புதன், 14 ஏப்ரல், 2010

எங்களிடம் வார்த்தைகளில்லை – தேவதைகளின் புன்னகை

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது.

அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை என்று உதயா என்ற முன்னாள் பெண்போராளி குறிப்பிடுகிறாள். நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அவள் போராளியாக மாறியிருந்தாள். மிக மென்மை கொண்ட உதயாவால் எப்படி அந்த களங்களை எதிர் கொள்ள முடியும் என்றுதான் வியப்பாக இருந்தது. மிக மெல்லிதாகவே அவள் பேசுகிறாள்.

உதயா இப்பொழுது புன்னகைத்தபடியிருக்கிறாள். இரண்டு ஊன்றுகோல்களை ஊன்றியபடி கனி என்ற மற்றொரு பெண் வருகிறாள். வெட்டப்பட்ட அவளது தலைமுடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. அதை இழுத்துக் கட்டியபடி கனி வருகிறாள். வன்னியில் புளியங்குளத்தை சேர்ந்த கனி இறுதி நாட்களில் தன் அண்ணாவின் தொடர்பையும் இழந்து விட்டாள். இராணுவப் பகுதிக்குள் போகும்படி அவளையும் அவளின் தாயையும் அவளது அண்ணன் கூறியிருந்த பொழுதும் அதற்கு இடையில் அவளும் சூழ்நிலைக்காக போராளியானாள்.

செல்வி தனது ஒற்றைக் கையை இழந்தபடி வருகிறாள். செல்வி துடிதுபடிப்பானவள். ஷெல்லில் தன் ஒற்றைக் கையை இழந்த அவரை பார்த்து எப்படி இப்படியானது என்று கேட்கும் தைரியமும் மனநிலையும் யாருக்கும் வராது.

செல்வியைத் தொடர்ந்து, ஒற்றைக் கையில் காயமற்று இயங்காது தூங்கும் கையை ஏந்தியபடி அருளினி என்ற இன்னொரு பெண் வருகிறாள். அருளனி தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற மிகுந்த சிரமங்களை அனுபவிப்பதாக கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இயங்காத அந்தக் கை தன்பாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. எழுதும் வலது கையை இழந்ததினால் அவள் பல நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் எனவும் உதயா சொல்லுகிறாள். ஒரு திடமான பெண்ணாக நம்பிக்கையளித்தபடி அருளினி இருக்கிறாள்.

எனக்கு என் நண்பிகள் எல்லா உதவிகளையும் செய்வார்கள் என தன் பாதிக்கப்பட்ட ஒற்றைக் கையை மடியில் தூக்கி வைத்தபடி குறிப்பிடும் அருளினி ஒரு குழந்தையை மாதிரிதான் புன்னகைக்கிறார். இப்பொழுது நம்பிக்கை கொண்டபடி தன்னைக் கட்டியெழுப்புவதைப்போல அவரது புன்னகை இருக்கிறது.

இது எப்படியான சித்திரவதைச்சாலை என்பதை சொல்லுவது மிகச் சிரமமானது என்று குறிப்பிடும் கனி அங்கு யாரும் எங்களை தடிகளால் தாக்கவில்லை. ஆனால் தண்ணீருக்காக நாங்கள்தான் அடிபட்டுக் கொண்டிருப்போம். ஒரு வாழி தண்ணீரில் தோய வேண்டும். அந்த ஒரு வாழி தண்ணீரும் வடிய எவ்ளவு நேரம் ஆகும்? அந்த கொஞ்ச நீருக்காக வரிசையில் நிற்கத் தொடங்கினால், காலை மாலை என்று வரிசை கட்டி எங்களை எண்ணுவார்கள் நாங்கள் ஓடிவிடலாம் என்பதற்காக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

வீட்டுக்கார் பார்ப்பதாக சந்திப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வர முடியும். அதுவும் கிராம சேவையாளரின் அனுமதி ஒவ்வொரு முறையும் எடுக்க வேண்டும்.

அப்படி வரும் பொழுது கொண்டு வரும் பொருட்களை தந்து விட்டு திரும்பிச் செல்லுவதற்குத்தான் அவர்களது நேரம் சரியாகி விடும். பிறகு விசில் சத்தம்தான் எங்கள் காதை கிழிக்கும். நாங்களே சமைத்து சாப்பிடுவோம். ஊத்தையும் புழுதியுமாக எமது நாட்கள் நிறைக்கப்பட்டிருந்தன என்று கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவர்களுக்கிடையில் தனது இரண்டு வயது மகனை வைத்துக் கொண்டு மற்றொரு பெண் எனது பார்வைக்கு தெரிகிறாள். மிக நீண்ட காலமாக அவரும் அவரின் கணவரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததின் காரணமாக கணவர் மற்றொரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். நிறைய பெண்போராளிகள் தங்கள் கணவர்மார் எங்கு எப்படி இருக்கிறார்கள்., உயிருடன் இருக்கிறார்களா என்றே தெரியாதபடி இருக்கிறார்கள். இப்படி அவர்கள் சொல்லியது பின்னர் பசில் ராஜபக்ஷ பெயரில்லாதவர்கள் இறந்து விட்டார்கள் என்றே அர்த்தப்படும் என்பதுடன் பொருந்துகிறபோது அதிர வைக்கிறது.

அண்ணாவை இறுதியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொழுது சந்தித்தேன். அவன் நெருப்பாய் எரியும் களத்தில் நின்று சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். எங்களைப்போய் சரணடையுங்கள் என்று சொல்லியவன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்று கனி முகத்தை கோணலாக்கியபடி குறிப்பிடுகிறாள்.

ஓற்றைக்காலை இழந்தபடி கால்சிதைவுகளால் ஊன்றுகோல்களுடன் நடந்தபடி உடல் காயங்களுடன் என்று ஒவ்வொருதரும் வெளியில் வந்து செல்லுகிறார்கள். இன்னும் உயிர் இருக்கிறது எனபதை புரிய வைத்தபடி ஏக்கங்களும் பிரிவுகளும் காத்திருப்புகளும் ஆறாத உள் காயங்களும் என்று வலிகளை தங்களுக்குள் வைத்திருக்கும் இந்த முன்னாள் பெண்போராளிகளை ஒரு யுத்தத்தின் பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளாக்யிருக்கிறது காலம்.

இவர்களில் கொஞ்சப் பேர் மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பெண்கள் தொடர்ந்தும் வாழ முடியாதபடி காலத்திற்கும் சூழலுக்கும் பொருந்தாபடி சித்திரவதைகளை விரிக்கும் அந்த முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விரைவில் விடுதலை செய்து புன்னகைகளையும் அவர்களது உள்ளங்களையும் காப்பாற்றும் அவசியம் அனைவரிடமும் இருக்கிறது.

குறிப்பு ; இங்கு இடம்பெரும் பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்களின் பாகாப்பு கருதி பல பிரச்சினைகள் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளன.

GTN இற்காக நிமல்நேசன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல