ஞாயிறு, 13 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 16

ஏற்கனவே விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் தொடர்பில் பார்த்து வருகின்ற நாம் யாழ்ப்பாணத்தின் ஊடகங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் மேலோட்டமாக பார்த்துள்ள போதிலும் அந்த ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவாக பார்ப்பதற்கு முன்னர் வன்னிப் பகுதியில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றியும் பார்த்துவிட்டு பின்னர் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவான பார்வையை செலுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்.

விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் முதன்மையான இடத்தை வகித்தவை புலிகளின் குரல் வானொலியும், ஈழநாதம் பத்திரிகையும் ஆகும். இதைவிட விடுதலைப் புலிகளின் N.T.T தொலைக் காட்சி மற்றும் புதினம், சங்கதி உள்ளிட்ட இணையத்தளங்கள் மற்றும் தமிழ்நெற் இணையத்தளத்தின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயவேண்டிய அல்லது பார்க்கவேண்டிய பக்கங்கள் இருக்கின்ற போதிலும் குறிப்பாக வன்னிப் பகுதி மக்களை தங்களது ஊடகத்தின் வலுவால் உணர்ச்சிமயமூட்டி வந்ததில் புலிகளின் குரல் வானொலியே முதன்மையான இடத்தை வகித்து வந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதான ஊதுகுழலாக இந்த புலிகளின் குரல் வானொலி செயற்பட்டு வந்தது. புலிகளின் குரல் வானொலி பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தனது ஒலிபரப்புச் சேவையை முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரை நடத்தி முடித்தமை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகும்.படையினர் முள்ளிவாய்க்கால், மாத்தளன் வரை தமிழ் மக்களை யுத்தத்தின் மூலம் ஒரு பகுதிக்கு ஒதுக்கிச் சென்றபோது புலிகளும் மக்களோடு மக்களாக அந்தப் பகுதிகளில் ஒதுங்கிக் கொண்டனர். இந்த நிலையில் அந்த சூழ்நிலையிலும் தலைவரிடம் திட்டம் இருக்கிறது, வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க வாருங்கள் என்ற பிரச்சாரத்தை புலிகளின் குரல் வானொலி நிகழ்த்தத் தவறவில்லை.

குறித்த புலிகளின் குரல் வானொலியின் பிரதான பொறுப்பாளராக ஜவான் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தார். குறித்த ஜவான் என்ற போராளிக்கு பின்னைய நாட்களில் தமிழ் அன்பன் என்ற பெயர் புலிகளால் சூட்டப்பட்ட போதிலும் வன்னிப் பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் ஜவான் என்ற பெயரையே பயன்படுத்தி வந்தனர்.

இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட காலப்பகுதியில் ஜவான் என்ற இந்தப் பொறுப்பாளர் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் பிரதான கதாநாயகனாக வலம்வந்தார். மாற்று இயக்கத்தினரைப் போடுவது இந்திய இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்களை சுட்டுத்தள்ளுவது உட்பட பலரது மரணங்களுக்கு இந்த ஜவான் பொறுப்பாளராக இருந்தார்.

இதன்பின்னர் வன்னிப் பகுதிக்கு இவரை உள்வாங்கிய பிரபாகரன் தன்னுடன் காட்டுப் பகுதியில் தனது நம்பிக்கைக்கு உரிய ஒருவராக வைத்துக் கொண்டிருந்தார். புலிகளின் பிரச்சார விளம்பரங்கள் மற்றும் வெளிநாட்டு பிரச்சார நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு ஜவான் பொறுப்பாளியாக இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் புலிகளின் குரல் வானொலி வெளிப்படையாக பிரபாகரனால் இயங்க வைக்கப்பட்டது. இதற்கு முழுமையான பொறுப்பையும் ஜவான் எடுத்துக் கொண்டார்.

இதன் பின்னர் இலங்கை அரச படைகளும், புலிகளும் மோதல் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கிய பொழுது பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும் இந்தப் புலிகளின் குரல் வானொலி சந்தித்து வந்தது. தமிழ் மக்களை தொடர்ச்சியாக கூடுதலான உணர்வேற்றி உணர்ச்சி மயப்படுத்தும் செயற்பாட்டில் இந்த வானொலி பிரதான இடத்தை வகித்தமையால் பிரபாகரனும் இந்த வானொலிக்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுக்க தவறவில்லை.

யாழ்ப்பாணம் வன்னிப் பகுதியின் பல பகுதிகளில் இந்த வானொலி செயற்பட்டு வந்த போதிலும் இறுதியாக கிளிநொச்சிப் பகுதியில் இந்த வானொலி சகல வசதிகளுடனும் இயங்கி வந்தது. இந்த நிலையில் இந்த வானொலி நிலையத்தின் மீது இலங்கை வான் படையினர் குண்டுவீச்சு தாக்குதலை நடத்திய போது வானொலியில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் உட்பட புலிகளின் உறுப்பினர்களும் சிலர் பலியாகி இருந்தனர்.

இதன் பின்னர் பிரபாகரனின் உத்தரவிற்கு இணங்க மிகவும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய பதுங்கு குழிகள் உடனடியாக அமைக்கப்பட்டு இந்த வானொலி தொடர்ந்தும் அதே இடத்தில் இயங்க வைக்கப்பட்டிருந்தது. படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த வானொலி விசுவமடுப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் இயங்கி வந்தது. பின்னர் வேறும் சில பகுதிகளில் இயங்கி, இறுதியில் முள்ளி வாய்க்காலில் இந்த வானொலி இயங்கிய வேளை தனது இறுதி மூச்சையும்; முள்ளி வாய்க்காலுடன் நிறுத்திக் கொண்டது.

புலிகளின் குரல் வானொலியின் வளர்ச்சிப் பாதையில், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரபாகரனிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளால் நோர்வேயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிநவீன கருவிகள் அதன் வியாபகமடைந்த செயற்பாட்டிற்கு பெரிய அளவில் உந்துதல் அளித்தது. குறிப்பாக முன்னர் இந்த வானொலியை வன்னிப் பகுதியிலும், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் மட்டுமே கேட்கமுடிந்த போதிலும் நோர்வேயால் வழங்கப்பட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து இதன் செயற்பாட்டை தமிழ்நாடு வரை புலிகள் விஸ்தரித்திருந்தனர். இவ்வாறு புலிகளிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புலிகள் தங்களது வானொலி ஊடகச் செயற்பாட்டிற்கும் வளம் சேர்த்துக் கொண்டனர்.

ஓட்டு மொத்தத்தில் புலிகள் சமாதான ஒப்பந்தத்தை அடுத்த சண்டைக்குரிய ஆயத்தத்திற்கு பயன்படுத்த முற்பட்ட போதிலும் புலிகளிற்குரிய ஆயுத விநியோகங்கள் சீரற்றுப் போனமையால் புலிகள் தமது இலக்கினை இறுதிவரை எட்டமுடியாமல் போய்விட்டது. ஆனாலும் புலிகளின் ஊடகச் செயற்பாடுகள் இறுதி வரைக்கும் உறுதியாக தொடர்ந்த வண்ணமே இருந்தது.

இறுதியாக முள்ளிவாய்க்காலில் தனது நெஞ்சுடன் பெரியளவிலான குண்டொன்றைக் கட்டியவாறு அதனை வெடிக்கச் செய்யும் வரைக்கும் ஜவான் என்ற இந்தப் புலிகளின் குரல் பொறுப்பாளர் தனது வானொலியின் செயற்பாட்டை ஒருநிமிடமும் நிறுத்தி வைக்கவில்லை. உணர்ச்சிமயமான வானொலிச் செய்திகள் உரைகள் மூலம் ஏனைய போராளிகளையும், பொதுமக்களையும் சூடேற்றி யுத்தமுனைக்கு அனுப்பிவைத்த இப் பொறுப்பாளர், ஒருவிடயத்தில் மட்டும் நிதானமாக நடந்துகொண்டார். அதாவது அரச படைகளிடம் சரணடையாமல் தன்னைத்தானே அழித்துக் கொண்டார்.

இது அவரின் துணிச்சல் மிகுந்த ஒரு செயற்பாடா? அல்லது படையினர் தான் சரணடைந்தாலும் தன்னைத் விட்டுவைக்கமாட்டார்கள் என்று எண்ணி;க்கொண்டாரா? அல்லது புலிகளிற்கும், நோர்வே அரசிற்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அரச படையினர் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டால் பல விடங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று அஞ்சிக்கொண்டாரா? அல்லது மக்கள்முன் புனர்வாழ்வு பெற்று எந்த முகத்துடன் நடமாடுவது என்று அஞ்சினாரா? அல்லது தனது கொள்கையில் இறுதி வரைக்கும் உறுதியாக இருந்தேன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டாரா? என்னும் பல கேள்விகள் உங்களிடம் எழலாம்.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை தேடவேண்டிய தேவை இருக்கின்ற அதேவேளை விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் தொடர்பில் மேலும் பார்க்கவேண்டிய தேவைகள் உள்ளமையால் தொடர்ந்து பார்ப்போம்.

வே. அர்ச்சுணன்
(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல