இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை தவறான விடயமாகும் என தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
"தமிழ் ஆயுத போரட்டக்குழுவின் தலைவராக இருந்த குட்டிமணிக்கு 1982ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்த போது தமிழர் விடுதலைக் கூட்டணி குட்டிமணியை வட்டுக் கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து. அத்துடன் அவரின் பெயர் வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்த ஒருவர் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முடியும் என்றால், நீதிமன்றத்தில் தீர்ப்பு எதிராக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏன் பறிக்கப்பட வேண்டும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
1971 ஆம் ஆண்டிருந்த அரசாங்கம் அன்று புரட்சி நடத்திய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியது. ஆனால் இன்றைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிலருக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்கியுள்ளது.
அவ்வாறில்லாமல் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கியிருந்தால், இன்று சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக கருணா, பிள்ளையான், கே.பி போன்றோரை உவமானமாக கூறமாட்டார்கள் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக