முன்னர் நடந்த ஒன்றை திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் முன்னர் நிகழ்ந்தது. மீளவும் நிகழும் என்னும் நம்பிக்கையே மக்களிடையே உறுதியாக இருக்கிறது.
முன்னர் நடந்த ஒன்றை மீளச் செய்யும் போது முன்னர் விளைந்த பலன்கள் விளைவுகள் என்பவை சடங்காக மீள செய்கின்ற பொழுதும் வரும் என்ற நம்பிக்கையே சடங்குகள் இன்றுவரை நிலை பெற காரணமாகும்.
இச்சடங்கிலே,
1) சமய ரீதியான சடங்குகள்
2) வாழ்க்கையுடன் தொடர்புடைய சடங்குகள்
என இரு வகைப்படுத்தலாம். வாழ்வியலுடன் தொடர்புபட்ட சடங்கிலே ஒருவர் (ஆணோ, பெண்ணோ) பிறப்பு முதல் இறந்த பின்னர் நடக்கின்ற பிதிர்க் கிரியைகள் வரையான சடங்குகள் உள்ளடங்கும். இச்சடங்குகளிலே அதிகமானவை பெண்களுடன் தொடர்புபட்டதாக பெண்களையே முன்நிறுத்துவதாக அமைந்துள்ளன.
இதனடிப்படையில் ஒரு பெண் கருத்தரித்ததும் வளைகாப்பு செய்யும் சடங்கு, மகப்பேற்றுச் சடங்கு, பிறக்கும் குழந்தை பெண் குழந்தையானால் காது குத்தும் சடங்கு, பின்னர் வயதுக்கு வந்து விட்டால் பூப்பு நீராட்டு விழா, பின்னர் திருமணத்திற்கு முன்னரான நிச்சயார்த்தச் சடங்கு, திருமணச் சடங்கு என்றவாறு பெண்ணை முதன்மைப்படுத்தி பெண்களுக்கே உரித்தான சடங்குகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இவ்வாறு தமிழர் வாழ்வியலில் பெண்களை மையப்படுத்தி நிகழும் சடங்குகள் அவர்களை (பெண்ணை) அடிமைப்படுத்துகின்றனவா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றே, ஏனெனில் தமிழர் சமூகமரபுகள் ஏனைய சமூகமரபில் இருந்து வேறுபட்டவை.
பெண்ணை தெய்வமாக போற்றும் பண்பு தமிழர் வாழ்வியலிலே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஒரு குடும்பத்திலே பெண் இல்லா விட்டால் வீடு விளங்காது. விளக்கேற்ற ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்றெல்லாம் பேச்சு வழக்கில் பேசப்படுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.
நடைமுறை வாழ்விலே ஒரு வீட்டில் எத்தனை ஆண் பிள்ளைகள் இருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த வீடு ஒளியற்று, வறுமை குடி கொண்ட வீடு போன்று சந்தோசம் இல்லாதே காணப்படும். வீட்டில் இருப்போருக்கு வீட்டுப் பற்று, இருக்காது.
இவர்கள் நாடோடிகள் போன்று வந்தான் வரத்தானாகவே இருப்பார்கள் இது உண்மை. எனவே, ஒரு வீட்டுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து பற்றுதலை ஏற்படுத்துபவள் பெண்ணே.
அதனாலேயே தமிழ்ச் சமூகம் பெண்ணை போற்றும் முகமாக தாய்மையை மதிக்கும் முகமாக அவர்களை முதன்மைப்படுத்தி பல்வேறுபட்ட சடங்குகளை உருவாக்கி மரபுகளாக இன்று வரை பின்தொடரலாம்.
இச்சடங்குகளிலே சில நடைமுறைகள் மூடநம்பிக்கை கொண்டதாக பிற்போக்கு தன்மையுடையதாக குறுகிய சிந்தனை உடையதாக இருக்கலாம்.
இவை ஆண் ஆதிக்கவாதிகளால், பிற்போக்கு சிந்தனை உடையவர்களால் புகுத்தப்பட்டுவிடும் காலம். எனவே, பெண்களை முதன்மைப்படுத்தும் சடங்குகள் அனைத்தும் பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகளாக நாம் கூற முடியாது.
எல்லா சடங்குகளும் பெண்ணை மேன்மைப்படுத்துவதாக தாய்மையை புனிதப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ஆனால் சில பிற்போக்கான மூடசிந்தனைகள் இடைக்காலங்களில் புகுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.
இனி பெண்கள் தொடர்பான சடங்குகளை நோக்குவோம். பெண் கருத்தரித்து விட்டால் அதனை சிறப்பிக்கும் முகமாக இடம்பெறும் ‘வளைகாப்புச் சடங்கு’ பெண்ணை அடிமைப்படுத்தவா இடம்பெறுகின்றது இல்லவே இல்லை. உளவியல் ரீதியாக அவளை சந்தோஷப்படுத்தவே இடம்பெறுகின்றது.
கருத்தரித்த தாய் சந்தோசமாக இருந்தால் அவளுக்கு பிறக்க விருக்கும் குழந்தை உடல், உள ஆரோக்கியத்துடன் பிறக்கும் என மருத்துவ உளவியல் கூறுகின்றது. அதனாலேயே எமது தமிழ் சமூகம் கருத்தரித்த தாயின் உற்றமும், சுற்றமும் கூடி சந்தோஷ பெருவிழாவாக வளைகாப்புச் சடங்கை செய்கின்றது.
அது மட்டுமல்ல கருத்தரித்த பெண் மன ரீதியாக மகப்பேறு பற்றிய பயத்துக்கு உள்ளாகி இருந்தால் அப்பயத்தைப் போக்கவே இச்சடங்கில் பலரும் கூடி தாயை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்கள். தமது சந்ததி உருவாகி விட்டது என்று குதூகலிக்கிறார். இதில் எங்கு பெண்ணானவள் அடிமைப்படுத்தப்படுகின்றாள்?
அடுத்து மகப்பேற்று சடங்கு இச்சடங்கே பெண்மைக்கு முழுமை கொடுக்கும் சடங்கு. அவளது புனிதத்தை உறுதிப்படுத்தும் சடங்கு. அவளுக்கு தாய்மை என்னும் அந்தஸ்தை கொடுக்கும் சடங்கு. இச்சடங்கிலே தாய்மை என்னும் அந்தஸ்தை குழந்தையை பெற்றதனால் அவளுக்கு மட்டும் சிறப்பல்ல அவளை சார்ந்த முழு சமூகமும் சிறப்பு அடைகிறது என்பதை,
”அயலும் புடையும் வாழவும் வேண்டும்.
அன்னமும் ஆச்சியும் வாழவும் வேண்டும்
ஆச்சியும் அப்பாவும் வாழவும் வேண்டும்
அம்மாவும் மாமியும் வாழவும் வேண்டும்”
என்னும் நாட்டார் பாடல் மிகச் சிறப்பாக காட்டுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்க்கு செய்யப்படும் சுகாதார, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட இச்சடங்குகள் அவளை பாதுகாக்கவே மேற்கொள்ளப்படுகின்றன. இச்சடங்குகளில் பெண்ணானவள் அடிமைப்படுத்தப்படவில்லை.
மாறாக போற்றப்படுகின்றாள், புனிதப்படுத்தப்படுகின்றாள். ‘தாய்மை என்பது பெண்ணுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அந்தஸ்து கொடை. இது பெண்ணுக்கு மட்டுமே உரித்தான பாக்கியம்.
அடுத்து குழந்தை பிறந்து விட்டால் பெண் குழந்தையானால் இடம்பெறும் காது குத்தும் சடங்கானது உடலியல் ரீதியாக வலியைப் பெண் குழந்தைக்கு கொடுத்தாலும் அது தத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்து சமயம் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை பிரதானமாகக் கொண்டது. இதனடிப்படையில் இரு காதிலும் காது குத்தி ஓட்டை இடப்படுவதனால் இரு காதுத் துளைகளும் வாய்த்துளையும் சேர்ந்து ஓம் என்னும் சொல்லில் ஓ என்பது முழுமை பெறுவதாக இந்து சமயம் கூறுகின்றது. எனவே, ஓம் என்னும் பிரணவத்தை குறிக்கும் முகமாகவே இச்சடங்கு என்று இந்து சமயம் கூறுகின்றது.
பூப்பு நீராட்டும் விழாச் சடங்கிலே சில பிற்போக்கான, மூடத்தன்மையான சில நடைமுறைகள் நாட்டுக்கு நாடு சமூகத்திற்கு சமூகம் இருந்தாலும் அதில் நல்ல விடயங்கள் நடைமுறைகள் அதிகம் உண்டு.
பூப்புனித நீராட்டு விழாச் சடங்கு முற்றுமுழுதாக பெண்ணை அடிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இடம்பெறவில்லை. இப்புனித நீராட்டு விழாச் சடங்கு யாரால் நிகழ்த்தி வைக்கப்படுகின்றது.
ஆண்களாலா? அவ்வாறு ஆண்களால் நிகழ்த்தப்பட்டிருந்தால் அது சில வேளை அடிமைப்படுத்தும் சடங்கு என்று கூறலாம். ஆனால் முற்று முழுதான பெண்களாலே பெண்ணுக்கு நீராட்டு விழா செய்யப்படுகின்றது. இதில் இடம்பெறும் பல நடைமுறைகள் பெண்மையை மேன்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
ஒரு பெண் பூப்படைந்து விட்டால் அவள் வயதுக்கு வந்து விட்டாள். தாய்மை அடையக் கூடிய உடல் தகுதியை பெற்று விட்டாள். தமது சந்ததியை பெருக்கும் பாக்கியத்தை பெறுவதற்கான தகுதியை அடைந்து விட்டாள் என்பதை எல்லோரும் அறியச் செய்யும் மகிழ்ச்சி தரும் சடங்காகவே இது இடம் பெறுகின்றது.
இதனை சிறப்பாக தமிழர் சமூகமே செய்கிறது. இங்கு பெண் அடிமைப்படுத்தப்படுகின்றாள் என்று கூறுவது பொருத்தப்பாடுடையதாக தெரியவில்லை.
பெண் பிள்ளைகள் பொதுவாக வீட்டில் தாய்க்கு உதவி செய்து கொண்டு வீட்டில் இருப்பவர்கள். அவர்கள் ஆண் பிள்ளைகள் போன்று சமூகத்தில் தேவையற்று நடமாடுவது இல்லை.
எனவே, அவள் வயதுக்கு வந்து அந்தரங்கமாக வீட்டில் இருப்பதை வெளிக்காட்டும் முகமாகவே இச்சடங்கு இடம்பெறுகின்றது. இச்சடங்கின் போது உற்றார் உறவினர் மற்றோர் வந்து வாழ்த்தி, உணவுண்டு மகிழ்ந்து செல்கின்றார்கள்.
இங்கே குறித்த பெண் சமூக மயமாக்கம் அடைகின்றாள். அது மட்டுமல்லாது உற்றார் உறவினர் சந்தோஷம் அடைகின்றார்கள். தமது பரம்பரையை பெருக்கும் உன்னத நிலையை குறித்த பெண் பிள்ளை பெற்று விட்டாள் இதனை கொண்டாடும் சடங்கே பூப்பு நீராட்டு சடங்காகும்.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏன் மரங்களுக்கு கூட இடம்பெறுவதை காண்கிறோம். தென்னை மரம் பாளை வைத்து விட்டால் நீராட்டுகின்றோம். எனவே, இது ஒரு சந்தோஷப் பெருவிழாவே. இப்பாக்கியம் ஆணுக்கு கிடைப்பது இல்லை. எனவே பூப்பு நீராட்டு விழாச் சடங்கில் பெண் அடிமைப்படுத்தப்படவில்லை என்றே கூற முடிகிறது.
பெண் பூப்பு அடைந்து விட்டால் அவருக்கு குழந்தை பெறும் தகுதி வந்து என்று எந்த பெண் பிள்ளைக்காவது உடன் திருமணச் சடங்கு இடம்பெறுகின்றதா? இல்லவே இல்லை.
குழந்தை பெறுவதற்கான அடிப்படை உடல் தகுதியை பெற்றுவிட்டாலும் உளத்தகுதியும் பெற்று விட்டதுமே திருமணம் இடம்பெறுகின்றது. தாவரங்கள் பூத்ததும் காய்கின்றதா.
இல்லையே நாம் பார்க்கும் விதமே பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள் என்பதை வெளிப்படுத்துகிறது. மாறாக பெண் சடங்குகளால் மேன்மைப்படுத்தப்படுகிறார்.
பூப்பெய்ததும் பெண் பிள்ளைகளுக்கு சில வரையறைகள் விதிக்கின்றார்கள். ஏன் எனில் இதுவரை குழந்தையாக இருந்தாய் இனி வயதுக்கு வந்து விட்டாய் எனவே குழந்தை போன்று இராது பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று சில வரையறைகளை வகுப்பார்கள்.
ஏனெனில் குடும்பத்தை தாங்குபவள். மேன்மைப்படுத்துபவள் பெண் அவளாலே அது முடியும். இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஆனால் அதனை அடிமைப்படுத்தும் செயல் என்று கூற முடியாது. இதனை,
மகளே! செல்லக்கிளி!!
மறந்து விடாதே
நீ
மலர்ந்து விட்டாய்
மிட்டாய் வாங்கவென
மீசை யண்ணன்
தட்டிக் கடைக்கு
தவறியும் போய் விடாதே
முன்பு
ஆசையோடு
கன்னத்தை கிள்ளி
அன்பு மிட்டாய்
தருவார்
இப்போ...
நீ
வயதுக்கு வந்து விட்டாய்!
...
மகளே
நற்பண்பு
நான் கோடு
நீ வாழ
நான் கோடு
போடு கிறேன்
இக் கோட்டுக்குள்
நீ வாழு
எக்கேடும்
நெருங்காது
இவை யெல்லாம்
ஏன் என்றால்
இப்போ...
நீ
வயதுக்கு வந்து விட்டாய் (நீதி வாக்கியர்)
எனவே, சமூகப் பொறுப்புடையவராக பெண் விளங்குவதானலேயே பூப்பு அடைந்த பெண்ணுக்கு சில வரம்புகள் இடப்படுகின்றன. இதனை பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்கு என்று கூறுவது பொருத்தப்பாடானது அல்ல.
தமிழ் சமூகத்தில் இடம்பெறும் பெண்கள் தொடர்பான சடங்குகள் அவளை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல. மாறாக பெண்ணை மேன்மைபடுத்தும் மதிக்கும் சடங்குகளே.
இன்றைய காலத்தில் பெண் ஆணுக்கு சமனாகவே மதிக்கப்படுகின்றாள். கல்வி, தொழில், வாழ்வியல், உரிமைகள் போன்றவற்றில் பெண் - ஆண் போன்றே நடாத்தப்படுகின்றாள்.
பெண்களுக்கு மாதமொரு முறை இடம்பெறும் மாதவிடாய் செயல்முறை இன்றைய வளர்ந்த சமூகத்தில் தீட்டானவளாக விலக்கானவளாக பெண்ணை காட்டுவதில்லை. இயற்கை நிகழ்வாகவே இது எண்ணப்படுகின்றது.
சில வளர்ச்சியடையாத பிற்போக்கான மூடநம்பிக்கை மிகுந்த சமூகத்தில் பெண்களை மையப்படுத்திய சில சடங்குகளில் தரக்குறைவான கீழ்த்தரமான நடைமுறைகள் மூலம் பெண்மை இழிவுபடுத்தப்படலாம். அது அச்சமூக அறிவீனமாகக் கூட இருக்கலாம்.
இவ்வாறான நடைமுறைகளுக்கு பெண்ணே துணை போவதும் வருத்தத்துக்குரியது. உதாரணமாக கணவனை இழந்த பெண்ணை விளங்காதவள் என்றும் மங்கல சடங்குகளில் (திருமணச் சடங்கு) அவளை அழைக்காமை, அமங்கலச் சடங்குகளில் (மரண வீடு) அவளையே முழுவேலைகளுக்கும் பயன்படுத்துவதும் காணமுடிகின்றது. விதவை பெண்ணால் வளர்க்கப்படும் பிள்ளைகளை ‘கண் பெண்சாதி வளர்த்த கழிசறைகள்’ என்பதும் மனவருத்தத்துக்குரியதே.
பொதுவாக தமிழ் சமூகத்தில் பெண்ணை மையமாகக் கொண்ட சடங்குகள் அவளை அடிமைப்படுத்தவில்லை. ஆனால் அவ்வாறு அடிமைப்படுத்தும் சடங்குகள் எமது சமூகத்திற்கு தேவையும் இல்லை.
வேலாயுதம்பிள்ளை பகீரதன்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக