திங்கள், 10 ஜனவரி, 2011

யேசுதாஸின் பிறந்த நாள்

கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ் என்று அழைக்கப்படுபவர் ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர, கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார்.

சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.

இளமை வாழ்க்கை

யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும் அலைசுகுட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். தொடக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தமது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் கருநாடக இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.

திரைவாழ்வு

யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்தொடங்கினார்.

2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

தனி வாழ்வு

யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வாழ்ந்து வருகின்றனர். தவிர ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.

----------------------

1806: தென்னாபிரிக்காவின் கேப் டவுனிலிருந்த டச்சு குடியேற்றவாசிகள் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தனர்.

1810: நெப்போலியன் முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்து செய்தார்.

1863: உலகின் மிகப்பழைய பாதாள ரயில் பாதையான லண்டன் பாதாள ரயில்பாதை திறக்கப்பட்டது.

1920 : வேர்செய்ல்ஸ் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவு.

1946: ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் முதல் தடவையாக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர்  அரங்கில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.

1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் ஜனாதிபதியாக தாயகம் திரும்பினார்.

1984: அமெரிக்காவுக்கும் வத்திகானுக்கும் இடையில் 117 ஆண்டுகளின்பின் முழுமையான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல