இது தொடர்பில் எழிலன் என்பவர் தொடர்பாகவும் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பாகவும் விசாரித்து திருமதி ஆனந்தி என்பவரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரதியையும் இணைத்து கடந்த யூலை 18 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப்பிரிவு பணிப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். ஏறக்குறைய ஒன்றரை மாதங்களின் பின் ஒருநாள் காலை நான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்தபோது எனக்குத் தொலைபேசி மூலமாக அழைத்த ஒருவர் தான் மேஜர் மதியழகன் என தன்னை சுய அறிமுகம் செய்துகொண்டதுடன் எழிலன் என்பவர் தொடர்பாக நான் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் எழிலன் என்பவரும் சுதா மாஸ்டர் என்பவரும் தங்களுடன் உள்ளதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டுமென தான் எழிலனுடைய மனைவிக்கும் சுதா மாஸ்டருடைய தாயாருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறியிருந்தார். திருமதி எழிலனுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்குத் தந்ததுடன் குறிப்பிட்ட இருவரும் உயிருடன் உள்ளதாக இவர்களுக்கு தெரிவிக்குமாறு என்னையும் கேட்டிருந்தார்.
நான் யாழ்ப்பாணம் செல்லும்போது இச்செய்தியை திருமதி எழிலனுக்கும் சுதா மாஸ்டருடைய தயாருக்கும் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் மேஜர் மகியழகன் என்னும் இவர் அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டிருந்தார். திருமதி எழிலன் தனது கணவரை தன்னுடன் கதைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு, மேஜர் மதியழகன் என்று சொல்லப்படும் இவரிடம் கூறுமாறு என்னைக் கேட்டிருந்தார். இதன்பின்னர் மேஜர் மதியழகன் என்று சொல்லப்பட்டவர் தொலைபேசியில் அழைத்தபோது இச்செய்தியை அவருக்குத் தெரிவித்திருந்தேன். அப்போது இது தனக்குப் பிரச்சினையாக முடியும் என்றும் தேவையெனின் தான் அவர்களுடன் கதைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஒருநாள் நான் கோப்பாயில் இருந்தபோது இவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்து தான் சுதா மாஸ்டருடன் இருப்பதாகவும் அவர் என்னுடன் பேச விரும்புவதாகவும் கூறினார். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே இலக்கத்தில் இருந்து அழைத்த ஒருவர் தான் சுதா மாஸ்டர் என்றும் தெரியாத ஓர் இடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறேன் என்றும் தனது மனைவியும் பிள்ளைகளும் ஒவ்வொரு மாதமும் தன்னைப் பார்ப்பதற்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்று கூறியதுடன் தன்னை விடுவிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தனது தாயாருக்கும் வெளிநாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் அறிவிக்குமாறும் என்னைக் கேட்டிருந்தார். மேஜர் மகியழகன் என்று சொல்லப்பட்ட இவருக்குப் பணம் கொடுக்குமாறும் திருமதி எழிலனுக்கோ அல்லது யாருக்குமோ ஒருபோதும் நான் கூறியிருக்கவில்லை.
கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி சண்டிலிப்பாயைச் சேர்ந்த என்.பஞ்சாட்சரலிங்கம் என்னும் ஒருவர் என்னிடம் வந்து தனது மைத்துனர் நடராசா நிதர்சன் என்பவரைப் பற்றிக் கதைத்தார். அப்போது வரணியைச் சேர்ந்த இந் நடராசா நிதர்சன் 2008 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் திகதி ஓமந்தையில் வைத்துப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவித்ததுடன் அவருடைய விபரங்களை அறிவதற்கு எவ்வாறாயினும் உதவுமாறு கேட்டிருந்தார்.
கடந்த நவம்பர் 3 ஆம் திகதி மேஜர் மதியழகன் என்பவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்தபோது நான் இந் நடராசா நிதர்சன் தொடர்பாகக் கேட்டிருந்தேன். 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட மதியழகன் இந் நிதர்சன் வரணியைச் சேர்ந்தவர் என்றும் தங்களிடம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறியதுடன் நிதர்சனுடைய பெற்றோரைத் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி என்னைக் கேட்டிருந்தார். இதனையடுத்து நான் என்னிடம் உதவிகோரிவந்த என்.பஞ்சாட்சரலிங்கம் என்பவருக்கு இவற்றைத் தெரிவித்திருந்தேன். உண்மையில் இதுவே நடந்தது.
கடந்த நவம்பர் 5 ஆம் திகதி பஞ்சாட்சரம் வவுனியாவில் இருந்து எனக்குத் தொலைபேசியில் அழைத்து, மேஜர் மதியழகன் என்று சொல்லப்படுபவரால் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு நபரிடம் தான் ரூபா மூன்றரை இலட்சம் பணம் கொடுத்ததாகவும் அதன்பின் மேஜர் மதியழகன் தன்னை ஏசியதுடன் இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கக்கூடாது எனப் பயமுறுத்தியதுடன் யாழ்ப்பாணம் போகுமாறு கூறியதாகவும் தெரிவித்தார். நான் இது தொடர்பாக உடனடியாக வவுனியாப் பொலிஸாருக்கு தொலைபேசியில் அறிவித்ததுடன், வவுனியாப் பொலிஸுக்குச் சென்று முறைப்பாடு கொடுக்குமாறு பஞ்சாட்சரலிங்கத்தை அறிவுறுத்தியிருந்தேன்.
எனது அறிவுறுத்தலுக்கு அமைய பஞ்சாட்சரலிங்கம் வவுனியாப் பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருந்தார். தொடர்ந்து நானும் இது தொடர்பில் நடந்தவற்றை விளக்கி வவுனியாப் பொலிசிற்கு வாக்குமூலம் அளித்திருந்தேன்கடந்த நவம்பர் 6 ஆம் திகதி இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு ஒரு முறையீட்டுக் கடிதம் அனுப்பியிருந்தேன். ஹன்சாட்டில் உள்ளடக்குவதற்காக அக்கடிதத்தின் பிரதியை இங்கு நான் சமர்ப்பிக்கின்றேன் என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக