, அன்றைய மாநில திமுக அரசு தமிழகத்துக்கு உள்ளேயே நுழைய விடாமல் கருணை இன்றி விரட்டி அடித்தது.

2011 பிப்ரவரி 20 இல் யாழ்ப்பாணத்தில், அன்னை பார்வதி அம்மாள் உயிர் நீத்தபின், அத்தாயின் சடலம் எரியூட்டப்பட்டபோது, மூன்று தெருநாய்களை சிங்கள இராணுத்தினர் சுட்டு, அச்சிதையில் வீசிய கொடுமை நடந்தது. முத்துக்குமார், முருகதாசன் உள்ளிட்ட 19 தமிழர்கள் உயிரையும் உடலையும் எரித்த நெருப்பின் பெயரால் உலக மக்களிடம் நீதி கேட்கிறோம்.

தாய்த் தமிழகத்து மக்களே, இளம் தலைமுறையினரே, இதயத்தில் குருதியைக் கொட்டும் இக்கொடுமைகளை எண்ணிக் கொதித்து எழுவோம். மிருகங்களைவிடக் கொடிய சிங்களனைக் கூண்டில் ஏற்றுவோம்!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல