புதன், 1 டிசம்பர், 2010

நவீன அடிமைகள்

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் முக்கியமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை தேடிச் செல்லும் பெண்கள். வறுமை நிலையில் இருந்து தமது குடும்பத்தை மீட்கவென பல கனவுகளைச் சுமந்து கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குச்செல்கின்றனர். அவர்களில் பலர் தாம் செல்லும் நாடுகளில் தமது எஜமானர்களின் விசுவாசத்துக்கேற்றவாறு பணிசெய்து, தாம் நாடு கடந்து சென்றதன் நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஆனால் சிலர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இன்றும் சிலர் பல்வேறுபட்ட வன்முறைகளுக்கு அங்கு முகம் கொடுக்கின்றனர். அதுவும் இன்று ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கை திரும்பும் பணிப்பெண்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மிகக் குறுகிய காலத்தில் சுமார் 3, 4 மாத காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 3 பணிப்பெண்கள் உடலில் ஆணிகள் அறையப்பட்ட நிலையில் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

கடந்த ஓகஸ்ட்டில் 49 வயதான ஆரியவதி, உடலில் 24 ஆணிகள் அறையப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பினார். அவரின் உடலில் பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு ஆணிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

பின்னர், இம்மாத ஆரம்பத்தில் குவைத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 38 வயதான வீரையா லக்ஷ்மி எனும் பெண்ணின் உடலில் இருந்து சத்திரசிகிச்சை மூலம் 9 ஆணிகள் அகற்றப்பட்டுள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன்னர் குவைத்தில் தான் வேலை செய்தபோது மாதாந்த சம்பளத்தைக் கேடடதற்காக தன்னைத் எஜமானர் துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக லக்ஷ்மி கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஜோர்தானில் வேலை செய்யும் பணிப்பெண்ணொருவரின் வயிற்றில் 6 ஆணிகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோர்தானின் தலைநகர் அம்மானில் இப்பணிப் பெண் பணிபுரிந்துள்ளார்.

இவரது எஜமானியினால் ஆணிகளை விழுங்குமாறு இவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் பணிப்பெண்கள் வருடாந்தம் மத்திய கிழக்குக்குச் செல்கின்றனர். குவைத், சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 8,00,000 பணிப்பெண்கள் பணிபுரிகின்றார்கள். இதைவிட ஏனைய நாடுகளில் வேலை செய்யும் பெண்களையும் உள்ளடக்கினால் சுமு¡ர் ஒரு மில்லியன் பெண்கள் பணிப் பெண்களாகப் பணியாற்றுகின்றார்கள். இது இலங்கைப் பெண்களின் சனத்தொகையில் 10 சதவீதமாகும்.

மத்திய வங்கியின் 2009ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், அந்த ஆண்டில் 3330 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமும் கிடைத்திருக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் வீடுகளில் காணப்படும் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்த முடியாமை, மொழிப் பிரச்சினை, என்பனவற்றால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களில் அனேகர் அங்கு சென்ற சில காலங்களுக்குள்ளேயே சோர்வடைந்து போகின்றனர். அதனால் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற நாடுகளில் பணிபுரிவதற்கு அதிக அனுபவம், பக்குவம் என்பன தேவைப்படுவதாலேயே பணிப்பெண்களாகச் செல்வோரின் வயதெல்லையை 25 ஆக அதிகரிக்க வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திட்டமிட்டு வருகின்றது. சவுதி அரேபியாவில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா தனது வயதை அதிகரித்துக் காட்டி போலிக் கடவுச் சீட்டைச் சமர்ப்பித்து வெளிநாடு சென்றார். அவர் மீது¡ன குற்றம் சுமத்தப்பட்ட வேளையில் அவருக்கு 17 வயதுதான் நிரம்பியிருந்தது என்ற உண்மையை நிரூபிக்க அவரால் முடியாவில்லை. தன் விடுதலைக்காக சவுதி மன்னரின் கருணைக்காக ஏங்கியிருக்கிறார் ரிஸானா. இந்நிலையில், நவீன காலத்தில் அடிமை வாழ்வை அனுபவித்து வரும் லட்சோபலட்சம் அபலைகளின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற அவர்களின் வேலைச் சூழலை ஆரோக்கியமானதாக்க, அனைத்துத் தரப்பிலிருந்தும் நடவடிக்கைகள், விழிப்புணர்வுச் செயற்பாடுகள் அவசியப்படுகின்றன.

நாட்டுக்கு அதிகளவில் அந்நிய செலவணியை ஈட்டித்தரும் இவ்வகையில் தமதுவேலைக்குத் தேவைப்படும் வயதெல்லை, பயிற்சிகள் அனுபவம் என்பவற்றைப் பெண்கள் பெறுவதை ஊர்ஜிதப்படுத்தும் நடவடிக்கைகளை வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமல்ல வேலைசெய்யும் சூழலில் தாம் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு அங்குள்ள இலங்கைத் தூதரங்களால் பணிப் பெண்களின் மொழிதெரிந்த சட்டத்தரணிகள் பணிக்கமர்த்தப்படுவது முறைப்பாடுகள் நியாயமான முறையில் விசாரிக்கப்படுவதற்கும் வழி வகுப்பதோடு பணிப்பெண் தனது தரப்பு நியாயத்தை சரியான முறையில் எடுத்துக் சொல்லவும் வழி வகுக்கும்.


அனிச்சா
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

  1. இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம் வெளி நாட்டில் வேலை புரிவோரிடமிருந்து சரியாக அதற்கான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறது. கட்டணத்தை கட்டாமல் போவர்களிடமிருந்து கட்டணங்களைப் பிடுங்கவென்றே பன்டாரநாயக்க விமான நிலையத்தில் நான்கைந்து பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஒரு சதத்துக்குக் கூடப் பிரயோசனம் இல்லை என்பது மட்டும் உண்மை.
    அடுத்தது, வெளிநாட்டிலுள்ள எமது தூதரகங்கள்...
    இவர்கள் பொம்மைகள் மட்டுமேயன்றி வேறில்லை. இவர்களால் குறித்த அரசாங்கங்களை, திணைக்களங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.
    உதாரணத்துக்கு, இவ்வருடம் குவைத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்த வருடாந்த சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி. தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும், தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு குறித்த திணத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக சில நிமிடங்களுக்கு முன்னர் குறித்த மைதானத்துக்கு வந்த குவைத் நாட்டு சாதாரன சில இளைஞர்களின் (அவர்கள் எந்த திணைக்களத்தையும் சார்ந்தவர்கள் அல்ல. எமது ஊர்ப்பாசையில் சொல்வதானால் "ரஸ்தியாதுக்காரனுகள்") எதிப்பினால் அவ்வளவு பெரிய நிகழ்ச்சி கைவிடப்பட்டது. எமது நாட்டுத் தூதுவர் ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் தனது வாகனத்தில் ஏறிப் போய்விட்டார். அது அதோடு அமுங்கி விட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
    வெளிநாட்டில் வேலை செய்பவன் என்கிற ஆதங்கத்தில் இதைச் சொல்கிறேன். அறபு நாடுகளில் தினம் தினம் ஆயிரக்கணக்கான எம்மவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனோ, எமது பொருளாதார கஷ்டம் நாம், குடும்பத்தை விட்டு, மனைவி மக்களை விட்டு, ஊரை விட்டு, சொந்தம் சுகம் என எல்லாவற்றையும் தியாகம் செய்து இந்த பாலைவனத்தில் பாடுபடுகிறோம். எங்களுடைய அரசாங்கங்களாலோ தவறாமல் இரண்டு வருடத்துக் கொருமுறை எம்மிடம் கட்டணம் வாங்கிக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது.
    எல்லாம் நம் நாட்டினரது தலை எழுத்து

    பதிலளிநீக்கு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல