வெள்ளி, 1 அக்டோபர், 2010

கிளிநொச்சி பாலியல் வற்புணர்ச்சி சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு!

சம்பவதினத்தன்று இரவு நான் எனது 40 வயது மகளுடனும் பிள்ளைகளுடனும் குறிப்பிட்ட அயல்வீட்டுப் பெண்ணின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் மற்றும் தம்பியாருடன் தங்கினோம். தம்பியார் வீட்டின் முகப்பிலும் வீட்டுக்காரப் பெண்மணி வீட்டின் உள்ளே இரு பிள்ளைகளுடனும் உறங்கினார். அன்று நள்ளிரவு வேளையில் 4 பேர் எம்மை தட்டி எழுப்பினர். வந்தோர்களில் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று வீட்டுக்காரப் பெண்மணியைத் தொந்தரவு செய்தார்.

பின்னர் மூவராக சேர்ந்து வீட்டுக்காரப் பெண்மணியை வெளியே இழுத்துக் கொண்டு சென்றனர். அவ்வேளையில் அவரது குழந்தைகள் (ஒருவர் 10 வயது மற்றையவர் 04 வயது) தமது தாயை விட்டு விடும்படி கதறி அழுதனர். இருப்பினும் அவர்கள் அப்பெண்மணியைக் கொண்டு சென்றதோடு மட்டுமின்றி நான்காவது நபர் குறிப்பிட்ட சாட்சியின் மகளையும் கூட்டிக்கொண்டு சென்றார் என இராணுவத்தினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தனியாக இருந்த இரண்டு பெண்கள் மீது 06.06.2010 அன்று பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று முதல் முறையாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரண்டு சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

அத்துடன் அவர்களால் பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட வாக்குமூலம் நீதிவான் முன்னிலையில் வாசித்துக்காட்டப்பட்டது இதனையடுத்து மேற்படி வழக்கு விசாரணையை நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். சாட்சியமளித்தவர்களில் ஒருவர் 60 வயதுப் பெண்மணியாவார். அவர் சாட்சியமளிக்கையில், நாங்கள் எமது வீட்டைப் பார்ப்பதற்கு சென்ற போது இராணுவம் அதற்கான அனுமதியை வழங்காததால் நாங்கள் எமக்குப் பரிட்சயமானவர்கள் வீட்டில் எனது மகளுடன் குறித்த தினத்தன்று தங்கினோம்.

அன்று பகல் வேளையில் எமது வீட்டைத் தாண்டிச் சென்ற இராணுவச் சிப்பாய்கள் இருவர் எம்மிடம் வந்து இந்த வீட்டுப் பெண்மணியின் கணவர் எங்கே? என விசாரித்தனர்.

அந்த பெண்ணின் கணவர் வவுனியா சென்று விட்டதாகவும் அன்று பிற்பகல் திரும்பி விடுவார் எனக் கூறினேன். நான் உடனே ஏனைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டேன். காலையில் மகளையும் வீட்டுக்காரப் பெண்மணியையும் அழைத்துக்கொண்டு போய் பொலிஸில் முறையிட்டோம் என்றார்.

இரண்டாவது நபர் சாட்சியமளிக்கையில், சம்பவ தினத்தன்று நானும் எனது தாயாரும் வீட்டைப் பார்க்க வந்து அயல் வீட்டில் தங்கிப் படுத்திருந்தோம். அன்றிரவு எனது உடலை யாரோ நெருடியது போல இருந்தது. விழித்து பார்த்தபோது அங்கு மூவர் சிவிலில் நின்றுகொண்டிருந்தனர். அந்த மூவரும் பின்னர் வீட்டுக்காரப் பெண்மணியை வெளியே கொண்டு சென்றனர். மற்றையவர் ஒருவர் கத்தியைக் காட்டி என்னை மிரட்டினார். எனக்கு சுகமில்லை என்று நான் அவரிடம் மன்றாட்டமாக கூறினேன். ஆனால் அவர் எனது உடைகளை பலாத்காரமாக கழற்றி சோதனை செய்தார். பின்னர் எனது கைகளைக் கட்டி விட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

கை கட்டுக்களை சிறிது நேரத்திற்குப் பின் நான் அவிழ்த்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு யாருமே இருக்கவில்லை. அச்சத்தில் உறைந்து போயிருந்தேன். அப்போது வீட்டுக்காரப் பெண்மணி அழுது கொண்டு வந்தார். அவருடன் சேர்ந்து அவரது தாயாரும் அழுதுகொண்டு வந்தார். அவருடன் சேர்ந்து அவரது தாய் வீட்டுக்கு சென்றோம். அங்கும் யாரும் இல்லை. அவர்கள் எனது தாயாருடன் சேர்ந்து இராணுவ முகாமிற்கு முறையிடச் சென்றிருந்தார்கள். அதன் பின்னர் அடுத்த நாள் பொலிஸாரும் இராணுவத்தினரும் தமது வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டார்கள் என அவர் சாட்சியம் அளித்தார்.

சாட்சிகளை அடுத்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறும் அவர்கள் குடும்பம் வருவாயின்றி அவதிப்படுவதாகவும், அவர்களது சம்பளப்பணத்தில் தான் அவர்கள் வாழ்க்கை நடத்துவதாகவும் குற்றவாளிகள் மூன்று மாதமாக விளக்கமறியலில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி யூலியானா கொஸ்வத்தை விண்ணப்பம் செய்தார்.

இதற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் ஆகிய இருவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சந்தேக நபர்களின் உரிமைகள் மட்டுமல்லாது பாதிக்கப்பட்டோரின் நலனும் கவனிக்கப்பட வேண்டும். வறியவர்களிலும் வறியவர்கள் இவர்கள் மிகக் கொடூரமான விதத்தில் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அநாகரிகமான மற்றும் இயற்கைக்கு மாறாக காம இச்சையைத் தீர்த்துக் கொண் டுள்ளனர்.

அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் அவ்வாறு அனுமதித்தால் பாதிக்கப்பட்டோருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் சட்டத்தரணி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். சாட்சிகள் மற்றும் வாதங்களை அவதானித்த நீதிவான் சந்தேக நபர்களுக்கான பிணை மனுவினை நிராகரித்து வழக்கு விசாரணையை 11.10.10க்கு ஒத்திவைத்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல