ஞாயிறு, 13 ஜனவரி, 2013

இலங்கைக்கு ஒரு ரிஸானா போதும்!

டில்லி பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசி வாய் ஓயுமுன்னரேயே, உலகெங்கிலும் பேசுபொருளாய் அமைந்திருக்கிறது ரிசானாவின் சிரச்சேதம், அனேகமாக ஒவ்வொருவரினது /பேஸ்புக்கிலும் ரிசானாவுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தும், சவுதி அரசின் இரக்கமில்லாத தண்டனைகள் பற்றிய விமர்சனங்கள் என்றும் அனேக இடுகைகள், அவ்வாறான இடுகைகளில் ஒன்றுதான் ரிசானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைக் காட்டும் 2.37 நிமிட ஒளிப்பட நாடா, உடலைச் சில்லிட வைக்கும் அந்த சிரச்சேத ஒளிப்பட நாடாவில் இருப்பவர் ரிஸானா அல்ல, ஆனாலும் சவுதி அரேபியாவில் ரிஸானாவுக்கு இப்படித்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்ற ஊகங்களைச் சித்தரிக்கும் ஒளிப்பட நாடா அது,

 கிருலப்பனையில் 7 வயதேயான சிறுமி, உறவினன் ஒருவனாலேயே பாலியல் வல்லுறவு க்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட போதும், டில்லியில் ஓடும் பஸ்ஸில் இளம் பெண்ணொருவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட போதும், சவுதியைப் போன்று இங்கும் சட்டங்கள்; அமுல்ப்படுத்தப்பட்டால் பாலியல் வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என்கிற ரீதியில்கூடப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.ஆனால் இன்று அந்தச் சட்டங்களே ரிசானா நபீக் எனும் அப்பாவியின் உயிரைக் கொடுரமாகப் பறித்திருக்கின்றது, அது மாத்திரமல்ல, முஸ்லிம்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரித்து, அவர்களை அழித்தொழிக்க காரணம் கற்பிக்கும், அமெரிக்காவி னதும் எனைய மேற்குலக நாடுகளினதும் முயற்சிக்கும் துணை போயிருக்கின்றது, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வோருக்குச் சாதகமாகவம் அமைந்திருக்கின்றது இந்தத் தீர்ப்பு. சவுதியே உலகிலுள்ள முஸ்லிம் சமூகங்களுக்குமான அளவுகோலல்ல என்பதே இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியது,

உலக மதங்களில் ஒப்பீட்டளவில் சமூக சமத்துவம் நிலவும் மதமாக இஸ்லாமே இருப்பதாக தந்தை பெரியார் கூறியிருக்கிறார.;

கொடுந்தண்டனைகளும், அடிமை முறையும் நிலவிய ஒரு சமூகத்தில்தான் இஸ்லாம் தோற்றமெடுத்தது. உடனடியாக அனைத்திலும் பெரிய மாற்றங்களைச் செய்ய இயலாவிட்டாலும், தண்டனை என்பவற்றில் மன்னிப்பின் பங்கை அதிகப் படுத்தியதன் வாயிலாகவும், அடிமைகள் பலரை விடுவித்ததோடு புதிதாய் உருவான முஸ்லிம் சமூகத்தில் அவர்களுக்கு உயரிடம் தந்ததன் ஊடாகவும் எதிர் காலத்தில் இத்தகைய அம்சங்களில் முஸ்லிம் சமூகம் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியது முகம்மது நபிகளின் நெறிமுறை.

முஸ்லிம்களின் வேத நூலான குர் ஆன் கூட அளவற்ற அன்பாளனும் நிகரற்ற கருணையாளனும் என்றே ஆரம்பமாகின்றது. அதாவது மன்னிப்பின் அவசியத்தை அது வலியுறுத்தி நிற்கின்றது. ஆனாலும் ரிஸானாவின் விடயத்தில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது. ஒரு சுதந்திர மனிதனுக்கு- ஒரு சுதந்திர மனிதன், அடிமைக்கு – அடிமை. பெண்ணுக்கு – பெண் கொல்லப்பட வேண்டும் என்னும் முறையில் பலிக்குப்பலி அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் தளத்திலேயே நின்றுவிடவில்லை.

பழங்குடிச் சமுதாயச் சு+ழலைக் கடந்த ஓர் உயர்ந்த உன்னதமான பண்பாட்டை அதனுடன் சேர்த்து அல்குர்ஆன் கூறுகின்றது. அதாவது அல்குர்ஆன் இங்கே தண்டனைக் குறைப்பை ஊக்குவிக்கின்றது. அல்குர்ஆனில் சமூக வழக்க சொல்லாடல்கள் இடம்பெறுவதால் அக்காலத்தில் அரேபியாவில் பழங்குடிகள் மத்தியில் காணப்பட்ட ரத்த ஈட்டுப்பணம் செலுத்தும் வழக்கம் பரவலாக இருந்தமை; தெரியவருகின்றது. எனவே அல்குர்ஆன் அதைத்தான் மேலும் ஊக்குவிக்கின்றது.

இறைவன் வழங்கும் சலுகை எனவும் இறைவனின் கருணை எனவும் அதனை வர்ணிப்பதன் மூலம் அறத்தின் உயர்ந்த மட்டத்திற்கு அதை உயர்த்துகின்றது. ஆனால் ரிஸானாவைப் பொறுத்தவரை அந்த அறம் மீறப்பட்டிருக்கின்றது,

ரிஸானாவின் விடயத்தில் “மன்னிப்பு” என்கிற பேச்சே இல்லாமல் போனதற்கு ரிஸானாவின் ஏழ்மை காரணமா எனும் கேள்வி இங்கே தவிர்க்க முடியாததாகும்.

சா/பி நகர் மூதூரைச் சேர்ந்த ரிஸானா மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது குடும்ப வறுமையைப் போக்க தனது வயதைக் கூட்டிக் காட்டியே தான் சவுதிக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றேன் என்பது தெரியாமலேயே, 17 வயதில் பணிப்பெண்ணாகச் சென்றவர். அங்கு தனது எஜமானரின் நான்கு மாதங்களே நிரம்பிய குழந்தைக்கு புட்டிப்பாலூட்டுகையில் குழந்தை, புரையேறி இறந்து போகவே, கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். குழந்தையை ரிஸானாதான் கழுத்தை நெரித்துக் கொன்றதாக குழந்தையின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்,

ஒரு குழந்தைக்கு அதன் 2 வயது வரை தாய்ப்பாலூட்டுவது அதன் தயாரினது கடமையாக இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. தனது கடமையைத் தான் நிறைவேற்றத் தவறியமைக் குத் தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில், ரிசானா தனது குழந்தையின் கழுத்தை நெரித்ததாக குழந்தையின் தாய் குற்றம் சாட்டியிருந்திருக்கலாம். சவுதிப் பொலிசாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட ரிஸானா, துன்புறுத்தப்பட்டு பயமுறுத்தப்பட்டே, ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகச் சொல்லப்பட்ட போதும் பின்னர் தான் தவறிழைக்க வில்லையென்றும், வாக்குமூலமளித்துள்ளதோடு, அவர் மன்னிப்புக் கோரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது,

ரிஸானாவின் மீதான விசாரணைகளின் போதோ, அல்லது, மேன் முறையீட்டின்போதோ, குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பால் புகட்டியபோது புரையேறியதாலேயே குழந்தை இறந்தது நிரூபனமாகியிருக்கும்,

ரிஸானாவின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்’, ரிஸானாவை விடுவிக்கும்படி தனிப்பட்ட ரீதியில் சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்தார், குழந்தையின் தாயைச் சந்தித்து ரிஸானாவுக்கு மன்னிப்பினைப் பெறவென இலங்கையில் இருந்து பல தூதுக்குழுக்கள், சவுதி சென்று வந்திருக்கின்றன. ஆனாலும் குழந்தையின் தாயார் அவர்களைச் சந்திக்கவோ, குருதிப்பணத்தைப் பெற்றுக் கொண்டு, ரிஸானாவை மன்னிக்கவோ தயாராக இருக்கவில்லை.

சிறுமியாக இருந்தபோது ரிசானா செய்த தவறென்று வாதிட்டபோதும் அதுவும் சவுதியில் எடுபடவில்லை. காரணம், சவுதிச் சட்டங்களின் படியோ இஸ்லாமியச் சட்டங்களின் படியோ, பருவமடைந்த எவரும் சிறுவராகக் கருதப்படுவதில்லை, இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் தமது நாட்டுத் தொழிலாளர்கள், சவுதி அரேபிய சட்ட திட்டங்களுக்கு அமைய விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுவ தற்கு உடன்பட்டே தொழிலாளர் ஒப்பத்தங்களை மேற்கொண்டுள்ளன. சவுதி அரேபியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துத் தண்டனைகளுமே இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறான சட்டதிட்டங்கள் பற்றியோ,செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றியோ அறியாமலேயே ரிஸானா போன்ற அனேகர் தொழில்வாய்ப்புத் தேடி மத்திய கிழக்குநாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் தவறிழைக்கும் பட்சத்திலோ அல்லது, ரிஸானாவுக்கு ஏற்பட்டது போன்றதொரு நிலைமை அவர்களுக்கு ஏற்படும்போதோ, எம் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால், அவர்கள் வேலைதேடிச் செல்லும் நாடுகளில் எந்தவித தாக்கத்தையம் ஏற்படுத்த முடியாது எனுமிடத்து, வேலைதேடிச் செல்வோரிடம் இது குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகின்றது.

தனது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது பற்றியோ, மரணதண்டனை நிறைவேற்றப்படப்போகின்றது என்பது பற்றியோ அறியாமலேNயு தனது இளைமைப் பருவத்தை சிறையில் கழித்து, சிரச்சேதம் செய்யப்படும் நிமிடம்வரை, தான் விடுவிக்கப்பட்டு தனது குடும்பத்தவருடன் இணைந்து விடுவேன் என்கின்ற கனவுகளுடன் வாழ்ந்த ரிஸானாவின் நிலை இன்னொருவருக்கு வேண்டாம். இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்கு ஒரு ரிஸானாவே போதும்,

அனி…-(படங்கள் : கஸ்ஸாலி)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல