புளத்சிங்ஹளவில் திருமண வரவேற்பு வைபவமொன்று மிக விசேடமாக நடைபெற்றது. மதுவோடு ஆடலும் பாடலுமாக இளைஞர்கள் களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த மண்டபத்தில் தொழில் செய்துகொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே சாய்ந்து அமர்ந்துள்ளார்.
அவருடைய உயிர் அப்போதே பிரிந்துவிட்டது.
இதையறியாத திருமண வைபவ ஏற்பாட்டாளர்கள் அதிக போதையில் தான் அவர் அவ்வாறு நிலத்தில் சுவரோடு சாய்ந்திருக்கிறார் என எண்ணியுள்ளனர்.
"இவர் ஒவ்வொரு தடவையும் இப்படித்தான். இந்தத் தடவை மண்டபத்தை மூடிவிட்டுச் சென்றால் தான் அடுத்த முறை ஒழுக்கமாக வேலை செய்வார்" என மண்டப முகாமையாளர் சற்றுக் கோபமாகக் கூறியுள்ளார்.
அவர் கூறியதை போதையில் இருந்த ஏனையோரும் ஏற்றுக் கொள்ளவே, மண்டபம் இறுக மூடப்பட்டது.
மறுநாள் மண்டபத்தை திறந்து இறந்தவரின் பெயரைச் சொல்லி அழைத்தபோது மௌனமே பதிலானது.
அருகில் சென்று பார்த்தபோதுதான் அவருடைய உயிர் பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தவறான எண்ணத்துடன் தாம் நடந்துகொண்ட விதம் எந்தளவு விபரீதத்தை உண்டுபண்ணியுள்ளது என்பதைப் பிறகுதான் மண்டப முகாமையாளர் உட்பட ஏனையோர் உணர்ந்திருக்கிறார்கள்.
"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய்" எனச் சொல்லப்படுவதன் யதார்த்தம் அப்போது விளங்கியது.
இது நல்லதொரு பாடம். திருமண வரவேற்பு வைபவத்துக்கு வந்த அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் புளத்சிங்ஹள மக்கள்.
வீரகேசரி இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக