அண்ணன் ஆணையிட்டால் அனைத்தும் கொடுக்க தயார்!
“விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை கயவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள்” என்று கூறியுள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் அணி, “தேசியத் தலைவர் பிரபாகரனின் உத்தரவு வராமல் சொத்துக்கள் யாருடைய கைகளுக்கும் செல்லாமல் இறுதிவரை போராடுவோம்” என்று கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி செய்தி தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டர் இது தொடர்பாக தெரிவித்தபோது, “விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை திட்டமிட்டே கவரும் வகையில் தாமும் விடுதலைப் புலிகள் என்று கூறிக்கொண்டு கயவர்கள் பெரு முயற்சிகள் செய்கிறார்கள்.
அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது. அதற்காக நாம் இறுதிவரை போராடுவோம்.
இவை தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயருக்காக சேர்ந்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள். அவருடைய அனுமதியின்றி யாருடைய கைகளுக்கும் சென்று விடாமல், எம் தலைவர் நெடியவன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் பாதுகாத்து வருகிறோம். தேசியத் தலைவர் வெளிப்படும்போது இந்த சொத்துக்களை வைத்து பெரும் படை திரட்டி, தமிழீழம் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது சொத்து பற்றி கூச்சல் போடுபவர்கள், தேசியத் தலைவரிடம் போய் முறையிட வேண்டியதுதானே. தேசியத் தலைவரின் உத்தரவு வந்தால், யாருக்கும் சொத்துக்களை மாற்றிக் கொடுக்க நாம் தயார்.
அதற்குமுன், இந்த சொத்துக்களை வைத்து முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் இவற்றை அபகரிக்க நினைக்கிறார்கள் கயவர்கள். முன்னாள் போராளிகளுக்கு உதவினால், படை திரட்ட முடியாது. தமிழீழம் வெல்ல முடியாது. தமிழீழம் கிடைத்தவுடன் முன்னாள் போராளிகள் கௌரவிக்கப்படுவார்கள். அவர்கள் அப்போது உயிருடன் இருந்தால், ஓய்வூதியம் வழங்கப்படும். உயிரிழந்திருந்தால் உரிய பட்டங்கள் வழங்கப்படும்” என்றார்.
அட, நம்ம இந்திய அரசியல் ஸ்டைலிலேயே இவர்களும் போகிறார்களே! “அவர் உத்தரவு வரட்டும்.. தாராளமாக சொத்துக்களை தருவோம்.”
“அவர் உத்தரவு வருமா” என்று நாம் கேட்கவில்லை, “யார் அந்த ‘சொத்துக்களை கவர முயலும்’ கயவர்கள்? எந்த குரூப்? அதில் எந்த சப்-டிவிஷன்?”
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக