யுத்த காலத்தில் "சுடப்பட்டது' என்ற வார்த்தையையும் "கொல்' என்ற சொல்லையும் ஒரே விதமான கருத்துப்படவே ஊடகங்கள் பயன்படுத்தியதாக வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின் போது முதலாவது சாட்சியான சன்டே லீடர் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் நேற்று மேல்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிரதிவாதியின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரட்ரிகா ஜான்ஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை 11 ஆவது நாளாக மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பீ. வராவௌ, சுர்பிக் ரஸீன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை நடைபெற்றது. நேற்றைய தினமும் பிரதிவாதியின் சட்டத்தரணியால் முதலாவது சாட்சியான பிரட்ரிகா ஜான்ஸ் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது போர்க்களத்தின் மறுபுறத்திலிருந்து சரணடையும் நோக்கில் பாதுகாப்புப்படையின் பக்கம் வெள்ளைக் கொடி ஏந்திவரும் விடுதலைப் புலிகளைச் சரணடைய விட வேண்டாமெனவும் அவர்களைச் சுடுமாறும் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாக ஒரு ஊடகவியலாளர் மூலம் தான் அறியவந்ததாக சரத் பொன்சேகா கூறியதாகப் பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேட்டி தொடர்பாக பிரதிவாதியின் சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி நேற்றைய தினம் முதலாவது சாட்சியிடம் மேலும் குறுக்கு விசாரணை செய்தார்.
கேள்வி: நீங்கள் எத்தனையாம் வகுப்பு வரை படித்துள்ளீர்கள்?
பதில்: உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளேன்.
கேள்வி: எந்த மொழியில் என்னென்ன பாடங்களில் சித்தி பெற்றுள்ளீர்கள்?
பதில்: ஆங்கில மொழியில், ஆங்கில இலக்கியம், பொருளியல் ஆகிய பாடங்களில் சித்தி பெற்றுள்ளேன்.
கேள்வி: உங்கள் கல்வித்தகைமையின் படி சிறந்த ஊடகவியலாளரான பத்திரிகை ஆசிரியரான நீங்கள் (குடணிணிt) "சுடப்பட்டது' என்ற வார்த்தையையும் (ஓடிடூடூ) "கொல்' என்ற வார்த்தையையும் ஒரேவிதமாக அர்த்தப்படுத்துகிறீர்களா?
பதில்: யுத்த காலகட்டத்தில் அவ்வாறான சொற்பிரயோகங்களை ஒரே விதமாகத்தான் ஊடகங்கள் அர்த்தப்படுத்துகின்றன.
கேள்வி: ஊடகங்களா அல்லது உங்கள் பத்திரிகை மட்டுமா அவ்வாறு பயன்படுத்துவது?
பதில்: பொதுவாக ஊடகங்கள் அப்படித்தான் பயன்படுத்துகின்றன. அதன்படியே நானும் பயன்படுத்தினேன்.
கேள்வி: எணிtச் Oணூஞீஞுணூ குடணிணிt எணிtச் Oணூஞீஞுணூ டுடிடூடூ. இப்படி நீங்கள் பயன்படுத்தினீர்கள். இரண்டுக்கும் ஒரே அர்த்தம் என்று தானா நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: ஆம்,
கேள்வி: அப்படித்தானா நீங்கள் எப்போதும் எழுதுவீர்கள்?
பதில்: அவ்வாறான செய்திகளை அவ்வாறான தருணத்தில் அப்படித்தான் எழுதுவேன்.
கேள்வி: ஆங்கில இலக்கணத்தில் இப்படியான வரைவிலக்கணம் இருக்கின்றதா?
பதில்: அது பற்றி எதுவும் தெரியாது, ஆனால் சந்தர்ப்பத்துக்கேற்ற விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்.
கேள்வி: இந்தப் பேட்டி தொடர்பாக உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ள நால்வரிடம் தொடர்பு கொண்ட போதும் அது சாத்தியப்படவில்லை என்று கடந்த தடவை சாட்சியமளிக்கும் போது கூறினீர்கள்?
பதில்: ஆம், இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, ஆகியோருடன் தொடர்புகொண்டேன். அவர்களிடமிருந்து எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது போனது.
கேள்வி: பசில் ராஜபக்ஷ என்ன சொன்னார்?
பதில்: தாம் அது பற்றி அறிய வந்ததாகவும் உறுதிப்படுத்த முடியாதெனவும் பதிலளித்தார்.
கேள்வி: அவர் அப்படிச் சொல்ல வில்லை என்று நிராகரித்திருப்பதாக நான் கூறுகின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதிச் சொலிசிற்றர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார அதனை ஆட்சேபித்து பிரதிவாதியின் சட்டத்தரணி தேவையற்ற கேள்விகளைக் கேட்டு நீதிமன்றத்தின் காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பதாகக் குற்றச்சாட்டு சுமத்தினார்.
இந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது.
கேள்வி: உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் அடிக்கடி முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறீர்கள். ஏன் இப்படி பொய் சொல்ல முற்படுகிறீர்கள்?
பதில்: நான் பொய்ச் சாட்சியம் அளிக்க முற்படவில்லை. சில சம்பவங்கள் மறந்து போயிருப்பதால் ஞாபகத்துக்கு வரும்போது தவறைத் திருத்திக் கொள்கின்றேன்.
கேள்வி: நீங்கள் கடந்த தடவை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்துவார் என்பதாலேயே அவரிடம் முன் கூட்டியே உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை என்று கூறினீர்கள்?
பதில்: ஆம், ஆரம்பத்தில் அவருடன் தொடர்புகொள்ள முயன்றபோதிலும் பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
கேள்வி: பாதுகாப்புச் செயலாளர் மீது இப்படிக் குற்றச்சாட்டு சுமத்துவது நியாயமானதா?
பதில்: இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை வைத்தே இப்படி நடந்து கொள்ள நேர்ந்தது.
கேள்வி: ஜெனரல் சரத் பொன்சேகா தனது பேட்டியில் ஒரு ஊடகவியலாளரிடம் அறியவந்ததாகக் கூறினாரா? பல ஊடகவியலாளர்களிடம் என்று கூறினாரா?
பதில்: முதலில் பன்மையில் கூறிய அவர் பின்னர் ஒருவர் என்று கூறினார்.
கேள்வி: கட்டுரையில் கடைசிப் பந்தியை எழுதும் போது ஒரு ஊடகவியலாளர் என்பதை அறிந்திருந்தீர்களா?
பதில்: ஆம் அறிந்திருந்தேன்.
கேள்வி: ஏன் ஒருவர் என்று கூறாமல் பலர் என்று எழுதினீர்கள்?
பதில்: மௌனம்.
கேள்வி: இதன் மூலம் நீங்கள் வாசகர்களைத் தவறாக வழிநடத்த முற்படுவதாகக் கொள்ள முடியாதா?
பதில்: அவ்வாறு கருத முடியாது. செய்திகள், கட்டுரைகள் எழுதும் போது ஊடகங்களில் சில வேளை தவறுகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாது.
கேள்வி: கோதாபய ராஜபக்ஷவிடம் கேட்டால் அலுவலகம் தாக்கப்படும் என்று நம்பிய நீங்கள் ஏன் இறுதி நேரத்தில் அவருடன் தொடர்பு கொள்ள முயன்றீர்கள்?
பதில்: நான் பாதுகாப்புத் தரப்பால் தாக்கப்படும் என்றே அஞ்சுவதாகவே கூறனேன். கோதாபயவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
கேள்வி: நீங்கள் இந்த நீதிமன்றத்தில் பலதடவை கோதாபய ராஜபக்ஷவால் தாக்கப்படலாம் என்று அச்சம் கொண்டதாகக் கூறியதை இப்போது மறுக்கிறீர்கள்?
பதில்: நான் அப்படிக் கூறவில்லை. அப்படிக் கூறப்பட்டிருந்தால் அது தவறுதலாக நடந்ததாகவே இருக்கும்.
கேள்வி: நீங்கள் பேட்டியை எழுதி முடித்ததும் கையெழுத்திட்டீர்களா?
(இவ்வேளையில் நீதிபதி வராவௌ கேட்கும் கேள்விக்குப் பதிலளியுங்கள் வேறுபக்கம் திருப்ப முயற்சிக்க வேண்டாமென சாட்சியை எச்சரித்தார்.)
கேள்வி: கடந்த வாரம் கடைசியாகச் சாட்சியமளித்தபோது பத்திரிகை ஆசிரிய சங்க விருதுக்கு விண்ணப்பித்ததாகக் கூறினீர்கள்?
பதில்: ஆம்
கேள்வி: நீங்கள் அந்த விண்ணப்பத்துடன் தெளிவுபடுத்தல், விளக்கம் இரண்டையும் இணைத்தாகக் கூறினீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: அந்த சரத் பொன்சேகாவின் தெளிவுபடுத்தல் விடயத்தை விண்ணப்பத்தில் உரிய கூட்டில் குறிப்பிட்டீர்களா? என்று தான் கேட்டேன்?
பதில்: ஆம்.
கேள்வி: பின்னர் விண்ணப்பத்துடன் இணைத்ததாகக் கூறினீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: விண்ணப்பத்தைத் தயார்படுத்தும் போது விபரமாகத் தயார்படுத்த நினைக்கவில்லையா?
பதில்: அவ்வாறு தேவைப்படும் என நான் நினைக்கவில்லை
கேள்வி: நீங்கள் கேள்விகளுக்கு யோசிக்காமல் பதிலளித்துவிட்டுப் பின்னர் தவறெனக் காணும் போது திருத்த முற்படுகிறீர்கள்?
பதில்: நான் எனது நிலைப்பாட்டிலிருந்து தான் பதிலளிக்கின்றேன்.
கேள்வி: நீங்கள் 20101102 ஆம் திகதியும் இங்கு சாட்சியமளித்தீர்கள் நினைவிலிருக்கிறதா?
பதில்: ஆம்.
கேள்வி: 20101102 இல் எப்படிப் பதிலளித்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா?
பதில்: பதிலளித்துள்ளேன். ஆனால், விபரம் சரியாக நினைவில்லை.
கேள்வி: அன்றைய சாட்சியத்தின் போது விருது விண்ணப்பம் தொடர்பாக பதிலளித்தீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: விண்ணப்பத்தில் தெளிவுபடுத்தும் பகுதியைப் பூர்த்தி செய்தீர்களா எனக் கேட்டேன்?
பதில்: ஆம்
கேள்வி: அதன்போது அவளின் கதை கட்டுரையை இணைத்ததாகக் கூறினீர்கள்?
பதில்: அந்த வேளையில் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சண்டே லீடர் பத்திரிகையிலிருந்து விருதுக்காக 35 விண்ணப்பங்கள் தயார்படுத்தப்பட்டன. அவற்றில் நானே கையெழுத்திட்டேன்.
கேள்வி: முதலில் உறுதியாகக் கூறினீர்கள் தெளிவுபடுத்தியதாகப் பின்னர் மறுக்கிறீர்கள் தவறான தகவலை ஏன் கூறுகிறீர்கள். நீதிமன்றத்துக்கு நீங்கள் பொய் கூறுகிறீர்கள்?
பதில்: இல்லை. நான் பொய்கூறவில்லை. உண்மையாகவே நடந்துகொண்டேன். 35 விண்ணப்பங்கள் இருப்பதால் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகக் கருதவில்லை.
கேள்வி: நான் மீண்டுமொரு தடவை கேள்வி கேட்டன் “விண்ணப்பத்தில் தெளிவுபடுத்தும் கூடு உள்ளது அதில் புள்ளியிட்டீர்களா? என்று அப்போது கூட்டில் குறியீடுபோட்டு அனுப்பியதாகத்தானே கூறினீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: திரும்பத்திரும்ப நீதிமன்றத்தில் கூறிய அவளின் கதையை இணைத்தமை முற்றுமுழுதான பொய் .
பதில்: அது பொய்யல்ல. நான் பொய் கூற முற்படவில்லை.
கேள்வி: உங்கள் விண்ணப்பம்.
பதில்: ஆம். எனது விண்ணப்பம் தான்.
கேள்வி: நீங்கள் கையெழுத்திட்டு தனிப்பட்டமுறையில் அனுப்பிய விண்ணப்பம்?
பதில்: அதில் உண்மையைக் கூறியுள்ளேன். கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளேன்.
கேள்வி: நீங்கள் நீதிமன்றத்துக்கு உண்மை கூறுகிறீர்கள், நம்புவனவற்றைக் கூறுகிறீர்களா?
பதில்: எனக்குத் தெரிந்த உண்மைகளையே கூறுகின்றேன்.
கேள்வி: இன்று பதிலளித்தவற்றைக் காட்டும் போது அன்று சொன்னவற்றை உண்மை என்கிறீர்களா? பொய் என்கிறீர்களா?
பதில்: மௌனம்.
(இதன் போது பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஆட்சேபனை கிளப்பினார். நீதிபதிகள் அந்த ஆட்சேபனையை நிராகரித்து விட்டனர்.)
கேள்வி: உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது நியாயமானது என்பதை உங்களால் உணர முடியாதா?
பதில்: உண்மையில் இல்லை. இது குறித்து ஊடகவியலாளர் திஸ்ஸ காரியவாசம், பத்திரிகை ஆசிரிய சங்கத்தின் மனிக் டி சில்வாவுக்கும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து கடிதம் எழுதினேன். இன்று வரையில் அதற்குப் பதிலளிக்கப்படவில்லை.
கேள்வி: பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் மத்தியஸ்தர் குழுவின் தீர்ப்பு இறுதியானது என்பதை நீங்கள் அறிவீர்களா?
பதில்: ஆம்
கேள்வி: அந்த விதியை நீங்கள் மீறியுள்ளீர்களா?
பதில்: இல்லை. எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறியவே முனைந்தேன்.
இந்த நிலையில் மாலை 3 மணிக்கு வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக