செவ்வாய், 11 ஜனவரி, 2011

காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருவதாக கூறி 10 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தவர்கள் கைது!

யுத்தத்தின் போது காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருவதாக கூறி 10 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு நபர்களை வவுனியா காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி அம்பலாங்குளம் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சில காலம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர், செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமுக்கு சென்று வசித்து வந்துள்ளனர்.

இதன் பின்னர் தமிழ் அரசியல் கட்சியொன்றில் இணைந்து செயற்பட்டு வந்தார். அவர் கிளிநொச்சி செல்லும் போது, பழைய நண்பர் ஒருவரான இரண்டாவது சந்தேக நபரை சந்தித்துள்ளார். இதனையடுத்து இரண்டாவது சந்தேக நபரின் உறவினர்கள் சிலரை சந்தித்துள்ளார். உறவினர்கள் யுத்தத்தின் போது காணாமல் போன ஒருவரை தேடி கண்டுபிடிக்க உதவுமாறு சந்தேக நபர்களிடம் கேட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தன்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என பிரதான சந்தேக நபர் இதன் போது தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவரை தேடிக் கண்டுபிடிக்க முதல் தடையாக 10 ஆயிரம் ரூபாவையும் இரண்டாவது தடவையாக 30 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார். காணாமல் போனவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 4வது மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேக நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உறவினர்களிடம் கூறியுள்ளார். அவரை விடுவிக்க அதிகாரிகளுக்கும், சட்டத்தரணிக்கும், நீதிபதிக்கும் பணம் கொடுக்க வேண்டும் என சந்தேக நபர் தெரிவித்துள்ளதுடன் 15 லட்சம் ரூபாவை கோரிக்கையுள்ளார்.

காணாமல் போனவரின் தாய் தனது மகனை நேரில் காண வேண்டும் எனவும் தன்னை அங்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுள்ளார். இதன்படி சந்தேக நபர்களுடன் காணாமல் போனவரின் தாய் வர்த்தக நிலையம் ஒன்று அருகில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சிறைச்சாலை பேருந்து ஒன்று சென்றுள்ளது. 'அதோ மகன் பேருந்தில் போகிறார்' என சந்தேக நபர்கள் பேருந்தில் பயணித்தவர்களை காண்பித்துள்ளனர். எனினும் குறித்த தாய் தனது மகன் அதில் பயணித்தாரா என்பதை தெளிவாக காண முடியாது போனது. இதனையடுத்து சந்தேக நபர்கள் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், சந்தேக நபர் நீதிமன்றத்திற்குள் சென்று திரும்பி வந்து, சட்டத்தரணிக்கு பணம் கொடுக்க வேண்டும் என 10 லட்சம் ரூபாவை வாங்கியுள்ளார். அதன் பின்னர், அந்த தாயை தங்குமிட விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, மகன் நாளைய தினம் விடுதலையாகி வருவார் என தெரிவித்து விட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர்.

அவர்கள் கூறியப்படி மகன் திரும்பி வரவில்லை என்பதால், வவுனியா திரும்பிய தாய் வவுனியா காவற்துறையில் சந்தேக நபர்கள் குறித்து முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டை அடுத்து, சந்தேக நபர்களை கைதுசெய்து காவற்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்துள்ளனர. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல