இந்தோனேசியாவில் இருந்து ஆண்டுக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சவுதி அரேபியாவிற்கு வேலை தேடிச் செல்கின்றனர். அவர்கள், அங்கு பல்வேறு சித்ரவதைகள் மற்றும் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அந்நாட்டின் மேற்கு நுசா டெங்காரா மாகாணத்தின் டொம்பு என்ற பகுதியைச் சேர்ந்த சுமியடி பின்டி சலன் முஸ்தபா(23) என்ற இளம்பெண், நான்கு மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்றார். அவருக்கு வேலை கொடுத்தவர்கள், அவரது உடலில் பல இடங்களில் இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூடு போட்டுள்ளனர். அவரது முகத்தில் சிகரெட்டால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளனர். இதனால் அவர் மதினாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 8ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவ்விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இந்தோனேசியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கொடுமையைக் கண்டித்து, இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனா அளித்த பேட்டியில் கூறுகையில், "இது குறித்து இந்தோனேசியாவின் கவலையை சவுதி அரேபிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம். சவுதி அரசும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் என, இருதரப்பும் உறுதி பூண்டுள்ளது' என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக