புதன், 2 பிப்ரவரி, 2011

தேநீர் பருகுங்கள்!

அவர் ஒரு முடாக் குடியர் மதுக் குடியர் அல்ல. தேநீர்க் குடியர்

“எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் தேநீர் குடியுங்கள். உடலுக்கு நல்லது. கான்ஸர், பிரஸர், இருதய நோய் எதுவும் வராது எண்டு எழுதுறாங்கள். நானும்தான் எவ்வளவு தேத்தண்ணி குடிக்கிறன். ஆனால் எனக்கு நீரிழிவு, பிரஸர், கொலஸ்ட்ரோல், ஹாட் வருத்தம் ஒண்டும் மிச்சமில்லாமல் வந்திடுத்து’ என்று சொன்னார்.

‘இந்தாளுக்கு நிறையச் சீனியும் பாலும் விட்டால்தான் தேத்தண்ணி சரிப்பட்டு வரும்’ என்றாள் பக்கத்தில் நின்ற மனைவி. நிறையச் சீனியும் பாலும் விட்டு தேநீர் அருந்தும்படி எந்தப் புத்தியுள்ள மனிதனும் சொல்லியிருக்க மாட்டான். எழுதியிருக்கவும் மாட்டான். அது அவர் தனது நாக்கின் சுவை மொட்டுக்களைத் திருப்திப்படுத்தச் செய்ததே அன்றி ஆரோக்கியத்திற்காக அல்ல.

தினமும் மூன்று கப் தேநீர் அருந்தி வந்தால் இருதய நோய், பக்கவாதம், போன்றவற்றால் இறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என சில காலத்திற்கு முன் JAMA என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை கூறியது.

இந்த நன்மை பச்சைத் தேநீர் (Green Tea) அருந்துவதால்தான் மட்டுமே என மேலும் கூறியது. நாங்கள் பொதுவாகக் குடிப்பது நன்கு பதப்படுத்தப்பட்ட தேயிலையால் தயாரிக்கப்படும் கறுப்புத் தேநீர் ஆகும். இது அத்தகைய நல்ல விளைவுகளைக் கொடுக்காதாம் எனவும் கூறியது.

ஆயினும் வேறு ஆய்வுகள் நாம் அருந்தும் கறுப்புத் தேநீரும் பல நல்ல விளைவுகளைக் கொடுக்கும் என்கின்றன. மேலும் சுவீடன் நாட்டில் 61,000 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் கறுப்புத் தேநீர் குடிப்பதால் சூலகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு எனத் தெளிவாகக் கூறியது.

இன்னொரு ஆய்வு சுவாரஸ்யமானது. இந்த ஆய்வின் போது கொதிக்க வைத்த நீர், கறுப்புத் தேநீர் (பிளேன்ரீ) பால்த் தேநீர் ஆகியவற்றை வேறு வேறு நபர்களுக்குக் கொடுத்து, அவற்றால் அவர்களின் இரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களை ஸ்கான் மூலம் பரிசோதித்தார்கள்.

கறுப்புத் தேநீர் அருந்திய போது இரத்த நாடிகளில் இரத்த ஓட்டம் நல்லபடியாக அதிகரித்தது.

ஆயினும் கொதிக்க வைத்த நீர் பால்த் தேநீர் ஆகியவற்றை அருந்திய போது எத்தகைய நல்ல விளைவுகளும் ஏற்படவில்லை.

இதனால்தான் முதலில் பேசியவருக்கு தேநீர் குடித்தால் எவ்வித நன்மையும் ஏற்படாதது மட்டுமின்றி நீரிழிவு, கொலஸ்ட்ரோல், இருதய நோய் யாவும் வந்தன.

எனவே பிளேன் ரீ குடியுங்கள், பால் சேர்க்க வேண்டாம். சீனியையும் குறைவாகவே சேருங்கள்.



டொக்டர்

எம். கே. முருகானந்தன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல