வியாழன், 17 பிப்ரவரி, 2011

சிறுவர் தொடர்பான பிரச்சினைகளும் சட்டப் பாதுகாப்பும்

கடந்த கட்டுரைகளில் திருமணம் மூலமாகப் பிறக்கின்ற பிள்ளைகளுக்கும், மகவேற்பு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கும் பெற்றோர் இயற்கைப் பாதுகாவலராகவும், சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கைத் துணைகளிடையே பிரச்சினை ஏற்படுகின்ற மூன்றாம் நபரும், அரசும் பாதுகாவலராக செயற்படுபவர் என்பதைப் பார்த்தோம்.

சிறுவர், பெற்றோர் பாதுகாப்பில் இருக்கும் போதும் அல்லது முறையான பாதுகாப்பின்றி வாழ்கின்ற போதும் அவர்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். சமூகத்தில் பரவலாக இருக்கின்ற சிறுவர் தொடர்பான பிரச்சினைகளையும், அவர்களுக்குரிய சட்டப் பதில்களையும் தெரிந்து கொள்வது அத்தியாவசியமாகும்.


சிறுவர் திருமணங்கள்
(Child Marriage)

பிள்ளை (Child) என்பதற்குரிய வரைவிலக்கணம் ‘18 வயதுக்குக் குறைந்த ஆண் / பெண்’ என்பதாகும். இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணமாகும். சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தனை (1989) இவ்வரைவிலக்கணத்தையே வழங்குகின்றது.

ஏற்கனவே நாம் திருமணத்திற்குரிய வயதெல்லை 18 எனப் பார்த்தோம். 18 வயதுக்குக் குறைந்த ஆண், பெண் ஆகியோர் வழக்காற்றுத் திருமணத்தையோ அல்லது பதிவு செய்யப்பட்ட திருமணத்தையோ மேற்கொள்ள முடியாது. ஆயினும் இன்று எமது சமூகத்தில் பல்வேறு இடங்களில் சிறுவர் திருமணங்கள் நடைபெறுதலை எம்மால் மறுக்க முடியாது.

பெற்றோருடைய பொருளாதாரப் பிரச் சினை, வழக்காற்று ரீதியான மூட நம்பிக் கைகள், பாடசாலைக்குச் செல்லாமை, சிறு வயதில் பாலியல் உறவுகளில் விரும் பியோ விரும்பாமலோ ஈடுபடல், பெற்றோர் பிள்ளைகளைக் கைவிடும் சந்தர்ப்பம், சட்டம் பற்றிய போதிய அறிவின்மை என்பனவற்றை சிறுவர் திருமணங்களுக்குரிய காரணங்களாக குறிப்பிடலாம்.

பொருளாதாரப் பிரச்சினையை எடுத்து நோக்கும் போது, இது பல்வேறு விடயங்களினால் செல்வாக்குப் பெறுகின்றன. உதாரணமாக ஒரு குடும்பத்தில அதிகமான பிள்ளைகள் இருக்கும் போது பிள்ளைகளைச் சுமையாகக் கருதும் பெற்றோர் 18 வயது பூர்த்திடைய முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர்.

மேலும் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் வீட்டு வேலைகளுக்காக செல்கின்ற இடங்களில் பாலியல் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை செய்வதற்காக தாய் சென்ற குடும்பங்களில் பிள்ளைகள் 18 வயதை அடைய முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.

இரண்டாவதாக சில பெரியோர்கள் தமது மூட நம்பிக்கையின் பிரகாரம், பிள்ளை பருவ வயதை அடைந்தவுடனேயே திருமணம் செய்து வைப்பது எமது குடும்ப வழக்காறு என்ற அடிப்படையில் நடைபெறுகிறது. மேலும் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக பாடசாலை செல்ல வசதியற்ற பிள்ளைகள், வேலையும் இல்லாத சமயம் தமது பாதுகாப்பும் அவரணைப்பும் பெறும் பொருட்டு தாம் விரும்பிய ஒருவருடன் வீட்டை விட்டு செல்கின்றனர்.

சிறு வயதில் பாலியல் உறவில் ஈடுபடும் போது இதுவும் சிறுவர் திருமணங்களுக்குக் காரணமாக அமைகின்றது. பெண் பிள்ளைகள் தமது வீடுகளிலேயே உறவினர்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அச்சம்பவம் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்து மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதைவிட குறிப்பிட்ட நபருக்கு திருமணம் செய்து வைத்தல் சிறந்தது எனக் கருதி பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. மேலும் பெற்றோர் சில வேளைகளில் தமது பிள்ளைகளைக் கைவிட்டு செல்கின்ற போது பிள்ளையின் மனதில் தவறான எண்ணம் தோன்றுவதுடன், சில சமயங்களில் பிறரின் தூண்டுதலால் திருமணம் நடைபெறவும் கூடும்.

சிறுவர் திருமணங்களுக்குரிய காரணங்களாக மேலே குறிப்பிடப்படாதவைகளான யுத்தம், இயற்கை அழிவுகள் போன்ற விடயங்களும் காரணங்களாக அமைந்துள்ளன. எமது நாட்டில் பல வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக சில மாகாணங்களில் சிறுவர் திருமணங்கள் அதிகமாக நடைபெற்றன.


சிறுவர் திருமணங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள்

சிறுவர் உரிமைகள் பற்றிப் பேசி வருகின்ற இன்றைய காலகட்டத்தில் கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம் என்பன பிள்ளையின் முக்கியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. சிறுவர் திருமணங்கள் பிள்ளையினது கல்வி, ஆரோக்கியம் என்பவற்றை வெகுவாகப் பாதிப்பதுடன், எதிர்காலத்தில் ஆரோக்கியமான பிரஜைகளாக மிளிர வேண்டிய பிள்ளை பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

இலங்கையில் 14 வயது வரை பிள்ளை ஒன்று கட்டாயக் கல்வி பெற வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு இருக்கிறது. இதனை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சிறுவர் திருமணங்கள் கல்விக்கான உரிமையைப் பாதிக்கின்றன. அடிப்படைக் கல்வி கற்கும் உரிமை இதன் மூலம் இல்லாமல் போகின்றது. எனவே, சிறுவர் திருமணங்கள் நடைபெறுவதை தடை செய்வதற்காக நாம் ஒவ்வொருவரும் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிள்ளையுடைய ஆரோக்கியம் தொடர்பாகப் பார்க்கின்ற போது இரண்டு விடயங்களை அவதானித்தல் இன்றியமையாததாகும். முதலாவது 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளை ஒன்று பாலியல் ரீதியில் உடலுறவு பெறுவதற்கு உடல் ரீதியான தகுதியைக் கொண்டிருக்காது. எனவே, இங்கு பாலியல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும், அப்பிள்ளை வயிற்றில் கருவொன்றைச் சுமந்து அப்பிள்ளையைப் பெற்றெடுக்கும் உடல் தகுதி இருக்கிறதா? இவ்வாறான வேளைகளில் தாய்க்கு உயிராபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. இளம் வயதில் ஏற்படுகின்ற பிரசவம் முழு வாழ் காலத்திலும் குறிப்பிட்ட பிள்ளையுடைய உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சில சந்தர்ப்பங்களில் இத்திருமணங்கள் நீண்டகாலம் நிலைத்திருப்பதில்லை. அவ்வாறான வேளைகளில் தமக்குப் பிறந்த பிள்ளைகளுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இன்றி வாழவேண்டிய சூழ்நிலைகளுடன் தொழில் இன்மை மேலும் பல இன்னல்களைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, இவ்வாறு கைவிடப்பட்ட பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் இவர்களின் குறிப்பான சூழ்நிலையை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மேலதிகமாக பாலியல் சுரண்டல்களுக்கு உட்பட வாய்ப்புகள் ஏற்படுகின்றன.


இல்லத்து வன்முறையும் சிறுவர் திருமணங்களும்

பெண் பிள்ளைகள் இல்லத்து வன்முறை அல்லது மன ரீதியான, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு கணவரால் மட்டுமன்றி, கணவனைச் சார்ந்தவர்களாலும் உள்ளாக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.


சிறுவர் திருமணங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகளுக்கான பொருத்தனையும்

இப்பொருத்தனையின் பிரகாரம் பிள்ளையின் அதிகூடிய அக்கறையை கருத்திற்கொள்ள வேண்டும். மேலும், பிள்ளையுடைய கருத்துக்களை எவ்விதமான தலையீடும் இன்றி சுதந்திரமாகத் தெரிவிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருடைய சம்மதமும் முக்கியமாகும். சில நிர்ப்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகளில் பிள்ளைகளுடைய சம்மதத்திற்கு முரணாக பலாத்கார சிறுவர் திருமணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.


மன ரீதியான பாதிப்பு

பலாத்காரமாக பாலியல் உறவில் ஈடுபடுகின்ற போது அது பிள்ளையினுடைய மனநிலையைப் பெரிதும் பாதிக்கின்றது.


சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்

14 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளை ஒன்றை வேலைக்கு அமர்த்துதல் சட்டத்திற்கு முரணான ஒரு விடயமாகும். இது கடை, வீடு உட்பட கம்பனிகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களுக்கும் பொருத்தமாகும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதலையும் கட்டாயக் கல்விக்கான வயதெல்லையையும் தொடர்புறுத்தி பார்ப்பது அவசியமாகும்.

ஏனெனில் 14 வயதுக்குக் குறைந்த பிள்ளையை வேலைக்கு அமர்த்துகின்ற போது அப்பிள்ளையின் கல்விக்கான உரிமை பாதிக்கப்படுகின்றது. அரசு கல்விக்கான உரிமையை உத்தரவாதப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாடசாலையை விட்டு இடையில் விலகும் மாணவர்கள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


16 வயதுக்குக் குறைந்த பிள்ளை மீதான பாலியல் வல்லுறவு

தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது குற்றமாகும். இங்கு இரண்டு விதமான வேறுபாடுகளை நாம் தெரிந்திருத்தல் அவசியமாகும். அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவருடன் சம்மதத்துடன் உறவு கொள்ளும் போது, அது ஒரு குற்றமல்ல.

எனினும், 18 வயதுக்குக் குறைந்த ஒரு பெண் பிள்ளை, நபர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் போது அது குற்றமாகக் கருதப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத் தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார்.

எனவே, 16 வயதுக்குக் குறைந்த சிறுமியின் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கு நடவடிக்கையில் அப்பிள்ளையின் சம்மதத்துடன் உறவு நடைபெற்றது என்பது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பாக அமையாது. குற்றவாளியாகக் காணப்பட்ட நபர் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.


பிள்ளைகள் மீது புரியப்படும் துஷ்பிரயோகங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளது போல பிள்ளைகளை முறையற்ற பாவனைகளுக்கு உட்படுத்தி பணம் தேடும் பலர் எமது சமூகத்தில் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர். உதாரணமாக பிள்ளைகளை அச்சுறுத்தி பலாத்காரமாக ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கின்றனர். இவ்வாறு எடுக்கப்படும் படங்களை வீடியோக்களைப் பிரசுரிக்கின்றனர்.

இது பிள்ளையுடைய முழு எதிர்காலத்தையும் பாதித்து விடுகின்றது. சில இடங்களில் பணத்திற்காகவும் இவ்விடயங்களை வியாபாரமாக மேற்கொள்கின்றனர்.

இன்று தொழில்நுட்ப அபிவிருத்தியின் காரணமாக கையடக்க தொலைபேசி, புகைப்படக் கருவிகள் என்பவற்றை சந்தையில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. பலவிதமான நவீன அபிவிருத்தி நுட்பங்களுடன் தயார் செய்யப்பட்ட இக்கருவிகளை பொது இடங்களில் அதாவது வீதிகள், புகைவண்டி நிலையங்கள், போக்குவரத்து சாதனங்களில் (பஸ்) பயணிக்கும் சிறுவர்களை மறைமுகமாக படமெடுத்து பின்பு அப்படங்களை வைத்து அவர்களை மிரட்டியும் தமது தேவைகளை மோசடிக் கும்பல்கள் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இலங்கையில் மேலே கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குற்றமாகும்.

ஏற்கனவே பார்த்த கட்டுரைகளில் பிள்ளையின் பாதுகாப்பு பெற்றோரை விடுத்து வேறு நபர்களாலும் கையேற்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. அத்தகைய சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவர்.

முறையற்ற வகையிலும் நடத்துதல், பிள்ளைகள் மீது கடுங்காயம் விளைவித்தல் போன்றனவும் தண்டிக்கப்படும் குற்றங்களாகும். எனவே எந்தவொரு நபரும் பிள்ளையொன்று இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் போது அதனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தல் வேண்டும்.

கடந்த கட்டுரையில் பிள்ளையை தத்தெடுத்தல் பற்றிய சட்ட ஏற்பாடுகளை பார்த்தோம். பெற்றோருடைய சம்மதமின்றி பிள்ளையொன்றை வேறு ஒருவருக்கு உள்நாட்டிற்கோ அல்லது வெளிநாடிற்கோ விற்பனை செய்தல் குற்றமாகும். மேலும் தாய்மையடைந்துள்ள பெண்ணிடம் பெறப்போகும் பிள்ளையை எதிர்காலத்தில் ஏற்கப்போவதாக கூறி சிலர் கையெழுத்துக்கள் வாங்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறு மேற்கொள்ளும் செயல் குற்றமாகும்.


தடுக்கப்பட்ட உறவுமுறைக்கிடையில் பாலியல் உறவு

1995 ஆம் ஆண்டு இலங்கையில் குற்றவியல் சட்டத்தில் ஏற்பட்ட அபிவிருத்திகளில் இதுவும் பிரதான ஒன்றாகும். தடுக்கப்பட்ட உறவு முறைக்குள் திருமணம் செய்வது குற்றமாகும். தடுக்கப்பட்ட உறவுமுறைகள் உதாரணம்: சகோதரன், சகோதரி.


வீதிச் சிறுவர் அவலங்கள்

வீதிகளிலே பிச்சையெடுக்கும் சிறுவர்களை நாளாந்தம் காணக்கூடியதாக உள்ளது. சில வேளைகளில் செல்வந்தர், நடுத்தர வர்க்கத்தினர் பிள்ளைகளை பிச்சையெடுப்பதற்காக வாடகைக்கு அமர்த்துகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.

இங்கு பிச்சை எடுத்தபின்பு நாளாந்தம் பெறப்படும் வருமானத்தில் சிறிய தொகையை பிள்ளைகளுக்கு வழங்கிவிட்டு வாடகைக்கு அமர்த்தியவர் பணம் உழைக்கின்றார். வீதிகளிலே கைவிடப்பட்ட சிறுவர்களும், பெற்றோருடன் சேர்ந்து வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்ற சிறுவர்களும் உள்ளனர். இவர்களை போதைவஸ்து விற்பனைக்காக, பாலியல், விபசாரம் போன்ற செயல்களில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கின்றனர்.

பிள்ளையுடைய அதிகூடிய நலனில் பெற்றோர், அரசு கவனம் எடுக்க வேண்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல