இறப்பின் வகைதொகை பற்றிய ஓர் இலகுவான ஆய்வு
உயிருள்ள ஒரு ஜீவராசியின் அனை த்துச் செயற்பாடுகளும் முடிவுக்கு வருவதே மரணம் எனப்படும். பல்வேறு காரணங்களால் நாௌான்றுக்கு உலகமெங்கும் சுமாராக ஒன்றரை இலட்சம் பேர் இறக்கின்றனர் என்பதும் மனித இனம் தோன்றியதிலிருந்து இதுவரை 100பில்லியன் பேர் வரை இறந்திருக்கின்றனர் என்பதும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கு. பொதுவாக மரணம் நிகழ்ந்த பிறகு சுவாசம் நின்று விடும். உள்ளுறுப்புகள் செயலிழந்துவிடும். நாடித்துடிப்பு இருக்காது. உடல் வெளுத்துப்போகும். உடலின் கீழ்ப்பகுதிகளில் இரத்தம் சேர்வது,விறைத்துப் போவது ஆகியன படிப்படியாய் நிகழும். முதுமை, தொற்றுநோய்கள், மாரடைப்பு, விசக்கடி, மிருகங்களின் தாக்குதல், விச ஜந்துக்களின் தீண்டுதல், இயற்கையின் சீற்றத்தால் நிகழும் பேரழிவுகள், போர்கள், கொலைகள், தற்கொலைகள் போன்றவை மரணம் நிகழப் பொதுவான காரணங்களாகும்.
உலகில் பெரும்பாலான மக்களின் மரணத்துக்குக் காரணமான ஜீவராசிகள் ஈயும் நுளம்பும்.14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சனத்தொகையில் கால்வாசிப் பேருக்கு மேல் பலியானது பிளேக் என்ற கொள்ளை நோயினால் ஆகும். இது எலிகளிலிருந்து தெள்ளுகள் மூலம் மனிதனுக்குப் பரவுவது இந்நோய் தான். இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கல்கத்தாவில் அசுர வேகத்தில் பரவி பத்து இலட்சம் பேருக்கு மேல் கொன்றது.
கடந்த 20 ஆம் நூற்றாண்டில் புகைபிடிக்கும் பழக்கத்தினால் பத்துக் கோடிப் பேர் வரை மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே இந்த நூற்றாண்டில் நூறு கோடியளவுக்கு உயருமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கின்றது. மரணமடைந்ததாக தவறுதலாகக் கருதப்பட்டு, இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வழியில் உடல் அசைவதைப் பார்த்து திரும்ப வீட்டுக்குக் கொண்டுவந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.மரணமடைந்தோரைப் புதைப்பதும் எரிப்பதும் பொதுவான நடைமுறைக ௌன்றாலும் திபெத்தியர்கள் sky Burial என்ற முறையைக் கையாண்டு இறந்தோரின் சடலங்களை மலையுச்சிகளில் கொண்டு போய் வைத்து, அங்கு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரையாக்குகின்றனர். இந்தியாவிலுள்ள பார்ஸி இனத்தவர்களிடையேயும் இறந்தவர்களின் உடல்களை பறவைகள் உண்ணுமாறு உயர்ந்த இடங்களில் வைக்கும் பழக்கமும் இருந்துவந்துள்ளது.
போர்ணியோ என்பது இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு.இங்கு இறந்தவர்களை உடனடியாகப் புதைக்க மாட்டார்களாம். சுமார் ஓராண்டுகாலம் சடலங்களை சாடிகளில் பதப்படுத்தி வைத்திருந்து பிறகு தான் அடக்கம் செய்வார்களாம். இந்த வழக்கம் கடந்த நூற்றாண்டின் இறுதி வரை அங்கு நடைமுறையில் இருந்து இப்போது மாறிவிட்டதாம். அந்தக்கால எகிப்தியர்கள் இறந்த மன்னர்களின் சடலங்களை பதப்படுத்தி மம்மிகளாக்கி ஏராளமான பொன்னையும் பொருளையும் அடிமைகளையும் அவைகளுடன் சேர்த்து பிரமிட்டுகளில் சமாதியாக்கினார்கள். இறந்தவர்களுடைய ஆவியானது போய்ச் சேருகிற மறு உலகிலும் சௌகரியமாக வாழட்டும் என்ற எண்ணத்தில் இதனைச் செய்தனராம். இப்படி ஏராளமான மம்மிகள் 19ஆம் நூற்றாண்டில் அங்கு சேர்ந்து விட்டதால் அவைகளுடன் சேர்த்துப் புதைக்க பொன் பொருள் போதாமல் அவைகளை நெடுநாள் பதப்படுத்தி வைத்திருந்து நிலக்கரிக்குப் பதிலாக ரயில் எஞ்சின்களுக்குப் பாவித்தனராம்.
சில சித்தர்கள் உயிருடன் சமாதி நிலையை அடைவார்கள். அதனை ஜீவசமாதி என்பர். இந்தியாவில் ஆதிசங்கரர், ராக வேந்திர சுவாமிகள், காஞ்சி மகா சன்னிதானம் சங்கராச்சாரிய சுவாமிகள், இலங்கையில் சித்தானைக் குட்டிச் சுவாமிகள் போன்றோர் இவ்வாறு ஜீவசமாதியானார்கள்.தமிழக அறிஞர் கி.ஆ.பெ விஸ்வநாதம் தான் உயிருடன் இருக்கும் போதே தமது சமாதியை கட்டி வைத்தார். சுபாஷ் சந்திரபோஸ் இன்னமும் மரணமடையாது வாழ்கிறார் என்று சொல்வாருமுண்டு. மரணமில்லாப் பெரு வாழ்வு வள்ளலாருக்குக் கிட்டியதாகக் கூறுவார்கள். TURRITOSIS NUTRICULA என்ற ஜெல்லி மீன்வகை மரணத்தை வென்றதாக கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மீன் இனத்தின் கரு முட்டைகள் சளி போன்றதொரு திரட்சியாக ஏரிகளையொட்டிய பாறைகளில் பாசி படர்ந்தாற் போல் ஒட்டிக் கொண்டிருக்கும். இவை முதிர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு இரண்டாக, பத்தாக,நூறாக,ஆயிரமாகப் பிரிந்து,அனைத்தும் ஒரே கூட்டமாக (COLNY) விருத்தியுறும் சரியான பருவம் (SEASON) வந்ததும் அவ்வளவும் சடுதியில் வளர்ந்து ஜெல்லி மீன்களாக மாறும். பின்னர் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு குஞ்சுகளை உற்பத்தி செய்யும். மற்ற ஜெல்லி மீன்களுக்கும் இவற்றுக்குமுள்ள வேறுபாடு யாதெனில் இவை மீண்டும் உயிரற்ற சளித்திரட்சி போலாகி பாறைகளில் படர்ந்து விடுவது தான். இவ்விதமாக ஒரு காலத்தில் சளித் திரவமாகவும் பின்னர் ஜெல்லி மீன்களாகவும் மாறுவதால் இவற்றை சாகாவரம் பெற்ற ஜெல்லி மீன்கள் IMMORTAL JELLIFISH என்கிறார்கள்.
MENTIS RELIGIOSA என்பது ஒரு வகையான பூச்சியினம். பிற பூச்சிகள் தான் இதற்கு ஆதாரம். இனப்பெருக்கத்துக்காக தன் இனத்து ஆண் பூச்சியுடன் புணர்ந்த பிறகு அதனையே கொன்று தின்று விடுமாம். இறப்புக்குப் பின்னர் என்ன ஆகும் என்பது பற்றி பலவித கருத்துக்கள் உலவுகின்றன. தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதன் மறுபிறவியடைவான் என்கிறது இந்து மதம். இறப்புக்குப் பின்னர் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்புகிறது கிறிஸ்தவ மதம் இயேசு அவ்விதமே உயிர்த்தெழுந்தார் என்று கூறும் புனித விவிலியம் உலகின் இறுதி நாளின் தீர்ப்புக்காக இறந்தோர் அனைவரும் ஆன்ம சரீரத்துடன் உயிர்த்தெழுவர் என்றும் அப்போதே அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மோட்சமோ நரகமோ சம்பாவனையாகக் கிடைக்கும் என்றும் கூறுகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதும் விவிலியத்தின் இன்னொரு வாசகம். வாழ்வில் கொலை, கொள்ளை, மோசடி, ஒழுக்கக்கேடு என்று வகை தொகையின்றி பாவங்களைச் செய்து கொண்டே போனால் கடைசியில் தண்டனையாகவோ, வியாதியாகவோ, விபத்தாகவோ மரணம் வந்து சேருமென்பதே இதன் பொருளாகும்.
மேல் நாடுகளில் FUNERAL MANAGERS என்பவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் போதும் மரணமடைந்தவரின் ஈமக்கிரியைகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அவர்களே கச்சிதமாய் நிறைவேற்றி வைப்பார்கள். நம் நாட்டிலும் FUNERAL UNDERTAKERS என்ற மலர்ச்சாலைகள் சேவைக்கு வந்துவிட்டன. இறந்தவருக்காக அழுவதையும் இரங்கலுரை நிகழ்த்துவதையும் உறவினர்களும் நண்பர்களும் செய்தால் போதும். பணம் வாங்கிக்கொண்டு இறந்தவருக்காக அழுவதற்கும் ஆட்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு கூலிக்கு மாரடிப்பவர்கள் யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் இன்றும் உள்ளனர். உற்றார் உறவினர்களே வியக்கும் வண்ணம் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டும் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஊர் கேட்க ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
அமெரிக்காவில் இறந்துபோன ஒருவரின் சொத்துக்களை இன்னொருவருக்கு மாற்றுவதற்கு வரிவிதிக்கப்படுகின்றது. இதனை மரண வரி என்கிறார்கள். மரணம் நிகழ்ந்தவுடன் அதனை பதிவு செய்வது அவசியம்.இது வாரிசுகளின் சட்டபூர்வமான உரிமை, பின்னுரித்து போன்றவற்றிற்குத் தேவைப்படும் முக்கியமானதொரு சான்றிதழாகும். காணாமல் போன ஒருவரைப் பற்றி குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரை எந்தத் தகவல்களும் வரவில்லையென்றால் அதன்பிறகு அவர் இறந்தவராகவே கருதப்படுவார் என்று சட்டம் சொல்கின்றது. இதனைக் காரணம் காட்டியே கடந்த அரசாங்கம் வன்னிப் போரின் போதும் சுற்றி வளைப்புகளின் போதும் கைதாகி காணாமல் போன உறவுகளை தேடித் தருமாறு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு அதிரடியாய் மரணச் சான்றிதழ்களை வழங்கி அப்பிரச்சினைக்கு அத்துடன் முடிவு கட்ட முயன்றமை மறக்கக் கூடிய விடயமல்ல!
மரணத்தைத் தடுக்க முடியாது. ஆனால் அது நிகழ்வதை தள்ளிப் போட முடியும்.சரியான உணவுப் பழக்கம், உரிய மருத்துவப் பரிசோதனை,தகுந்த முறையிலான சிகிச்சை,தவறாத உடற்பயிற்சி, மனநலம்,தீய பழக்கவழக்கங்களோ,ஒழுக்கக் கேடுகளோ இல்லாதிருப்பது போன்றவை மரணத்தை சில காலம் ஒத்திப்போடச்செய்யும் சில வழிமுறைகளாகும் .
மரணம் என்று பொருள்தரும் இருநூற்றுக்கும் அதிகமான வார்த்தைப் பிரயோகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. KICKED THE BUCKET என்பது அவைகளிலொன்று. தமிழிலும் கண்ணை மூடி விட்டார், காலை நீட்டிவிட்டார், மோசம் போய்விட்டார்: மேலே போய்விட்டார். என்றெல்லாம் சொல்வது வழக்கத்தில் உள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக