கட்டித் தழுவ நெருங்கும் போது அல்-ஒமாரியின் வயிற்றுச் சதையைப் பிடித்து நன்கு கிள்ளி விட்டார் அராபத். வலி தாங்க முடியாமல் அல் ஒமாரியின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.
அத்தியாயம் 15
அராபத் அழைப்பின் பேரில் அவரது அலுவலகம் சென்ற அல் ஒமாரி காரில் இருந்தபடியே அராபத்தின் பாதுகாவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில், அங்கு நடப்பது என்ன என்பதை அஷ்வாரி, அராபத்திடம் விளக்கிக் கொண்டிருந்ததை கண்ணாடி வழியே கண்டார்.
ஒமாரியை அழைத்து வருமாறு அராபத் அனுமதி அளித்த பின்னரும், சற்று முறைப்புடன்தான் காரில் இருந்து இறங்க அனுமதித்தனர்.
காம்பவுண்ட்டுக்குள் அவரை வரவேற்றார் பலஸ்தீன சட்டசபை உறுப்பினரான அபு மாசேன். இருவரும் அராபத் விருந்தினர்களை சந்திக்கும் அறைக்குள் சென்றனர். “அராபத் வரும் வரை காத்திருங்கள்” என்று அல்-ஒமாரியிடம் தெரிவித்து விட்டு சென்றார் மாசேன்.
சில நிமிடங்கள் கழிந்த பின்னர் அபு மாசேன், அராபத்துடன் திரும்பி வந்தார். அறைக்குள் நுழையும்போது அராபத்திடம் அல்-ஒமாரி பற்றி கூறும்போது, “இவர்தான் அந்தப் புலி” என்று அறிமுகப்படுத்தினார் மாசேன்.
அல்-ஒமாரியின் கையை குலுக்கிய அராபத், அவரை பல முறை கட்டித் தழுவினார். இது அவரது வழக்கம்தான். கட்டித் தழுவ நெருங்கும் போது அல்-ஒமாரியின் வயிற்றுச் சதையைப் பிடித்து நன்கு கிள்ளி விட்டார் அராபத். வலி தாங்க முடியாமல் அல் ஒமாரியின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.
இதன் பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கியது.
அராபத்துடன் அபு மாசேன், அஷ்ராவி மற்றும் இரண்டு பலஸ்தீன சட்டசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். யாரும் பேசாமல் சற்று நேரம் அமைதி நிலவியது.
அராபத்துக்கு நெருங்கியவரான பலஸ்தீன அதிகாரி நபீல் அமர் அமைதியைக் கலைத்தார். “அராபத்தை மோசமாக சித்தரித்த அல்-ஜசீரா டாகுமென்டரியை தொடர்ந்து ஒளிபரப்பியது ஏன் என்பதற்கு அல்-ஒமாரி விளக்கம் தர வேண்டும்” என்றார்.
கையை உயர்த்தி அவரை தடுத்த அராபத், “இதெல்லாம் முக்கியமில்லாதது. நான் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் அல்-ஜசீராவின் ரமல்லா அலுவலகத்தை மூடி விட்டனர். இந்த விவகாரம் எனக்குத் தெரியாமல், எனது உத்தரவில்லாமல் நடந்து விட்டது” என்றார்.
அராபத்தின் அலுவலகத்தில் சுமார் முக்கால் மணி நேரம் அல்-ஜசீராவின் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. “என்ன நடந்தாலும் எனது கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்று அராபத்திடம் தெரிவித்தார் அல்-ஒமாரி.
“பலஸ்தீன அதிகாரிகளுக்கு எதிரான தகவல்களை ஒளிபரப்புவதை நான் நிறுத்தினால், பலஸ்தீன மக்கள் அல்-ஜசீரா மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும். ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்தால் பின்னர் எப்போதும் அந்த நம்பிக்கையைத் திரும்பப் பெற முடியாது” என்று அராபத்திடம் அல்-ஒமாரி கூறினார்.
“தமக்கு அரசாங்கம் தரும் தகவலை விட, அல்-ஜசீரா தொலைக்காட்சி தரும் தகவல்கள் நம்பகமானவை என்று பலஸ்தீன மக்கள் நம்புகின்றனர். அதனால் அல்-ஜசீராவும் அவர்களுக்குச் செய்தியை அளிப்பதில் நேர்மையாவே நடந்து கொள்கிறது. அல்-ஜசீரா அலுவலகத்தை மூடுவதும், அதன் நடவடிக்கைகளில் கறையை ஏற்படுத்த முயல்வதும் பலஸ்தீனிய மக்களை வெறுப்படைய வைக்கும்” என்று வாதம் செய்தார் அல்-ஒமாரி.
அல்-ஒமாரியின் நீண்ட வாதத்தை அராபத் கூர்ந்து கவனித்தார். ஒமாரி பேச்சை முடித்ததும், தனது பாதுகாவலர் ஒருவரை அழைத்த அராபத், நேராக அல்-ஜசீரா அலுவலகத்துக்குச் சென்று அதனை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அல் ஜசீராவின் ரமல்லா பிரிவு அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டதால், பலஸ்தீன அதிகாரிகளுக்கும் அல்-ஜசீரா நிருபர்களுக்கும் இடையேயான விரிசல் நீங்கி விடவில்லை. ரமல்லா பிரிவு திறக்கப்பட்ட சில நாட்களில் அல்-ஒமாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பலஸ்தீன நிர்வாகத்தின் உளவுப் பிரிவு தலைவரான ஜெனரல் தவுபீக் திவாரி பேசினார்.
“அராபத்தின் உத்தரவின்படி உங்களது அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ரகசிய உளவுப் பிரிவின் தலைவர் என்ற முறையில் அல்-ஜசீராவின் அலுவலகம் திறப்பதை நான் எதிர்த்தேன். அப்படியிருந்தும் உங்கள் அலுவலகம், எப்படி திறக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
தொடரும்..
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக